தியானத்தில் கடவுளிடம் பேச முடியுமா? அறிவியல் ஆய்வு கூறும் உண்மை!

தியானம்
தியானம்
Published on

தியானம் இந்த வார்த்தைக்கு எத்தனை வலிமை உள்ளது தெரியுமா? ஒருவர் தியானத்தில் இருக்கும் பொழுது அவர் தனது உடலின் அனைத்து பாகங்களையும் தனது மூச்சுக்காற்றால் இயக்குகிறார். தொடர்ந்து தியானம் செய்பவர்களுக்கு எந்த விதமான ஆரோக்கியக் கேடுகளும் வருவதில்லை.

அமைதியான சூழலில் , மெல்லியக் காற்றின் வருடலில் கண்களை மூடி மனதை அமைதிப்படுத்தி, ஒருநிலையில் வைத்திருந்தால்தான் அந்த தியானம் முழுமையடையும். தியானம் மதத்தின் அடிப்படையிலும் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.

சிலர் தியானத்தின்போது கடவுளிடம் பேசியதாகக் கூறுவார்கள். இதனால் மனம் தெளிவு பெற்றதாகவும் மனம் நிம்மதி அடைந்ததாகவும் கூறுவார்கள். உண்மையில் அறிவியலின்படி ஆராயும்போது தியானத்திற்கு மனதை ஒருநிலைப்படுத்த ஏதேனும் ஒரு விஷயம்தேவை. அது நம் மனதைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்குக் கடவுளைப் பயன்படுத்துகின்றனர். அவருடன் பேசினேன் என்பது அவர்கள் தியானத்தின் ஆழத்திற்குள் சென்றதன் வெளிப்பாடு என்றே சொல்ல முடியும். தியானம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வரும் நடைமுறையாகும்.

ஆழ்ந்த தியானத்திற்குப்பின் மனம் தெளிவு பெற்றதாகக் கூறுவதற்குக் காரணம் மன அழுத்தத்திற்குத் தொடர்புடைய சைட்டோகின் எனும் மூலக்கூறுகளின் செயல்பாடுகளைச் செயலிழக்கச் செய்வதே. இதை தேசிய சுகாதார நிறுவனம் 2017ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வும் உறுதி செய்கிறது.

இதனால் யோகா, தியானம் போன்ற அமைதியான எந்தச் செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன என்பதைக் குறிக்கிறது. மன அழுத்தம் குறைந்தாலே தூக்கமின்மை, மன அமைதியின்றி தவித்தல், கோபம், இயலாநிலை, தனிமை போன்ற பிரச்னைகளும் தீர்ந்துவிடும். அதேபோல், உடல் ரீதியாகவும் உடல் வலி, தலைவலி போன்ற பிரச்னைகள் நீங்கும் என, ‘எவிடன்ஸ் பேஸ்டு மெண்டல் ஹெல்த்’ வெளியிட்ட ஆய்வு குறிப்பிடுகிறது. அதில் மனதின் சுயக் கட்டுப்பாடு அதிகரிப்பதாகவும் இதனால், மனப்பதற்றம், பயம், மனச்சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவை குணமாகும். குறிப்பாக, பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்தப் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தியானம் சிறந்தது என்பதையும் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு. அதேபோல், தியானம் செய்வதால் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்னைகளும் வராது.

இதையும் படியுங்கள்:
தோஷத் தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் அவ்வையார் நோன்பு!
தியானம்

தியானத்தின் மூலமாக மூளை சுறுசுறுப்படையும். இதனால் மூளையின் ஆரோக்கியமும் வலுபெறுகிறது. குறிப்பாக, உங்களுக்கு ஏதேனும் தீய பழக்கங்கள் இருந்தாலும் தியானத்தின் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும் என 2015ம் ஆண்டு, ‘டிரெண்ட்ஸ் இன் காக்னிடிவ் சைன்ஸ்’ வெளியிட்ட ஆய்வு குறிப்பிடுகிறது. தியானத்தின்போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தெளிவான முடிவுகள் எடுக்கவும் வழிவகைச் செய்கிறது.

தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல் , மனம், மூளை ஆரோக்கியம் பெற்று சுயக் கட்டுப்பாடும் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என அந்த ஆய்வு கூறுகிறது. தினமும் தியானம் செய்வோம், நிம்மதியான வாழ்க்கையை நாமே அமைத்துக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com