உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்த மருந்து உண்டு. ஆனால், மனதில் ஏற்படும் ‘சந்தேகம்’ என்னும் நோய் தீர்க்க முடியாத ஒன்று. ஒரு முறை சந்தேகம் வந்து விட்டால் அது பல உறவுகளுக்கு கொள்ளிக்கட்டையாக அமைந்து விடும். நீங்கள் நூறு விழுக்காடு அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கும்!
இது காதலுக்கும், நட்புக்கும், வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி, தொழிலாளி உறவுகளுக்கும் பொருந்தும். எப்போதும் எல்லோரிடமும் நூறு விழுக்காடு அன்பைக் காட்டுங்கள். சந்தேகம் என்ற ஒன்று வந்து விட்டால் நிம்மதி போய்விடும், சந்தேகம் இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்காது.
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையனும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்தக் குட்டிப் பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தன. அந்தப் பையன் சொன்னான், ''என்னிடம் இருக்கின்ற பொம்மைகள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன். பதிலாக நீ வைத்திருக்கிற இனிப்புகள் எல்லாவற்றையும் எனக்குத் தருகிறயா?” என்று கேட்டான்.
குட்டிப் பெண்ணும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தாள். அந்தப் பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மைகளை ஒளித்து வைத்து விட்டு, அந்தக் குட்டிப் பெண்ணிடம் இனிப்புகளைக் கேட்டான். குட்டிப் பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிக்கொண்டாள்.
அன்று இரவு அந்தக் குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்தப் பையனுக்கு உறக்கமே வரவில்லை. ‘அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் கொடுத்திருப்பாளா? இல்லை, நாம் ஒளித்து வைத்ததுபோல் அவளும் நம்மை ஏமாற்றி இருப்பாளா?’ என்று நினைத்துக்கொண்டே உறக்கம் இல்லாமல் அவதியுற்றான்.
சந்தேகம் ஒருவர் மனதை பற்றிக்கொண்டால், அது மன நோயாக மாறிவிடுகிறது. சந்தேக மனப்பான்மை கொண்டவர்கள், தன்னால் அதைச் செய்ய முடியமா? இதைச் செய்ய முடியுமா? என்று சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ‘ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வழியாக வந்தால், மகிழ்ச்சி பின் வாசல் வழியாகப் போய்விடும்’ என்பார்கள். இன்று சந்தேகம் என்ற மனநோய் சமூகத்தில் நிலவி வரும் ஒரு நச்சுக் கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்று விடும்.