
மாலை நேர ஸ்னாக்ஸ்க்கு, அசத்தல் சுவையில் அம்மாயி நெய் பொடி கொழுக்கட்டை மற்றும் காரசாரமான குணுக்கு செய்யலாம் வாங்க…
நெய் பொடி கொழுக்கட்டை ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பச்சரிசி 1 கப்
2.நல்லெண்ணெய் 3 டீஸ்பூன்
3.உப்பு தேவையான அளவு
4.தண்ணீர் தேவையான அளவு
5.இட்லி மிளகாய்ப் பொடி 100 கிராம்
6.தேங்காய்த் துருவல் ¼ கப்
7.நெய் 1 டேபிள் ஸ்பூன்
8.கடுகு 1 டீஸ்பூன்
9.உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
10.சிவப்பு மிளகாய் வற்றல் 2
11.கறிவேப்பிலை ஒரு இணுக்கு
12.பெருங்காயத் தூள் ⅙ டீஸ்பூன்
செய்முறை:
அரிசியை கழுவி தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை வடித்து, ஒரு காட்டன் துணியில் பரப்பி நிழலில் காய வைக்கவும். அரிசி ஒன்றோடொன்று ஒட்டாமல் ஈரத்தன்மை இருக்கும்போதே எடுத்து மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீரில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக பச்சரிசி மாவில் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பின் அதிலிருந்து சிறு நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து, உருண்டை மற்றும் ஒரு விரலால் அழுத்தி தட்டை வடிவங்களாக்கி
ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின் அதன் மீது இட்லி மிளகாய்ப் பொடியை தூவி, நெய் சேர்த்துப் பிரட்டிக்கொள்ளவும். ஒரு தாளிப்புக் கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொழுக்கட்டை மீது கொட்டி, தேங்காய்த் துருவல் தூவி பரிமாறவும். அசத்தல் சுவையில் அம்மாயி நெய் பொடி கொழுக்கட்டை, கேட்டு கேட்டு வாங்கி உண்ணத்தூண்டும்!
காரசார குணுக்கு ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பச்சரிசி 1 கப்
2.துவரம் பருப்பு ½ கப்
3.கடலைப் பருப்பு ½ கப்
4.உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
5.ரவை 2 டீஸ்பூன்
5.சிவப்பு மிளகாய் வற்றல் 5
6.இஞ்சி பேஸ்ட் 1 டீஸ்பூன்
7.தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
8.உப்பு தேவையான அளவு
9.பொடிசா நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை,
மல்லி இலை 1½ டேபிள் ஸ்பூன்
10.பெருங்காயத் தூள் ⅙ டீஸ்பூன்
11.பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்.
செய்முறை:
அரிசி, பருப்பு வகைகள், ரவை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பின் நீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பா மசால் வடை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும். அதனுடன், எண்ணெய் தவிர, மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவிலிருந்து, ஒரே அளவில், சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையான, கிரிஸ்பியான, காரசாரமான குணுக்கு ரெடி.