நீண்ட தொலைவு பயணம் செல்வதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. முக்கியமாக, மனதிற்கு அன்றாடப் பணிகளிலிருந்து ஓய்வும், மன அழுத்தத்தை குறைக்கவும் இதுபோன்ற நீண்ட தூரப் பயணங்கள் பெரும் உதவி புரிகின்றன. நீண்ட தொலைவு பயணத்தால் கிடைக்கும் சில நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
1. மன அழுத்தம் குறைகிறது: இயற்கை சூழலில் ஏழில் மிகுந்த காட்சிகளைக் கண்டு செல்லும்பொழுது கார்டிசோல் அளவு குறைகிறது. இந்த கார்டிசோல் அளவை குறைப்பதால் மன அழுத்தத்தைக் குறைக்க முடிகிறது. இதனால் மனம் அமைதி பெறும். மனம் அமைதி பெற்றால் எங்கும் எதிலும் ஒரு சந்தோஷமான உணர்வு ஏற்படுகிறது.
2. நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது: வாகனம் ஓட்டுவது அதுவும் நீண்ட தூரப் பயணம் செல்லும்பொழுது நம் கவனம் ஒரே இடத்தில் இருக்கும். இதன் மூலம் நம்முடைய நினைவாற்றலை அதிகரிக்க முடியும். அத்துடன் ஐம்புலன்களும் கவனத்துடன் செயல்படவும் உதவும்.
3. புது யோசனைகள் உதயமாகும்: நீண்ட தூர பயணம் செல்லும்பொழுது நம் மனம் அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ரிலாக்ஸாக இருப்பதால் புதுப்புது யோசனைகள், ஆக்கபூர்வமான எண்ணங்கள் மனதில் தோன்றும். இதன் மூலம் நம்முள் இருக்கும் படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும். எத்தனை கடுமை நிறைந்த வாழ்க்கையானாலும் அதனை கடந்து செல்லக்கூடிய தைரியத்தையும் கொடுக்கும்.
4. உற்சாகம் தரும்: நமக்குப் பிடித்த பாடல்களை நீண்ட தூரம் பயணம் செல்லும் பொழுது கேட்டுக்கொண்டே செல்வதால் நமக்கு மனதில் உற்சாகம் ஏற்படுவதுடன் புத்துணர்வும் தோன்றும். தனிமை தரும் இனிமையை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். வழக்கமான சத்தம் மற்றும் கவனச் சிதறல்களில் இருந்து விலகி இருக்க உதவும். அத்துடன் ஒரு சுதந்திரமான உணர்வும் ஏற்படும். சிறகு முளைத்த சுதந்திரப் பறவையாக மனம் துள்ளாட்டம் போடும்.
5. பிணைப்பு உண்டாகும்: நம் மனதுக்குப் பிடித்தவருடன் நீண்ட தூரம் பயணம் செய்யும்பொழுது நம் உறவு வலுப்படும். பிணைப்பு அதிகமாகும். தனிமையில் நிறைய பேசிக்கொள்ள நேரம் கிடைப்பதால் உற்சாகமாக உணர்வோம். இது நம் வாழ்க்கை வளம் பெற உதவும். அன்றாட அலுவலகப் பணிச்சுமை, கடமைகள், கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி மனம் புத்துணர்வுடன் இருக்கும்.
6. இயற்கையோடு இணைந்த வாழ்வு: நீண்ட தூரப் பயணம் செய்வதால் மனம் உற்சாகம் பெறுவதுடன், தனிமையை விரும்பும் மனிதர்களுக்கு சொர்க்கமாகவும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை அனுபவிப்பதில் சந்தோஷமும், திருப்தியும் கிடைக்கும். முக்கியமாக நம் மன அழுத்தத்தைக் குறைத்து மனதை லேசாக்கும் பயணங்களை வருடத்திற்கு இரண்டு முறையாவது மேற்கொண்டு புத்துணர்ச்சி பெறலாம்.