

கோடைக் காலத்தில் நிலவும் வெப்பத்தை தணிக்க குளிர்பானங்களை அருந்துவதற்கு பலரும் விரும்புவார்கள். அதன் குளிர்ச்சி தன்மையும், சுவையும் அடிக்கடி பருகத்தூண்டுகிறது. அப்படி குளிர்பானங்கள் பருகுவது தற்காலிக நிவாரணம் அளிக்கும். தாகத்தை தணிப்பதாகத் தோன்றும். உடலுக்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். அதே வேளையில் குளிர்பானங்களை அதிகமாக உட்கொள்வது பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
குளிர்பாணங்களில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை. அதிக அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளடங்கி இருக்கும். அதனை அடிக்கடி பருகும்போது அதில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள் உடலில் சேர்ந்து எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். குளிர் பானங்களை அதிக காலம் உட்கொள்வதால் ஏற்படும் ஐந்து முக்கியமான உடல்நல அபாயங்களைப் பற்றி பார்ப்போம்!
கல்லீரல்: இதன் செயல்பாடு நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. ஹார்மோன்கள், புரதங்கள் மற்றும் செரிமானத்துக்கு தேவையான உயிர் வேதிப்பொருட்களை உருவாக்கக்கூடியது. கிளைக்கோஜன் செயல்பாட்டை ஒழுங்கு படுத்தக்கூடியது.
குளிர்பானத்தின் முதன்மை ஆபத்து என்னவென்றால் கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். ஏனெனில் இந்த பானங்கள் அதிக அளவில் கல்லீரலை சென்றடையும் போது கொழுப்பு திரட்சியை ஏற்படுத்தும். அது நாளடைவில் கல்லீரலின் செயல்பாட்டுக்கு கேடு விளைவிக்கும். கல்லீரல் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடு முடங்கக் கூடும்.
இதயம்: இதன் செயல்பாடு நுரையீரலில் இருந்து ஆக்சிஜன் ஏற்றப்பட்ட ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்யும் பணியை இதயம் மேற்கொள்கிறது. பின்பு அங்கிருந்து ஆக்சிஜன் ஏற்றப்பட்ட ரத்தத்தை நுரையீரலுக்கு பம்ப் செய்கிறது. நுரையீரலின் நுழையும் ரத்தத்தை விட நுரையீரலில் இருந்து வெளியேறும் ரத்தத்தில் ஆக்சிஜன் அதிகமாக இருக்கும். அதனை ரத்தம் மூலம் உடல் உறுப்புகளுக்கு கொண்டு செல்லும் பணியை இதயம் சிறப்பாக மேற்கொள்கிறது.
குளிர்பானங்கள் அதிகம் பருகுவது வயிற்றில் கொழுப்பு படிவதற்கு வழி வகுத்து விடும். உடல் எடையை அதிகரிப்பதற்கும் அது காரணமாகிவிடும். குளிர் பானங்களில் பிரக்டோஸ் அதிகமாக கலந்தி ருக்கும். அதனை தொடர்ந்து பருகுவது இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
கணையம் செயல்பாடு: இன்சுலின் மற்றும் கிளைகோஜனை உற்பத்தி செய்கிறது. சிறுகுடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவும் நொதிகளையும் சுரக்கிறது.
நீரிழிவு நோய்: பொதுவான உடல்நல பிரச்சனை களாக மாறி உள்ளது. அந்த அளவுக்கு பெரியவர்கள் மட்டுமின்றி, சிறுவர்களும் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குளிர்பானங்களை அதிகமாக நுகர்வது இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவிக்கும். இன்சுலின் என்பது ஒரு வகை ஹார்மோன் ஆகும். இது ரத்த ஓட்டத்திலிருந்து செல்களுக்கு குளுக்கோசை கடத்தும் பணியை செய்கிறது. சர்க்கரை அதிகம் கலந்திருக்கும் குளிர்பானங்களை பருகும் போது உடல் செல்கள் இன்சுலின் செயல்பாட்டுக்கு குறைந்த உணர்திறன் கொண்டதாக மாறும் .அதனால் இன்சுலின் செயல்பாடு பாதிப்படையும்.
மூளை செயல்பாடு: பகுத்தறிவு, சிந்தனை, செயல்திறன், புரிதல் போன்ற உணர்வுகளை கையாளும் திறன் கொண்டது. உடலின் முக்கிய உறுப்புகளை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கும் ஆற்றல் கொண்டது.
துரித உணவுகளை உட்கொள்வது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும். கடினமான மருந்துகளைப் போல அவை வினைபுரிகின்றன. என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. குளிர்பானங்கள் போன்றவற்றின் அதிக நுகர்வும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களுக்கு மாற்றுப் பொருட்களை நுகர்வது, உடல் நலனை காக்க உதவும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
குளிர் பானங்களில் உள்ளடங்கியிருக்கும் அதிக அளவிலான சர்க்கரை உடலை சேதப்படுத்தும். உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். மேலும் பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிவிடும்.
அதனால் கோடையில் குளிர்பானங்களை அதிகம் பருகாமல், அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களை அப்படியே சாப்பிடுவது சக்தியைக் கொடுக்கும். கூடவே நார்ச்சத்தும் கிடைக்கும். செரிமானமும் ஆகும். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட மாட்டோம். எனவே, மேற்கூறிய உடல் உறுப்புகள் சீராக செயல்பட குளிர் பானங்களை தவிர்ப்போமாக!