பூசணியை சமைக்கும்போது, விதைகளுடன் கூடிய ஜவ்வு போன்ற பகுதியை தூக்கி எறிந்துவிடாமல், அதை தோசைக்கு அரைக்கும் மாவுடன் சேர்த்து அரைத்தால் மிருதுவான தோசை கிடைக்கும்.
முருங்கைக்கீரையை சமைக்கும்போது, சிறிதளவு சர்க்கரை கலந்து சமைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.
இட்லி மாவில் வாழை இலையின் நடுப்பகுதி துண்டைப் போட்டு வைத்தால் மாவு புளிக்காது. இட்லி மாவின் மேல் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினாலும் மாவு புளிக்காது.
பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.
தேங்காயை தண்ணீரில் நனைத்து பின்னர் உடைத்தால் சரிபாதியாக உடையும்..
இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகி விட்டால், அதனுடன், ஊற வைத்த ரவை சிறிது சேர்த்து விட்டால், இட்லி மிருதுவாகவும், ரவா இட்லி போலவும் இருக்கும்.
சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
கோதுமை அல்வா செய்யும் போது, வெந்நீர் தெளித்து, நெய் கலந்து கிளறினால், அல்வா சுவையும், மணமும் கூடும்.
சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
அதிரச மாவை கலந்த பின், வரும் கட்டியை தட்டை முறுக்கு, தேன்குழல் மாவில் கலந்தால் கர கர, மொறு மொறுவென்று இருக்கும்.
பால் காய்ச்சும் போது சில ஏலக்காய்களைப் போட்டால், பால் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும். மணமாகவும் இருக்கும்.