சாலையோர பானி பூரி கடை
சாலையோர பானி பூரி கடை

நீங்கள் பானி பூரி பிரியரா? உஷார் மக்களே உஷார்!

டைத்தெரு பக்கம் செல்லும்போது பானி பூரி வண்டிகளை பார்த்தாலே நம் கால்கள் தன்னால் அந்த வண்டிப் பக்கம் இழுத்துச் செல்லும். நாமும் கண்ட்ரோல் இல்லாமல் அங்கே சென்று கண்ணா பின்னான்னு பானி பூரி சாப்பிடுவோம். இதெல்லாம் நம் உடல் நலத்திற்கு எவ்வளவு கேடுகளை விளைவிக்கும் தெரியுமா?

அதிலும் பானி பூரி சாப்பிடுவது இப்பொழுது ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது. நம் ஆரோக்கியத்திற்கு எதிரான உணவுகளை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டால் வியாதியும் நம்மிடம் போட்டி போட்டுக் கொண்டுதான் வரும். பானி பூரி சாப்பிட்டால் என்ன ஆகும் என்றுதானே கேட்கிறீர்கள்.

உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு: பானி பூரிக்குப் பயன்படும் முக்கிய மூலப்பொருள்கள் மைதா மற்றும் பேக்கிங் சோடா. இது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நாம் இவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகிறார்கள்.

சின்னஞ்சிறு பூரி எல்லாம் பாக்கெட்டுகளில் இருப்பதைத்தாம் நாம் பார்த்திருக்கிறோம். இவை எங்கு தயாரிக்கப்படுகின்றன. சுகாதாரமான முறையில்தான் இவை தயாரிக்கப்படுகிறதா? என்பது பற்றியும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால், அதிகளவு பானி பூரி சாப்பிடுவதைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்.

பூரி தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய் எந்தளவுக்கு சுத்தாமானது என்று தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக எண்ணெய்யை ஒரு முறைதான் கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். ஆனால், நிறைய கடைகளில் எண்ணெயை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள்.

மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரியை எடுத்துக்கொள்ளும்போது, உடலில் கெட்ட கொழுப்பு சேரும். இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. பானி பூரியில் பான் மசாலா கலப்பதாக கூறப்படுகிறது. பான் மசாலாவும் ஒருவகைப் புகையிலைப் பொருள்தான். இதனால் புகையிலையால் ஏற்படக்கூடிய புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும்.

அதிக அளவு சோடியம் நிறைந்த எந்த உணவையும் முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. பானி பூரியில் அதிகளவு சோடியம் உள்ளது. எனவே, இந்த குறைபாடு உடையவர்கள் பானி பூரியை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வயிற்றில் புழு உண்டாகும்: பூரியை பெருவிரலால் உடைத்து அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவைத் திணித்து புதினா நீரில் முக்கி எடுக்கிறார்கள் பானி பூரி கடைக்காரர்கள். எவ்வித கையுறையும் அணியாமல் நிறைய இடங்களில் பானி பூரி இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றன. கையால் உடைத்து, தண்ணீரில் முக்கிக் கொடுப்பவரது கை எந்தளவு சுத்தமாக இருக்கிறது என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கை பெருவிரல் நகத்தில் படிந்திருக்கும் அழுக்கு பானி பூரியிலும் ஒட்டிக் கொள்ளும். நாம் அதை உண்ணும்போது பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில வகை புழுக்கள் கைகளிலிருந்துதான் பரவுவதாகக் கூறப்படுகிறது. அதைச் சாப்பிடும் போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு: பானி பூரி விற்பவரின் கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால், அவரிடம் இருந்து நாம் வாங்கி சாப்பிடும் பானி பூரியால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் பானி பூரி அதிகம் சாப்பிடுவதால் டைபாய்டு ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆற்று மணலுக்கு ஈடாகுமா எம் சாண்ட்?
சாலையோர பானி பூரி கடை

சுகாதாரமற்ற சூழ்நிலை: சென்னை மற்றும் நகரப் பகுதிகளில் பெருமளவில் சாலையோர தள்ளு வண்டிக் கடைகளில்தான் பானி பூரி விற்கப்படுகிறது. சில கடைகள் சாக்கடைக்கு அருகிலேயேதான் வைத்திருக்கிறார்கள். இங்கு சுற்றுச்சூழல் சுகாதாரமற்ற நிலையில்தான் இருக்கிறது. அவ்விடத்தில் விற்கப்படும் பானி பூரி சுகாதாரமாக இருக்கிறதா? என்ற கேள்வி நமக்குள் எழ வேண்டும்.

 புதினா ரசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் அதுவும் உடலுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற, சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

நொறுக்கு தின்பண்ட உணவுகளிலேயே அதிகம் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பது பானி பூரியில்தான். பானி பூரி விற்பவர், பரவக்கூடிய எதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை உண்பவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சுவைக்கு ஆசைப்பட்டு சுகாதாரமில்லாத தின்பண்டங்களை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

காரம், புளிப்பு என சுவை மிகுந்து காணப்படும் பானி பூரியில் சத்துகள் பெரிதாக ஒன்றும் இல்லை. சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பானி பூரிகளை சாப்பிடாமல், சுகாதாரமான முறையில் தயாரிப்பதைச் சாப்பிடலாம். வீட்டிலேயே நாம் சுகாதாரமான முறையில் பானி பூரி தயாரித்துச் சாப்பிடலாம். இது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

logo
Kalki Online
kalkionline.com