அச்சச்சோ! பூரான் கடியா? இனி பயம் வேண்டாம்! 

Centipede
Centipede
Published on

பூரான் என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு உடல் சிலிர்க்கும், பயம் தோன்றும். வீடுகளிலும், தோட்டங்கள் நிறைந்த இடங்களிலும் சாதாரணமாக காணப்படும் இந்த பூச்சியினம் கடித்தால் தாங்க முடியாத வலி ஏற்படும். பூரான் கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது மிக முக்கியம். ஆனால் சில சமயங்களில், மருத்துவ உதவி கிடைப்பதற்கு தாமதமாகலாம். இந்த அவசர காலங்களில், பூரான் கடித்த உடனே செய்யக்கூடிய சில முதலுதவி முறைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

பூரான் கடித்தவுடன் பதட்டப்படாமல், முதலில் கடித்த இடத்தை சுத்தமான தண்ணீர் மற்றும் சோப்பு போட்டு மெதுவாக கழுவ வேண்டும். கடித்த இடத்தில் விஷம் பரவுவதை தடுக்கவும், தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் இது அவசியம். அதன் பிறகு, கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து, அந்த கரைசலை கடித்த இடத்தில் ஊற்றி கழுவுங்கள். உப்பு ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும். மேலும், வீக்கம் மற்றும் வலியை குறைக்கவும் இது உதவும்.

அடுத்ததாக, பூண்டு மற்றும் வெங்காயம் இந்த இரண்டையும் சம அளவு எடுத்து, அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதை பூரான் கடித்த இடத்தில் தடிமனாக பற்றுப்போல தடவி கட்டுப்போடுங்கள். பூண்டு மற்றும் வெங்காயத்தில் விஷத்தை முறிக்கும் மற்றும் வீக்கத்தை குறைக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதாக பாரம்பரிய மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. இது வலியையும், எரிச்சலையும் குறைக்க உதவும்.

இது தவிர மற்றொரு ஒரு எளிய வீட்டு வைத்தியம் உள்ளது. இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை எடுத்து, அதனுடன் இரண்டு அல்லது மூன்று மிளகுகளை சேர்த்து மென்று விழுங்கலாம். வெற்றிலை மற்றும் மிளகு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்றும், இது பூரான் விஷம் உடலில் பரவுவதை தடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவும் 5 வீட்டு குறிப்புகள்!
Centipede

இந்த வீட்டு வைத்திய முறைகள், பூரான் கடித்த உடனே செய்யக்கூடிய முதலுதவிகள் மட்டுமே. இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக கருதக்கூடாது. பூரான் கடி விஷத்தன்மை கொண்டது. சில பூரான் வகைகள் மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மையை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, பூரான் கடித்த பிறகு, உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறுவது மிக அவசியம். மருத்துவர்கள் கடித்த இடத்தை பரிசோதித்து, தகுந்த மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பார்கள்.

பூரான் கடியின் வலியைக் குறைக்க, விஷ முறிவு மருந்து மற்றும் தழும்பு ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் களிம்புகள் போன்றவற்றை மருத்துவர்கள் வழங்கலாம். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் மூலம் பூரான் கடியின் தீவிர விளைவுகளை தவிர்க்கலாம். மேலும், பூரான் கடிக்காமல் பாதுகாப்பாக இருப்பதும் முக்கியம். வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் சுத்தமாக வைத்திருங்கள். 

இதையும் படியுங்கள்:
உடலில் சிவப்பு இரத்தம் இல்லாத 11 வகை விலங்கினங்கள் எவை தெரியுமா?
Centipede

பூரான் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் இருந்தால், இரவில் படுக்கைக்குள் செல்வதற்கு முன்பு படுக்கையை நன்றாக தட்டிவிட்டு படுங்கள். பாதுகாப்பு மற்றும் சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பதன் மூலம் பூரான் கடியின் ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com