

விநாயகர் சதுர்த்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான்! அரிசி மாவால் செய்யப்பட்ட மென்மையான மேல் மாவுக்குள் இனிப்பான தேங்காய்-வெல்லப் பூரணம் வைத்து ஆவியில் வேகவைக்கும் இந்த பாரம்பரிய உணவு, சுவையோடு நம் பண்பாட்டையும் இணைத்திருக்கிறது. ஆனால், கொழுக்கட்டை செய்யும்போது மாவு வெடிப்பது பலருக்கும் இருக்கும் பொதுவான கவலை. அதைத் தவிர்க்க சில எளிய குறிப்புகளைப் பின்பற்றினாலே போதும்!
மாவு வெடிப்பதன் காரணங்கள்:
கொழுக்கட்டை மாவின் பதம் சரியாக இல்லாதது, பூரணத்தை அதிகமாக வைப்பது போன்ற காரணங்களால் ஆவியில் வேகும்போது விரிசல் ஏற்படலாம். இதைத் தவிர்க்க இந்த 5 விஷயங்களை மட்டும் கவனித்தால் போதும்.
கொதிக்கும் தண்ணீரைப் பயன்படுத்துங்கள்
அரிசி மாவில் நன்றாகக்கொதித்த தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறுங்கள். தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகமாக ஊற்றாமல், மாவின் பதத்துக்கு ஏற்ப சேர்ப்பது முக்கியம்.
மாவை மென்மையாகப் பிசையுங்கள்
மாவு கை பொறுக்கும் அளவுக்கு ஆறியதும், சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி நன்றாகப் பிசையுங்கள். மாவில் கட்டிகள் இல்லாமல் மென்மையாகவும் இறுகாமல் தளர்வாக இருக்கவேண்டும்.
மாவு காயாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
பிசைந்த மாவை பயன்படுத்தும் வரை ஈரத்துணியால் மூடி வையுங்கள். திறந்து வைத்தால் விரைவில் காய்ந்து விரிசல் ஏற்படும்.
பூரணத்தை அளவாக வையுங்கள்
மாவை மிகவும் மெல்லியதாகத் தட்டுவதும், அதிக அளவு பூரணம் வைப்பதும் கொழுக்கட்டை வெடிக்கக் காரணமாகும். அதனால் மாவின் ஓரங்களில் போதிய இடம் விட்டு, அளவான பூரணத்தை வைத்து மூடுங்கள்.
மூடும் இடத்தில் விரிசல் இருக்கக் கூடாது
பூரணத்தை வைத்து மூடிய பிறகு, ஓரங்களை மெதுவாக அழுத்தி நன்றாகச் சேர்க்க வேண்டும். மாவில் ஏதேனும் சிறிய விரிசல் இருந்தால், ஆவியில் வேகும்போது அது பெரிதாகலாம். எனவே அதனை சரி செய்ய பூரணம் வைக்கும் முன்பே மாவை எடுத்து நன்கு பிசைந்து பிறகு பூரணத்தை நிரப்புங்கள்.
மாவின் பதத்தை சரி பார்ப்பது எப்படி?
கொழுக்கட்டை செய்யும் முன் ஒரு சிறிய மாவுத் துண்டைத் தட்டி பாருங்கள். ஓரங்களில் விரிசல் இல்லாமல் வந்தால் மாவு சரியான பதத்தில் உள்ளது.
சரியான பதத்தில் மாவு இருந்தால், கொழுக்கட்டை மென்மையாகவும் அழகாகவும் வெடிக்காமலும் வரும்!
இந்த விநாயகர் சதுர்த்தியை இனிமையாக கொண்டாட இதோ சில கொழுக்கட்டை வகைகள் உங்களுக்காக...
கொழுக்கட்டை செய்முறை:
ஓட்ஸ்–பாதாம் வெல்லக் கொழுக்கட்டை
ஓட்ஸின் நார்ச்சத்தும் பாதாமின் சத்துகளும் நிறைந்த இந்த கொழுக்கட்டை சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: ஓட்ஸ் மாவு 1 கப், பாதாம் ¼ கப், வெல்லம் ½ கப், தேங்காய் ¼ கப், எள் 1 மேசைக்கரண்டி, ஏலக்காய்த்தூள் சிறிதளவு.
செய்முறை:
முதலில் பாதாம் மற்றும் ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் பாதாமை பொடியாக நறுக்கி, ஓட்ஸ், வெல்லம், தேங்காய், எள் மற்றும் ஏலக்காய்த்தூளுடன் சேர்த்து பூரணம் தயாரிக்கவும். ஓட்ஸ் மாவை வெந்நீரில் மென்மையாகப் பிசைந்து சிறு கிண்ணங்களாக்கி, பூரணத்தை நிரப்பி நன்றாக மூடவும். இட்லித் தட்டில் வைத்து 10–12 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.
மொறுமொறு அவல் காரக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப், ரவை – ½ கப், நிலக்கடலை – ¼ கப், கேரட் – ½ கப், பச்சைப் பட்டாணி – ¼ கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ½ தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.
ரஸ்க் பொடி ½ கப், மிளகுத்தூள்-½ ஸ்பூன்.
செய்முறை:
அவலைக் கழுவி சிறிது நேரம் ஊறவைத்து வடிக்கவும். நிலக்கடலையை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கேரட், பட்டாணி சேர்த்து வதக்கவும். அவல், ரவை, உப்பு, நிலக்கடலைப் பொடி சேர்த்து கலந்து, சிறிது வெந்நீர் தெளித்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
இட்லித் தட்டில் வைத்து 10–12 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். இறுதியில் மிளகுத்தூள் சேர்த்த ரஸ்க் பொடியில் உருட்டி சிறிது எலுமிச்சைச் சாறு தூவி பரிமாறினால் சுவை அசத்தும்!
சாக்லேட் ஓட்ஸ் கொழுக்கட்டை
சாக்லேட் சுவையுடன் ஆரோக்கியமான ஓட்ஸ் கொழுக்கட்டையை எளிதாகத் தயாரிக்கலாம்.
தேவையான பொருள்கள்: ஓட்ஸ் மாவு 1 கப், கோகோ பவுடர் 1 மேசைக்கரண்டி, தேங்காய் ¼ கப், சாக்லேட் துருவல் ¼ கப், வெல்லம் ½ கப் .
செய்முறை: முதலில் தேங்காய், வெல்லம், சாக்லேட் துருவல் மற்றும் கோகோவை ஒன்றாகச் சேர்த்து பூரணம் தயாரிக்கவும்.
பின்னர் ஓட்ஸை வறுத்து எடுக்கவும். வறுத்த ஒட்ஸை மிக்சியில் போட்டு மாவாக்கவும்.மாவை வெந்நீர் ஊற்றி மென்மையாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாகப் பிரித்து கிண்ணம் போல் செய்யவும். அதன் நடுவில் பூரணத்தை வைத்து நன்றாக மூடி, இட்லித்தட்டில் அடுக்கி 10–12 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். சுவையான சாக்லேட் ஓட்ஸ் கொழுக்கட்டை தயார்.