நாம் யாரிடம் பழகினாலும் நமது சுயமரியாதைக்கு இழுக்கு நேராதபடி பேச்சு அமைவது அவசியம். சுயமரியாதை உணர்வு இல்லாதவர்களால் அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து மதிப்பு தர தெரியாமல் அலட்சியப்படுத்துவார்கள். அவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அலட்சியத்தை ஒதுக்குதல்: சாதாரணமாக உறவு மேம்பட வேண்டும் என்பதற்காக நம் உறவுகளும் நட்புகளும் நம்மை அலட்சியப்படுத்தினால் கூட அதை பொருட்படுத்தாது வலியச் சென்று பழகி, நட்பையும் உறவையும் கட்டிக்காத்து அவர்களின் மனம் கோணாதபடி நடந்து அவர்களையும் மகிழ்வித்து நாமும் மகிழ்ந்து பெருமிதப்படுவது உண்டு.
ஒரு முறை இரு முறை அதுபோல் நடந்து கொண்டால் தவறு இல்லை. ஆனால், தொடர்ந்து நம்மை அலட்சியப்படுத்துபவர்களை துரத்தி துரத்தி ஓடி அவர்களைப் பெருமைப்படுத்துவதும் அதனால் நாம் மகிழ்வதும் தேவையா என்பதை உணர்ந்து பார்த்தால், நம் மீது நமக்கு மரியாதை கெடுவதை உணரலாம்.
நாம் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என்றால் நம்மை அலட்சியப்படுத்துபவர்களை ஒதுக்கி விடலாம். இதனால் இருவருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படாது. நாமும் நம்மை சுயமரியாதையுடன் நடத்திக்கொள்ள இது வழிவகுக்கும்.
கொள்கையில் உறுதி: நம் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, கொள்கைகள் போன்றவற்றில் உறுதியாக இருந்தால் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அதுவே சிறப்பான ஏற்பாட்டை செய்து தரும். மற்றவர்கள் நம் உறுதியைக் கண்டு மரியாதை கொடுக்க ஆரம்பிப்பார்கள். நம்மைப் பார்க்கும்போதே, ‘அவர் கொள்கைப் பிடிப்பு உள்ளவர். அவரிடம் வீணாக வாக்குவாதம் செய்வதில் பயனில்லை’ என்று விவாதம் செய்யாமல் விலகிப் போவார்கள்.
மேலும், தேவையான விஷயங்களை நம் காதில் போடுவதையும் அவர்கள் ஒரு குறிக்கோளாக வைத்திருப்பார்கள். இதனால் நம் சுயமரியாதைக்கு எந்தவிதமான இழுக்கும் ஏற்படாது. நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நம்மை அலட்சியப்படுத்த நினைக்க மாட்டார்கள்.
உள்ளுணர்வை மதியுங்கள்: எல்லாவற்றுக்கும் மேலாக நம் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்க வேண்டும். அதன் பாதையில் சென்றால் நேர்மறை சிந்தனை தலைதூக்கும். நம் பலம் எது, பலவீனம் எது என்பதை அறிந்து நடக்க ஆயத்தமாவோம். இதனால் வெற்றி, நாம் அடைந்த மகிழ்வு போன்றவற்றை நினைத்து மற்றவர்களிடம் அதைப் பகிர்ந்து கொள்வோம். தோல்வி, தூக்கம் போன்றவற்றை அதிகம் பேசாமல் தவிர்ப்போம். இதனால் சுயபச்சாதாபம், எதிர்மறை எண்ணங்கள் தவிடு பொடி ஆகிவிடும். இதனாலும் நம் சுயமரியாதை மேம்படும்.
மேற்கண்ட 3 வழிகளைக் கைக்கொண்டால் யாரும் நம்மை சீண்டிப் பார்க்க விரும்ப மாட்டார்கள். மேலும், எத்தனை சோதனைகள் வந்தாலும் ஏதாவது சாதனை செய்வதில் நம்மை நாம் உயர்த்திக்கொள்ள வேண்டும். எதையாவது சாதித்துக் கொண்டே இருந்தோமானால் நம் மீது நமக்கே சுயமரியாதை ஏற்படும். இது மற்றவர்களையும் தொற்றும். ஆதலால் இந்த மூன்று வழிகளையும் பின்பற்றி சுயமரியாதையுடன் வாழ்வோம்!