

ஜவ்வரிசி பகாளாபாத்
தேவை:
ஜவ்வரிசி – அரை கப்,
தயிர் – ஒரு கப்,
காய்ச்சி ஆற வைத்த பால் – அரை கப்,
இஞ்சி – சிறு துண்டு,
பச்சை மிளகாய் – 3,
கடுகு, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு,
கேரட் துருவல் – 4 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அதை வேகவைத்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். பின்னர் கடாயில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதை ஜவ்வரிசி கலவை மீது கொட்டி அலங்கரித்து, கலர்ஃபுல்லாக பரிமாறவும். சுவையான ஜவ்வரிசி பகாளாபாத் ரெடி.
அவல் பகாளாபாத்
தேவை:
பச்சரிசி - ஒரு கப்,
கெட்டி அவல்,
பால் - தலா அரை கப்,
தயிர் - ஒரு கப்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்).
அலங்கரிக்க:
கேரட் துருவல்,
உலர் திராட்சை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை,
உடைத்த முந்திரித் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அவல், பச்சரிசி இரண்டையும் கழுவிக் களைந்து அரை கப் பால், 2 கப் தண்ணீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் உப்பு, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றால் அலங்கரிக்கவும். சுவையான அவல் பகாளாபாத்ரெசிபி ரெடி.
ஓட்ஸ் பகாளாபாத்
தேவை:
ஓட்ஸ், தயிர் – தலா ஒரு கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3,
கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து… இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, கொதி வந்த பின் ஓட்ஸ், உப்பு சேர்த்துக் கிளறி, வேகவிட்டு இறக்கவும். ஆறிய பின் தயிருடன் கலந்து சாப்பிட்டால்…. சூப்பர் சுவையில் ஓட்ஸ் பகாளாபாத் ரெடி.
சேமியா பகாளாபாத்
தேவை:
சேமியா - 100 கிராம்
தயிர் - 50 கிராம்
பால் - 50 மில்லி
இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
திராட்சை, மாதுளை முத்துக்கள் - ஒரு கைப்பிடி
ஆப்பிள் துண்டுகள் - 3 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.
இஞ்சித்துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும். இதை சேமியாவில் சேர்த்துக்கலந்து பால், பழங்களை சேர்த்து நன்றாகக்கிளறி பரிமாறவும். சுவையான சேமியா பகாளாபாத் ரெடி.