

ஒருவருக்கு ஓய்வு காலம் என்பது வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் அல்ல; அது புதிய தொடக்கத்தின் இனிய பகுதி. அந்த காலத்தை எப்படி அர்த்தமுள்ளதாக்குவது என்பதைக் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக, ஒரு வீட்டில் ஆண் ஒருவர் ஓய்வு பெற்றால், அவர் வழக்கம்போல் செய்தித்தாள் படித்தும், நண்பர்களுடன் அரட்டை அடித்தும் காலத்தைச் செலவழிப்பார். அவருக்கு ஓய்வு என்பது வேலைப்பளுவிலிருந்து விடுபடும் நேரம்.
ஆனால் அதே வீட்டில் ஒரு பெண் ஓய்வு பெற்றால், அது அவருடைய அலுவல் பணியிலிருந்து மட்டுமே ஓய்வு பெறுவதாக இருக்கும். அடுத்த நாளே அவருக்கான வீட்டுப் பொறுப்புகள் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும்.
பிள்ளைகளின் வளர்ப்பு, கல்வி, திருமணம் என்று வாழ்க்கை முழுவதும் அலைந்து திரிந்த பிறகு, “அப்பாடா!” என்று அமைதியாக அமரவேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் கூட, பேரன்–பேத்திகளின் பராமரிப்பு போன்ற பொறுப்புகள் அவர்களைத் தொடர்ந்து சேர்ந்து கொள்கின்றன. அவை எல்லாம் அன்பின் வெளிப்பாடுகளாக இருந்தாலும், தக்க வயதில் தங்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நமக்கென சில நாட்களையும் நேரங்களையும் உருவாக்கிக் கொள்வது அவசியம். அதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.
வேலைக்குச் சென்ற காலங்களில் கணவன்–மனைவி இருவருக்கும் அமைதியாக அமர்ந்து பேச நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். இந்த ஓய்வு காலத்தில் தினமும் காலை, மாலை வேளைகளில் அமைதியாக அமர்ந்து மனம் திறந்து பேசலாம். அந்த உரையாடல்கள் உறவை மேலும் வலுப்படுத்தும்.
மாதத்திற்கு ஒருமுறை உறவினரைச் சந்திக்க திட்டமிடலாம். நீண்ட நாட்களாகப் பார்க்காத சொந்தங்களைச் சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும்.
உங்களுக்கு பிடித்த தோழிகளுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பில் இருக்கலாம். மேலும், தோழிகள் அனைவரும் சேர்ந்து ஒரு நாள் வெளியே சென்றுவர திட்டமிடுங்கள். பள்ளி, கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளை பகிர்ந்து சிரித்துப்பேசலாம்.
மகிழ்ச்சிக்கு வயது என்பது ஒருபோதும் தடையாகாது என்பதை உணர வேண்டும். உங்களுக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். புத்தகம் படிக்கலாம், நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம், சிறிய ஷாப்பிங் செல்லலாம். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடலாம்.
“எனக்கு வயது ஆகிவிட்டது” என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துணவுகளை உட்கொள்ளுங்கள். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேவையான மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வதும் அவசியம்.
குடும்பத்தினருக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாதவாறு, நமக்கென நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக மாறும்.
நம் வயதையொத்த சகோதரிகளுடன் மனம் திறந்து பேசி, அனுபவங்களைப் பகிர்ந்து, சிரித்துப் மகிழ்ந்து வாழ்வதே உண்மையான ஓய்வு வாழ்க்கை.
ஓய்வு என்பது முடிவு அல்ல; அது நமக்கான நேரம். அந்த நேரத்தை அன்புடன் அணைத்து, ஆரோக்கியத்துடன், உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.