

வீட்டு அலங்காரத்தில் வெண்கல சிலைகள் நம் வீட்டிற்கு பாரம்பரிய மற்றும் நவீன உட்புற வடிவமைப்புகளுக்கு ஒரு உன்னதமான மற்றும் ஆடம்பரமான தோற்றத்தைத் தருகிறது. தெய்வீக சிலைகள் முதல் நவீன கலை வடிவங்கள் வரை நம் வீட்டிற்கு ஏற்ற சரியான வெண்கலச் சிலைகளை தேர்ந்தெடுத்து அதற்குரிய இடத்தில் அமைக்க வீடு அற்புதமான தோற்றத்துடன் இருக்கும்.
இவை வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்லாமல், வீட்டின் நேர்மறை ஆற்றலையும், கலாச்சார செழுமையையும் மேம்படுத்தும் காலமற்ற கலைப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
இந்திய பாரம்பரியத்தில் வெண்கலச் சிலைகள் வீட்டின் ஆன்மீக அதிர்வுகளை அதிகரிக்க பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. வாழ்க்கை அறையின் மையப் பகுதியாக பெரிய நடராஜர் அல்லது புத்தர் சிலைகளையும், வரவேற்பறையில் யானை அல்லது குதிரை சிலைகளையும் வைக்கலாம். பூஜை அறை மற்றும் டைனிங் டேபிளில் சிறிய அளவிலான கடவுள் சிலைகள் அல்லது மெழுகுவர்த்தி தாங்கிகளைப் பயன்படுத்தலாம்.
வீட்டின் நுழைவாயிலில் ஏன் வைக்க வேண்டும் வெண்கல சிலைகள்?
வீட்டின் நுழைவாயிலில் நந்தி, சிங்கம் அல்லது யானை போன்ற கம்பீரமான விலங்கு சிலைகளை வைப்பது பாதுகாப்பு மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகும்.
குதிரைகள், யானைகள், சிங்கங்கள் மற்றும் கழுகுகளின் வெண்கலச் சிலைகள் வீட்டில் நுழைவாயில் அல்லது அலுவலக மேஜைகளில் வைக்கும்பொழுது அவை கம்பீரத்தையும் அரச தோற்றத்தையும் தருகின்றன.
பாரம்பரிய கலை மட்டுமல்லாமல் நவீன வீடுகளுக்கு ஏற்றவாறு நவீன கலை வடிவங்கள், நேர்த்தியான விலங்குகளின் சிலைகள் அல்லது சமகால கலை வடிவங்களையும் பயன்படுத்தலாம். இவை நவீன மற்றும் பழங்கால உட்புற வடிவமைப்புகளுக்கு (Interior Designs) பொருத்தமாக இருக்கும்.
பளபளப்பான மென்மையான பொருட்களுடன், கடினமான வேலைப்பாடுடைய வெண்கலச் சிலைகளை இணைத்து வைப்பது கூடுதல் அழகைத் தரும்.
வாழ்க்கை அறை (Living Room):
வாழ்க்கை அறையின் மைய மேஜையில் (Coffee Table) அல்லது ஷோகேஸில் அழகாக வடிவமைக்கப்பட்ட நடராஜர், ராதாகிருஷ்ணர் அல்லது புத்தர் சிலைகளை வைப்பது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். குறிப்பாக அமைதி மற்றும் மன நிம்மதியை விரும்பும் மக்கள், தங்கள் வீட்டின் வரவேற்பறை அல்லது படிக்கும் அறைகளில் புத்த வெண்கல சிலைகளை வைக்கலாம்.
வரவேற்பறை அலங்காரத்தில் மையப் புள்ளியாக (Centre piece) குபேரன் சிலை நந்தியின் சிலை அல்லது நடராஜர் சிலையை வைப்பது கம்பீரமான தோற்றத்தைத் தரும். வரவேற்பறையில் வெண்கல விளக்குகளை அலங்காரமாக வைப்பது அழகான தோற்றத்தைத்தரும்.
ஆன்மீக இடங்கள்:
பூஜை அறையில் லட்சுமி, விநாயகர், குபேரர் போன்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வெண்கலச் சிலைகளை வைப்பது வீட்டிற்கு ஐஸ்வர்யத்தைக் கொடுக்கும். அத்துடன் பூஜை அறைக்கு ஆன்மீக நல்லிணக்கத்தையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டுவரும்.
தோட்டம் மற்றும் வெளிப்புற அலங்காரம்:
வெண்கலம் என்பது உட்புறத்திற்கு மட்டுமின்றி, வீட்டின் வெளிப்புறத் தோட்டங்களை அழகுப்படுத்தவும் சிறந்த தேர்வாகும். வெண்கல சிலைகள் வெயில் மற்றும் மழையால் எளிதில் பாதிக்கப்படாது என்பதால் இவற்றை தோட்டத்திலோ அல்லது வீட்டின் நுழைவாயிலிலோ தாராளமாக வைக்கலாம். இவை வீட்டிற்கு ஒரு அழகிய தோற்றத்தைத்தரும். தோட்ட நீரூற்றுகள், பறவைகள், விலங்குகள் அல்லது புத்தர் சிலைகளை வெளிப்புறங்களில் வைப்பது வெளிப்புற இடத்தை மிகவும் அழகாக மாற்றுவதுடன் அமைதியான சூழலையும் உருவாக்கும்.
குறைந்த பராமரிப்பில் மின்னும் வெண்கல சிலைகள் அழகு:
வெண்கல சிலைகள் அதிக பராமரிப்பு தேவையில்லாதவை. வெண்கல சிலைகளுக்கு வழக்கமான மெருகூட்டல் (Polish) தேவைப்படாது. அவை காலப்போக்கில் ஒரு அழகான பழங்கால தோற்றத்தை (antique) பெறும்.
வெண்கல சிலைகள் எளிதில் துருப்பிடிக்காது. வெண்கல சிலைகளின் பளபளப்பை நீட்டிக்க மென்மையான உலர்ந்த துணியால் அவ்வப்போது தூசிகளைத் துடைத்தாலே போதுமானது.
வெண்கல சிலைகளுக்கு அதிகப்படியான ரசாயனங்கள் கொண்ட கிளீனர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உள்ளூர் கைவினை பொருட்கள் அங்காடிகள் அல்லது பூம்புகார் போன்ற பிரத்தியேக கடைகளில் பாரம்பரிய வெண்கல சிலைகள் கிடைக்கும்.