
மாளிகை வீடாக இருந்தாலும் சரி, சிறிய வீடாக இருந்தாலும் சரி கட்டடத்தை கட்டுவது யார்? மாளிகை வீட்டில் இருப்பவர்கள் தங்களை உயர்வாகவும் சிறிய வீட்டில் இருப்பவர்களை தங்களைத் தாழ்வாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது சரியானதா என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
மாளிகை வீட்டுடன் தேவையான வசதிகளையும் செய்து கொண்டு ஆடம்பரமாக வாழும் மக்கள் தங்களின் நிலைக்குக் கீழே இருப்பவர்களை எதற்காக தாழ்வான நோக்கத்தோடு பார்க்க வேண்டும். சிறிய வீடோ, மாளிகை வீடோ அல்லது பெரிய அரண்மனையோ எதுவாக இருந்தாலும் அந்தக் கட்டடங்களைக் கட்டும் தொழிலாளர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்?
பெரிய பெரிய மாளிகையை பணக்கார வீட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும், சிறிய சாதாரணமான வீடுகளை ஏழை வீட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் கட்டுகிறார்களா? இல்லையே. எத்தனை பெரிய வீடாக இருந்தாலும் சரி, சிறிய வீடாக இருந்தாலும் அந்தக் கட்டடத்தைக் கட்டுபவர்கள் ஏழைகள்தானே? பிறகு எதற்காக மாளிகையில் வசிக்கும் சில நபர்கள் ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் இருக்க வேண்டும்?
எல்லாவிதமான கட்டடத்தையும், பெரிய பெரிய அரங்குகளையும் கட்டும் கட்டுமான பணியில் இருப்பவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே? வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி அழகான மாளிகையை உருவாக்கி அதில் வசதி படைத்தவர்களை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வழி வகுப்பவர்கள் இந்த ஏழைகள்தானே?
இந்த ஏழைகள் இல்லை என்றால் நாம் சந்தோஷமாக வாழ முடியுமா? மாளிகை மாளிகை என்று கர்வமாகப் பேசும் ஒரு சில நபர்கள் இதைப் பற்றி கண்டிப்பாக சிந்தித்தே ஆக வேண்டும். ஏழை தொழிலாளர்கள் குடிசையில் அவர்களுக்கென எந்த வசதியும் இல்லாதிருந்தபோதிலும் பணக்காரர்கள் வசதியாக வாழும் வகையில் எல்லாவற்றையும் கட்டிக் கொடுக்கிறார்கள்.
அவர்களுக்குக் கட்டுமான தொழிலிற்கேற்ற பணம் கிடைக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், கடைசியில் அவர்கள் தாங்கள் கட்டிய வீட்டில் ஒரு நாள் வசிக்க முடியுமா? எத்தனை பேர் அதற்கு ஒப்புக் கொள்வார்கள். இது மட்டுமில்லாமல், சிலர் சிறிய வீட்டில் வாழ்பவர்களையும், தங்களுடைய வீட்டை கட்டிய தொழிலாளர்கள், பெயின்ட் அடிப்பவர்கள், பிளம்பர்ஸ் என அனைவரையுமே தாழ்வாகவே பார்க்கிறார்கள்.
இன்னும் சிலர், தங்கள் வீட்டைக் கட்டிய தொழிலாளர்ளை வீட்டிற்குள்ளே கூட அனுமதிப்பதில்லை. ஏன் இந்த பாரபட்சம்? நாம் வாழ்வதற்கு இரவு பகலாக பாடுபடும் அவர்களை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? பணமிருந்தால்தான் பெரிய பெரிய மாளிகைகளைக் கட்ட முடியும். அதில் சிறிதளவும் ஐயமில்லை.
ஆனால், அதே சமயம் இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், சிறிய வீடாக இருந்தாலும் சரி, பெரிய மாளிகையாக இருந்தாலும் சரி, நமக்காக கட்டுமானப் பணியை செய்பவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதாவது, ஏழை இனத்தை சேர்ந்தவர்கள்தான். ஆகவே, அவர்களையும் நமக்கு சமமாக நேசிப்போம். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் புரிவோம்.