
சிவப்பு தட்டைப்பயறு, வெள்ளை தட்டைப் பயறு இரண்டிலும் அதிக சுவை நிறைந்தது சிவப்பு தட்டப்பயறுதான். அதில் குருமா செய்யும் முறையைப் பற்றி இதில் காண்போம்.
தட்டைப்பயறு குருமா
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சிவப்பு தட்டைப் பயிறு- ஒரு கப்
வெங்காயம் இரண்டு- பொடியாக அரிந்தது
பச்சை மிளகாய் -நான்கு நீளமாக அரிந்தது
தக்காளி- இரண்டு அரிந்தது
இஞ்சி பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்
பிரிஞ்சி இலை -ஒன்று
சோம்பு-2டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி, , மல்லித்தூள் தலா- ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்- மூன்று சிட்டிகை
தேங்காய்த் துருவல் -4 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு--3
பொட்டுக்கடலை -ஒரு டேபிள் ஸ்பூன்
கசகசா -1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கொத்தமல்லித் தழை -அலங்கரிக்க
செய்முறை:
கசகசா, சோம்பு, பொட்டுக்கடலை மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து, அதனுடன் தேங்காய்த் துருவல், முந்திரிப் பருப்பு, அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு நன்றாக வதக்கி வேக வைத்த தட்டைப் பயிரை சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக மசாலா பச்சை வாசனை போய் பதமான வாசனை வரும்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் சேர்த்து கொதிக்கவிட்டு, குருமா நன்றாக சேர்ந்து வரும்போது மல்லித்தழை தூவி இறக்கி, சப்பாத்தி, சாதம் இட்லி, தோசை, இடியாப்பம் அனைத்தோடும் சாப்பிடலாம்.
கருவேப்பிலை தொக்கு
செய்ய தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை சுத்தம் செய்தது-
இரண்டு கைப்பிடி அளவு
ஊறவைத்த புளி- கொட்டைப் பாக்களவு
சிவப்பு மிளகாய் -ஆறு
உப்பு- தேவையான அளவு
குழிக் கரண்டி -எண்ணெய்,
கடுகு, வெந்தயம்- தாளிக்க
மஞ்சள் பொடி -ஒரு சிட்டிகை
செய்முறை:
கறிவேப்பிலையுடன், புளி,மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து, மஞ்சள்பொடி ஒரு சிட்டிகை சேர்த்து அரைத்த விழுதையும் அதில் சேர்த்து நன்றாக தொக்கு பதத்திற்கு வரும் வரை சுருள வதக்கவும். தொக்கு அல்வா பதத்திற்கு வந்ததும் எடுத்து வைத்துவிடவும். இதை தயிர் சாதம், சப்பாத்தி, தோசை அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். வடித்த சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும். வெளியில் வைத்தாலும் கெடாது.