

பலருக்கும் விமானத்தில் பறக்கும் பொழுது சில குறிப்பிட்ட பயங்கள் மற்றும் சந்தேகங்கள் இருக்கும். விமானம் உயர பறக்கும் பொழுது யாராவது கதவை திறந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் சிலருக்கு இருக்கும். அதேபோல் என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைப்பவர்களும் உண்டு.
விமானம் பறக்கும்போது கதவை திறக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. விமானம் நடுவானில் பறக்கும்போது, அதிக காற்றழுத்தம் (Cabin Pressure) காரணமாக கதவுகளைத் திறக்கவே முடியாது. கதவுகள் 'பிளக்' (Plug) வடிவில் வடிவமைக்கப் பட்டுள்ளதால் உள்ளே இருக்கும் காற்று அழுத்தம் கதவை வெளிப்பக்கமாகத் தள்ளி, மிகவும் பாதுகாப்பாக மூடி வைத்திருக்கும்.
அழுத்த வேறுபாடு:
விமானத்தின் உள்ளே இருக்கும் காற்றழுத்தம், வெளியே இருக்கும் காற்றழுத்தத்தை விட மிக அதிகம். இதனால் கதவைத் திறக்க முயலும் எந்த மனிதனின் விசையையும் விட, கதவை மூடி வைக்கும் அழுத்தம் பல மடங்கு அதிகம்.
வடிவமைப்பு:
விமானக் கதவுகள் உள்ளிருந்து பூட்டப்படும் வகையில், அதாவது 'பிளக்' முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கதவை வெளிப்பக்கமாக திறக்க முயன்றால், அது இன்னும் இறுக்கமாக மூடிக்கொள்ளும்.
தானியங்கி பூட்டு:
பெரும்பாலான நவீன விமானங்கள், ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் சென்றவுடன் கதவுகள் தானாகவே பூட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நடுவானில் கதவைத் திறக்க முயற்சிப்பது சாத்தியமற்றது மட்டுமல்ல, அது கடும் சட்டவிரோத நடவடிக்கையும் ஆகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள். விமானம் தரையில் இருக்கும்போது அல்லது மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும்போது மட்டுமே கதவுகளை திறக்க முடியும்.
என்ஜின் பழுதானால் என்ன செய்வது?
விமானம் உயரப் பறந்து கொண்டிருக்கும்பொழுது என்ஜினில் பழுது ஏற்பட்டால் என்னாகுமோ என்று கவலைப்படுபவர்கள் உண்டு. என்ஜினில் பழுது ஏற்பட்டால் அதற்காக மாற்று என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை. சில விமானங்களில் 4 எஞ்சின்கள் வரை இருக்கும். அவற்றில் ஒன்று அவசர நேர பயன்பாட்டிற்காக எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
மூச்சுத் திணறல் பற்றிய பயம்:
உயரத்தில் பறக்கிறோமே மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுபவர்கள் உண்டு. இதற்கும் கவலைப்படத் தேவையில்லை. விமானத்திற்குள் காற்றழுத்தம் பராமரிக்கும் கருவி உண்டு. சிறப்பான காற்றழுத்த பராமரிப்பு நிலையிலும் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் ஆக்சிஜன் சிஸ்டம் மூலம் சுவாசம் தரப்படும். அப்படியும் ஆபத்தான சூழல் என்றால் விமானியால் 15 நிமிடங்களுக்குள் விமானத்தை தரையிறக்கம் செய்யமுடியும். அத்துடன் விமானத்திலேயே முதலுதவியும் செய்துவிடுவார்கள். எனவே பயமின்றி பயணம் செய்யலாம்.