

பிறப்புச் சான்றிதழ் என்பது தனிநபர் அடையாள ஆவணம் மட்டுமல்ல; ஒருவரின் வயதை நிரூபிக்கும் முக்கியமான அரசு ஆவணமாகும். 20 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால், குழந்தை பிறப்பைக் கூட பலரும் பதிவு செய்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அப்போது தொழில்நுட்ப வசதிகளும், விழிப்புணர்வும் மிகக் குறைவு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நிலைமையே வேறு.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி, அனைத்தையும் உள்ளங்கையில் வரவழைத்து விட்டது. இதன் காரணமாக சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது கூட மிகவும் எளிய மற்றும் சாதாரண விஷயமாகிவிட்டது. இருப்பினும் சான்றிதழ் பெறுவதில் சில பெற்றோர்கள் மெத்தனமாக உள்ளனர்.
பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் அதன முக்கியத்துவத்தை இப்போது தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் தற்போது அனைத்து அரசு சேவைகளும் இ-சேவை மையங்களில் கிடைக்கின்றன. பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவும் நாம் இ-சேவை மையங்களை நாடலாம். இருப்பினும் குழந்தை பிறந்த மருத்துவமனை வாயிலாகவே பெரும்பாலான பெற்றோர்கள் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பித்து வருகின்றனர்.
பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் வழிமுறை:
* குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் மருத்துவமனை நிர்வாகவே பிறப்பு பதிவை செய்து விடும்.
* 45 முதல் 90 நாட்களுக்குள் குழந்தையின் பெயர் இல்லாமல் அந்தந்த கார்ப்ரேஷன் இணையதளத்தில் வெளியாகும். இதனைப் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* மருத்துவமனைக்கு நேரில் சென்று, பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்க வேண்டும்.
* விண்ணப்ப படிவத்தில் குழந்தைக்கு வைத்துள்ள பெயரை ஆங்கிலத்தில் எழுதி, பெயரில்லாத பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் கார்டை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
* அடுத்த 30 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்டு விடும். இதனைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
* பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க மருத்துவ மனைக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், இ-சேவை மையத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
* மருத்துவமனையில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்று (Birth Slip), பெற்றோரின் ஆதார் கார்டு, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 21 நாட்களுக்குள் குழந்தைப் பதிவை பதிவு செய்யாதவர்கள் மட்டும் கூடுதலாக மாஜிஸ்திரேட் உத்தரவையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதூ எப்படி?
* https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று Birth Certificate Download என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
*மொபைல் எண் கொடுத்து ஓடிபி மூலம் உள்நுழைய வேண்டும்.
* அடுத்ததாக பிறந்த தேதி, பாலினத்தைக் குறிப்பிட்டால் அன்றைய தேதியில் பிறந்த குழந்தைகளின் பட்டியல் திரையில் தெரியும்.
* கூடுதலாக பெற்றோரின் பெயரைக் குறிப்பிட்டால், உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மட்டும் தெரியும். இதனை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏன் முக்கியம்?
வாழ்நாள் முழுவதும் பல முக்கியத் தேவைகளுக்கு அடிப்படை ஆவணமாக பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது. கல்வி முதல் வேலைவாய்ப்பு பெறுவது வரை பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது.
பள்ளியில் சேர்ப்பதற்கு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ்தான் வயதை உறுதிப்படுத்தும் ஆவணமாக இருக்கிறது.
வாரிசு உரிமை, சொத்துரிமை மற்றும் அரசின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறவும் பிறப்புச் சான்றிதழ் முக்கியம்.
மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்கள், மானியம், உதவித்தொகை மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு இதுவொரு கட்டாய ஆவணமாகத் திகழ்கிறது. அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் சேரும்போது, வயது மற்றும் பிறந்த தேதியை உறுதிப்படுத்தவும் பிறப்புச் சான்றிதழ் உதவுகிறது.