மகள்கள் எப்பொழுதுமே தங்கள் தந்தையை சிறந்த மனிதர்களாகத்தான் பார்க்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வாழ்நாள் முழுவதும், திருமணத்திற்குப் பிறகும் கூட தனது தந்தையின் குணங்களை தனது கணவனிடம் காண முயல்கிறாள் பெண். தந்தை என்பவரும் தனது மகளை இளவரசி போல் நடத்துவதும், ஸ்பெஷல் கவனம் செலுத்துவதும், தனது தாய்க்கு நிகராகக் கருதுவதும், பாதுகாப்பதும்தான் இதற்கான காரணமாக இருக்க முடியும். ஆனால், சில நேரங்களில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே தோன்றும் கருத்து வேறுபாடுகள் உறவில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தலாம். அதைத் தவிர்க்க சில யோசனைகளை இந்த பதிவில் காண்போம்.
கருத்து வேறுபாடு: மகளுக்கும் தந்தைக்கும் இடையில் உருவாகும் கருத்து வேறுபாடுகளுக்கு தந்தையை மட்டும் குறை கூறுவது தவறாகும். அக்கறையோடு அவர் செய்யும் செயல்கள் மகள்களின் பார்வையில் தவறாகத் தோன்றலாம். நிதானத்துடன் யோசிக்க, தந்தையின் அக்கறை புரியும்.
விமர்சிப்பது: தந்தை என்பவர் நம் மீது கொண்ட அக்கறை காரணமாக நம் ஒவ்வொரு செயலையும் விமர்சிப்பவராக இருக்கலாம். அது நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அது சில சமயம் மகள்களின் பார்வையில் தவறாகத் தெரிந்தாலும் அவர்களை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எதையும் தந்தையின் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பது அவசியம்.
நேரம் செலவழியுங்கள்: தந்தைக்கும் மகளுக்குமான உறவு அற்புதமானது. அன்பு ஆழமானது. ஒரு நாளில் சில மணி நேரமாவது மனம் விட்டுப் பேசி, தந்தையுடன் செலவழியுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகள், ஆசைகள், கனவுகள் ஆகியவற்றை வெளிப்படையாகச் சொல்லுங்கள். தந்தை கூறுவதையும் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளுங்கள். அவரது அனுபவங்கள், கடந்து வந்த பாதைகள், சந்தித்த சவால்கள் ஆகியவை உங்களுக்கு சிறந்த பாடமாக இருக்கும். இது தந்தைக்கும் மகளுக்கும் இடையே பாசப் பிணைப்பை வலுப்படுத்த உதவும்.
அன்பை வெளிப்படுத்துங்கள்: சில இடங்களில் அப்பாக்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள். மனதிற்குள் நிறைந்திருக்கும் அன்பை வெளிப்படுத்தத் தயங்கக் கூடாது. அப்பொழுதுதான் அப்பா - மகள் உறவு சிறப்பாக இருக்கும். மகள்களும் தந்தையின் பாசத்தை உணர்ந்து அன்பு காட்ட வேண்டும். அன்பான அப்பா தனது மகளுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அவளுக்கு பக்க பலமாக நிற்பதால் தந்தையைப் பற்றி பெருமையாக உணருவாள்.
முன்மாதிரியாகத் திகழ்வது: தந்தை என்பவர் மகளுக்கு ஒரு பாதுகாப்பையும், நம்பிக்கையையும் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இது அன்பின் அடித்தளத்தை வலுவாக அமைக்கின்றது. தந்தையுடனான பிணைப்பு மகளுக்கு தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் வளர்க்க உதவுகிறது. கடினமான சூழ்நிலைகளில் தனக்கு வழிகாட்ட ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை மகளுக்கு எந்த சூழ்நிலைகளையும் சமாளிக்கும் திறனை வழங்குகிறது.
வலுவான தொடர்பு திறன்களை வளர்க்க: மகளுடன் தந்தை மனம் விட்டு உரையாடுவதும், அவர்களை தங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்த ஊக்குவிப்பதாலும் வலுவான தொடர்புத் திறன்களை வளர்க்க உதவுகிறது. மகள்கள் தங்களுடைய தேவைகளை வெளிப்படையாக உணர்த்தவும், ஆரோக்கியமான மனநிலையுடன் இருக்கவும் உதவுகிறது.
தந்தை - மகள் உறவை வலுப்படுத்த தந்தைகள் தரும் சுதந்திரமும், நம்பிக்கையும் மகள்களை தன்னம்பிக்கையுடனும், தங்கள் திறமைகளை அடையாளம் காணவும், வழி நடத்தவும் உதவுகிறது. பொதுவாக, பெண்கள் தங்கள் தந்தையை ஒரு சிறந்த நண்பராகவும், பாதுகாப்பாளராகவும் பார்க்கிறார்கள்.