வெயிலுக்கு இதமான 'மணப்பாகு': நாட்டுப்புற சர்பத் ரகசியங்களும் செய்முறைகளும்!

traditional-manappagu-syrup
traditional-manappagu-syrup
Updated on

நாட்டுப்புற சர்பத்துக்கு மணப்பாகு என்று சொல்வர். மணம் மிகுந்த இதனை பனைவெல்லம் சர்க்கரை கொண்டு தயாரிப்பர். பலநாள்‌ கெடாமலிருக்கும். மண்பானை நீர் சேர்த்து இதைக் குடித்து வர பல நோய்களை குணப்படுத்தும். மண் பானையின் வெளிப்பக்கம் முழுவதுமாக வைக்கோல் பிரி அல்லது கயிரை சுற்றி வைத்து அல்லது ஈர துணியால் கவர் செய்து வைத்து பானையில் நீரை நிரப்பினால் சீக்கிரம் குளிர்ச்சி அடைந்து நீண்ட நேரம் குளிர்ச்சியாகவே இருக்கும்.

சில மணப்பாகு தயாரிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிஞ்சாதி மணப்பாகு

தேவையானவை:

பழம்புளி-1/4கி, சர்க்கரை அல்லது பனைவெல்லம்-300கிராம், ஏலக்காய்-20கிராம், சுக்கு-10கிராம், வெள்ளை மிளகு-10கிராம்.

செய்முறை:

புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பனைவெல்லம் அல்லது சர்க்கரை காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். புளிச்சாறையும், பாகையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஏலக்காய், சுக்கு, வெள்ளை மிளகை பொடித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

இதை கலக்கும்போது ஒரு பங்கு பாகுக்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து கலந்து குளிரவைத்து பருக சுவையாக இருக்கும்.

சிஞ்சாதி மணப்பாகு தாகம் தணிப்பதோடு, வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்பு அடை & வேப்பம்பூ சட்னி: நாவூறும் பாரம்பரிய ரெசிபி!
traditional-manappagu-syrup

விளாம்பழ மணப்பாகு

தேவையானவை:

விளாம்பழ சதை-100கிராம், பனைவெல்லம் -200கிராம், ஏலக்காய் -20கிராம், சுக்கு-10கிராம்.

செய்முறை:

விளாம்பழ சதையை நீரில் நன்கு கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பனைவெல்லத்தை பாகு காய்ச்சி அதில் விளாம்பழ சதையை கலந்துகொள்ளவும். பின் அதனுடன் ஏலக்காய்,சுக்கை பொடித்து சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ,ஆற வைத்து சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.

தாகம் தணித்து நாவறட்சி யைப் போக்கும்.நரம்பு தளர்ச்சியை குணமாக்கும். உடலுக்கு வலுவைத்தரும் இந்த விளாம்பழ மணப்பாகு.

மாதுளம்பழ மணப்பாகு

தேவையானவை:

மாதுளம்பழம்-10, பனைவெல்லம்-1/4கி, அல்லது 150கிராம், ஏலக்காய் -10கிராம்.

செய்முறை:

மாதுளை முத்துக்களை இடித்து சாறு எடுத்து கொள்ளவும். பனைவெல்லத்தை பொடித்துக் கொண்டு பாகாக காய்ச்சிக் கொள்ளவும். வடிகட்டிக் கொள்ளவும். பாகையும், சாறையும் கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்.

இந்த மாதுளம்பழ மணப்பாகை தயாரித்து வைத்துக்கொண்டு ஒரு பங்கு பாகுடன் மூன்று பங்கு தண்ணீர் அல்லது இளநீர் சேர்த்து நன்கு கலந்து குளிரவைத்து அருந்த சுவையாக இருக்கும்.

உடலுக்கு புத்துணர்ச்சி தந்து வளரும் குழந்தைகளின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
வெயிட் லாஸ் செய்யணுமா? - இதோ அதிக புரதச்சத்து நிறைந்த கினோவா பாசிப்பருப்பு தோசை!
traditional-manappagu-syrup

இதை முறையில் அத்திப்பழம், நாவல்பழம், இலந்தை, முந்திரிப் பழம் கொண்டு மணப்பாகு தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இவற்றில் விருப்பமான மணப்பாகை இந்த சீசனில் அருந்தி வர உடல் உஷ்ணம், சிறுநீரகம் பிரச்னைகளை தவிர்க்கலாம்.

இவை நான் வழக்கமாக வீட்டில் செய்து கொடுத்து சுவைப்பது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இவற்றை அடிக்கடி உபயோகிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com