
கம்பங்களி
தேவை:
கம்பு - 1 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கல் நீக்கி சுத்தம் செய்த கம்பை நன்றாக கழுவி 1 கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு ரவைபோல ஆகும் வரை மிக்ஸியில் 4 அல்லது 5 முறை சுற்றி எடுக்க வேண்டும். மேலும் உடைத்த கம்பை மீதமுள்ள 1 1/2 கப் தண்ணீரையும் சேர்த்து, உப்பு போட்டு குக்கரில் அரிசி வேக வைப்பதை விட சற்று அதிக நேரம் வேகவைக்க 5,6 விசில்கள் விட்டு எடுக்க வேண்டும். குக்கர் சூடு ஆறிய பின்னர் வெளியில் எடுக்க வேண்டும்.
இதற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் குழம்பு வெகு பொருத்தம்.
*****
கருப்பு உளுந்தங்களி:
தேவை:
நன்கு அரைத்த கருப்பு உளுத்தம் பருப்பு மாவு - நான்கு கப்
கருப்பட்டி - தேவையான அளவு
தேங்காய் துருவியது
நல்lலெண்ணெய் - நான்கு ஸ்பூன்
அரிசிமாவு - சிறிதளவு
ஏலக்காய் - நான்கு
வறுத்த பாசி பருப்பு - சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும் .பின்னர் கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டியுடன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிண்டவும். பின்னர் உளுந்து மாவைப் போட்டு நன்றாக கிண்டவும். ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும். சத்து நிறைந்த கருப்பு உளுந்தங்களி ரெடி.
******
வெந்தயக்களி :
தேவை:
புழுங்கல் அரிசி - 300 கிராம்
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்
செய்முறை:
புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுந்து மாவைக் கலக்கவும். தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்த பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். களி போல நன்றாகத் திரண்டு வரும்போது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கவேண்டும். பாத்திரத்தில் கிண்டும்போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம். சுவையான, சத்தான வெந்தயக்களி தயார்.
******
கோதுமை களி
தேவை:
கோதுமை - 2 கப்,
உப்பு - சிறிது,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 3 கப்.
செய்முறை:
முதல் நாள் இரவு ஊறவைத்த கோதுமையை சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்து கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் 2-1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும். அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை விழுதை ஊற்றி கைவிடாமல் கிளறி நன்றாக வேகவிடவும். வெந்ததும் இறக்கி வைக்கவும். சுவையான சத்தான கோதுமை களி ரெடி. சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.