
சேமியா தர்பூசணி கேசரி
தேவை:
சேமியா – ஒரு கப்
தர்பூசணி ஜூஸ் – 2 கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,
திராட்சை – தலா 10.
செய்முறை:
கடாயில் நெய் விட்டு, சேமியா, முந்திரி, திராட்சையைத் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த சில நிமிடங் களில் வறுத்த சேமியாவை சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால், இயற்கையான நிறத்துடன் கூடிய சேமியா, தர்பூசணி கேசரி ரெடி.
பலாப்பழ கேசரி
தேவை:
பலாச்சுளை - 10
நெய் - அரை கப்
முந்திரி பருப்பு - 10
திராட்சை - சிறிதளவு
தண்ணீர் - 2 கப்
ரவை - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
சர்க்கரை - 1 கப்
செய்முறை:
பலாச்சுளைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நறுக்கியதில் பாதியளவு மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும். அதே கடாயில் ரவையை சேர்த்து நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் நெய் சேர்த்து அரைத்த பலாப்பழ விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கிய பலாப்பழத்தை சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்க்கவும். பின்பு ஏலக்காய் தூள், குங்கும பூ கலந்த தண்ணீர், வறுத்த ரவையை சேர்க்கவும். ரவை நன்றாக வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். சர்க்கரை கரைந்த பிறகு நெய், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விடவும். வித்தியாசமான சுவையில் பலாப்பழ கேசரி தயார்.
ஜவ்வரிசி கேசரி
தேவை:
சர்க்கரை - 150 கிராம்
ஜவ்வரிசி - 1/4 கிலோ
குங்குமப்பூ - அரை கிராம்
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
முந்திரி, நெய், திராட்சை - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின் சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
அடுத்து ஜவ்வரிசியை 4 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறியதும் தண்ணீரை வடிகட்டி ஜவ்வரிசியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, அதில் வடிகட்டிய ஜவ்வரிசி போட்டு நன்கு கிளறவேண்டும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறிய பின், சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். அடுத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி,ஊற வைத்த குங்குமப்பூவை சேர்த்து கிளறவேண்டும்.
சர்க்கரை நன்கு திக்கான பதத்திற்கு வரும்போது வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான ஜவ்வரிசி கேசரி தயார்.
பீட்ரூட் கேசரி
தேவை:
சேமியா - ஒரு கப்
பீட்ரூட் - 1
சர்க்கரை - அரை கப்
பால் - ஒன்றரை கப்
நெய் - கால் கப்
முந்திரி - 10
செய்முறை:
பீட்ரூட்டை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி மிக்சியில் அரைத்து சாற்றை வடிகட்டி தனியே வைக்கவும்.
ஒரு கடாயில் ஒன்றரை கப் பால் சேர்த்து கொதிக்க விடவும் அதில் சேமியாவை சேர்த்து வேகவிடவும்.
சேமியா வெந்ததும், அதில் பீட்ரூட் சாறு மற்றும் சர்க்கரை சேர்த்துக்கிளறவும்.
பால் மற்றும் பீட்ரூட் சாறு சேமியாவுடன் கலந்து வற்றியதும், கலவையை இறக்கி வைக்கவும். மற்றொரு சிறிய வாணலியில் நெய் சேர்த்து சூடானதும், முந்திரி சேர்த்து வறுபட்டதும் சேமியாவில் கலந்து விடவும். கலர் ஃபுல் பீட்ரூட் கேசரி தயார்.