
இன்றைக்கு சுவையான மரவள்ளிக்கிழங்கு தோசை மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
மரவள்ளிக்கிழங்கு தோசை செய்ய தேவையான பொருட்கள்.
மரவள்ளிக்கிழங்கு-2 கப்.
தோசை மாவு-2 கப்.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
வெங்காயம்-1.
பச்சை மிளகாய்-1
கருவேப்பிலை-சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
நெய்-தேவையான அளவு.
மரவள்ளிக்கிழங்கு தோசை செய்முறை விளக்கம்.
முதலில் மரவள்ளிக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கு 2 கப் அளவை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதில் தோசைமாவு 2 கப் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, சீரகம் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நெய் 1 தேக்கரண்டி விட்டு தோசை ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு தோசை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்.
சர்க்கரைவள்ளி கிழங்கு-2 கப்.
பட்டாணி-1கப்.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
காருவேப்பிலை-சிறிதளவு.
வரமிளகாய்-2.
வெங்காயம்-1.
தக்காளி-1.
பச்சை மிளகாய்-1.
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா செய்முறை விளக்கம்.
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை நன்றாக கழுவிவிட்டு தோல் நீக்கிய பிறகு சிறிது சிறிதாக நறுக்கி 2 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 1 கப் பட்டாணியை சேர்த்து தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் 1 குழிக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய பச்சை மிளகாய் 1 சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, நறுக்கிய தக்காளி 1, உப்பு தேவையான அளவு சேர்த்து தக்காளி கரைந்து வரும் அளவிற்கு வதக்கவும்.
மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கிவிட்டு வேக வைத்திருக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு, பட்டாணியை சேர்த்து அத்துடன் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக பிரட்டிவிடவும். அவ்வளவுதான் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.