குடும்பத்தில் விட்டுக்கொடுத்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதில் ஆண்கள் விட்டுக் கொடுக்கிறார்களா? பெண்கள் விட்டுக் கொடுக்கிறார்களா? என்ற ஒரு வாதம் அன்றிலிருந்து இன்று வரை நம் சமுதாயத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
கணவன், மனைவி உறவு சிறக்க வேண்டுமென்றால், குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால், விட்டுக்கொடுத்தல் மிகவும் அவசியம். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் சிறப்பு. பல குடும்பங்களில் பெண்கள்தான் அதிகம் விட்டுக்கொடுப்பார்கள். சில குடும்பங்களில் ஆண்கள் அதிகம் விட்டுக் கொடுப்பதையும் நாம் பார்க்கலாம்.
கணவனுக்கும் மனைவிக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் வரலாம். இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து இணைந்தவர்கள் என்பதை மறக்கலாகாது. ஆணின் சிந்தனைகளும், முக்கியத்துவங்களும் வேறு. பெண்ணின் எண்ணங்களும் முக்கியத்துவங்களும் வேறு. அதனால் சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் தவிர்க்க முடியாதவை என்பதை இருபாலரும் உணர வேண்டும்.
பெண்கள் ஏன் குடும்பத்தில் அதிகம் விட்டுக்கொடுக்கிறார்கள்? இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெண்கள் அதுவும் தமிழ் பெண்கள் இயல்பாகவே மிகவும் பொறுமைசாலிகள். கணவன் மீது உள்ள மரியாதையின் நிமித்தம் விட்டுக்கொடுக்கலாம். பெண்கள் திருமண பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதற்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுக்கலாம் அல்லது குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்கலாம்.
பொருளாதார ரீதியாக கணவனை சார்ந்திருப்பதனால் விட்டுக்கொடுக்கலாம். ஊர் உலகத்திற்கு பயந்து விட்டுக்கொடுக்கலாம். எது எப்படியோ, பெண்கள் விட்டுக்கொடுத்து நம் எல்லா குடும்பங்களையும் உடையாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது நிஜம்.
இப்பொழுது இந்த விட்டுக்கொடுத்தல் கொஞ்சம் குறைந்து வருகிறது என்பது உண்மைதான். பெண்கள் பொருளாதார ரீதியாக ஆண்களை சார்ந்திருப்பது குறைந்திருப்பதால் ஏற்படும் விளைவுதான் இது. 'ஈகோ' என்கின்ற 'பேய்' இப்பொழுது பெண்களையும் பிடித்து ஆட்ட ஆரம்பித்து விட்டதுதான் காரணம்.
விட்டுக்கொடுப்பதுதான் சிறந்த இல்லறத்திற்கு முதுகெலும்பு ஆகும். அது ஒன்றும் கேவலமில்லை. மற்றவர்கள், ஒற்றுமையாய் இருக்கும் உங்களை அதுவும் இதுவும் சொல்லி கலைக்க முயலுவார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 'ஈகோ'வைத் தூக்கி வீசுங்கள்.
குடும்பத்தில் அதிகம் விட்டுக்கொடுப்பது பெண்கள்தான் என்பதை மறுக்க இயலாது. குடும்பத்தை கோயிலாக்குவதும் குப்பைமேடாக்குவதும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. ‘எது எப்படியோ, ஆணும் பெண்ணும் சரிசமமாக விட்டுக்கொடுத்து வாழ்க்கையை நகர்த்தினால் மட்டுமே வாழ்க்கை என்ற அழகான தேர் நகரும் என்பதை மறுக்க முடியாது.