தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. உலகில் நடக்கும் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் நாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும். இன்றைய நிலையில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாத ஒருவர் கூட இல்லை என்று உறுதியாகக் கூறலாம். அந்த அளவிற்கு அனைவரும் ஏதாவது ஒரு சமூக வலைதளத்தில் தங்களது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், சிலர் இந்த சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி பல மணி நேரம் அதிலேயே செலவழிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் சமூக வலைதளங்களை மணிக்கணக்கில் பயன்படுத்துவார்கள். இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற குழப்பம் உங்களுக்கு உள்ளதா? கீழ்க்கண்ட ஐந்து கட்டளைகளை நீங்கள் சரியாகக் கடைப்பிடித்தால் போதும், உங்கள் குழந்தைகளை சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இருந்து மீட்டெடுக்கலாம்.
1. குழந்தைகளுக்கு பக்கபலமாக இருங்கள்: உங்கள் பிள்ளைகளுக்கு எந்தவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதைத் தீர்ப்பதற்கு நீங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். என்ன பிரச்னை உண்டானாலும் உங்களிடம் உதவி கேட்கலாம் என்ற நம்பிக்கையை நீங்கள் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
2. முன்னுதாரணமாக இருக்க வேண்டும்: உங்கள் குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றால் முதலில் அதை உங்களிடமிருந்து துவங்க வேண்டும். உதாரணத்திற்கு, உணவு உட்கொள்ளும்போது உங்களது போனை அனைத்து விடுவதும், நீங்கள் எவ்வாறு மொபைல் போனை குறைவாக பயன்படுத்துகிறீர்களா அதுபோலவே உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பதும் ஒரு நல்ல பழக்கமாக அமையும்.
3. சமூக வலைதளங்களுக்கு எல்லை வகுக்க வேண்டும்: சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு என சில குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துமாறு செய்யலாம். முதலில் அவர்கள் இதை கடினமாக உணர்ந்தாலும் போகப்போக இதன் நன்மையை புரிந்து கொண்டு அவர்களும் இதற்கு பழக்கப்பட்டு விடுவார்கள்.
4. சமூக வலைதளங்களைப் பற்றி பேசுங்கள்: பிள்ளைகளிடம் சமூக வலைதளங்களைப் பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மை, தீமைகளைப் பற்றியும் பேச வேண்டும். எதனால் அவர்களுக்கு சமூக வலைதளங்களை பிடிக்கிறது எனவும், அதனால் அவர்கள் என்ன விதமான உணர்வை பெறுகிறார்கள் என்பதையும் பேசி, அவர்களை உணர வைக்க வேண்டும்.
5. சமூக வலைதள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்: சில சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு இருந்தால்தான் அதனைப் பயன்படுத்த முடியும். எனவே, உங்கள் பிள்ளைகள் அவர்களது வயதுக்கு ஏற்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.