அதிகாலையில் செய்யக்கூடாத 8 விஷயங்கள் என்ன தெரியுமா?

Do you know 8 things not to do early in the morning?
Do you know 8 things not to do early in the morning?https://www.astroved.com

திகாலையில் எழுந்திருப்பது உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கும், உங்கள் உற்பத்தித்திறன் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. உங்களின் காலை பழக்க வழக்கங்கள்தான் நீங்கள் நாள் முழுவதும் எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. அன்றைய பொழுது நல்லவிதமாக இருக்க வேண்டும் என்றால் இந்தத் தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.

அரக்க பரக்க எழும் பழக்கம்: காலையில் அடித்து பிடித்துக்கொண்டு எழுவது நம்மில் பலருக்கு வாடிக்கை. அந்த மாதிரி செய்யக்கூடாது. காலையில் கண் விழித்ததும் நிதானமாக நம் உடலை ரிலாக்ஸ் செய்து கொண்டே எழ வேண்டும். தூங்கி எழும்போது வலது புறமாக திரும்பி படுக்கையிலிருந்து எழுங்கள். இது உடலின் சக்தியை சமநிலைப்படுத்தும்.

அரக்க பரக்க துள்ளி படுக்கையிலிருந்து எழுவது நல்லதல்ல. அதனால் அன்றைய நாள் முழுவதும் உடல் நிலை பேலன்ஸ் ஆகாமல் ஒருவித பரபரப்பு நம் உடலையும், மனதையும் தொற்றிக்கொள்ளும். காலையில் எழுந்ததும் ஒருசில நிமிடங்கள் அமைதியாக இருந்து ஆழமான மூச்சை உள்ளிழுத்து பின் வெளியிட்டு எழுந்து, ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள் என்கிறார்கள் யோகா கலை நிபுணர்கள்.

உடலை ரிலாக்ஸ் செய்யாமல் எழுவது: தூங்கி எழுந்தவுடன் நமது உடலின் சதைகளும், முதுகெலும்பும் விரைப்புத் தன்மையில் இருக்கும். எனவே, இதை தளர்த்த வேண்டும். அதற்கு நெட்டி முறித்து எழுங்கள். அப்படிச் செய்யாமல் எழுவது அன்றைய நாள் முழுவதும் அது நம் வேலைத் திறனை பாதிப்பதாக கண்டறிந்துள்ளனர். படுக்கையை விட்டு எழுந்தவுடன் மெதுவாக 3 அல்லது 5 முறை உடலை அந்தப்பக்கம், இந்தப்பக்கம் என்று நெட்டி முடித்துக்கொண்டு எழுவது நல்லது.

டென்ஷனுடன் எழுவது: பொதுவாக, காலையில் எழுந்ததும் துவங்கும் முதல் 20 நிமிடங்கள்தான் அன்றைய பொழுது நல்லபடியாக தொடங்குமா? அல்லது இல்லையா? என்பது தீர்மானிக்கிறது என்கிறார் கலிபோர்னியா யூனிவர்சிட்டி ‘மூட்’ ஆராய்ச்சியாளர் அல் லியன்.ஜி. ஹார்டி. பொதுவாக, காலையில் தூங்கி எழும் போதே இரைச்சலும், ஆர்ப்பாட்டங்களுடன் எழும் நபர்களுக்கு அன்றைய பொழுது நன்றாக விடிவதில்லை என்கிறார் அவர். தூங்கி எழும்போது நல்ல இசை, இனிய பறவைகள் சப்தம், நல்ல மந்திரங்களின் சப்தத்தைக் கேட்டு எழுகின்றவர்கள் நல்ல மனநிலையில் எழுவதாக அவர் கூறுகிறார்.

அன்றைய நாளை திட்டமிடாது இருத்தல்: அன்றைய நாளுக்குரிய உடைகளை, உணவுகளை மற்றும் அன்றைய தினத்தின் திட்டங்களை முதல் நாளே திட்டமிடுகிறவர்கள் மிகவும் குறைவு. இதுதான் நம்மில் பலர் செய்யும் தவறு. அன்றைய நாளுக்குரிய அனைத்தையும் முதல் நாளே திட்டமிடுங்கள். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் காலை நேரத்தில் குறையும்.

தேவையில்லாத காபி, டீ மற்றும் புகை பழக்கம்: பெரும்பாலானோர் காலை எழுந்ததும் காபி, டீ குடிப்பதையும் சிலர் புகைப்பிடிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது மிகவும் தவறான பழக்கம். அது உடலில் வளர்சிதை மாற்ற பணிகளை பாதிக்கும். நாம் தூங்கி எழும்போது நமது வயிறு காய்ந்துபோய் இருக்கும். அப்பொழுது ஒரு டம்ளர் தண்ணீர் மட்டுமே குடியுங்கள். அதன் பிறகு ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம். உங்கள் செரிமான சக்திக்கு எந்த விதமான பாதகமும் வராது.

காலை உணவை தவிர்த்தல்: சமீபத்திய ஆய்வு முடிவுகள் காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு என பல பிரச்னைகள் ஏற்படும் என்கிறது. மேலும், காலை உணவை தவிர்த்தால் நமது உடலுக்கு அதிகப்படியான வேலைப்பளு உண்டாகிறது என்கிறார்கள் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். காலை உணவை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்காதீர்கள்.

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் எளிய உணவுகள் எவை தெரியுமா?
Do you know 8 things not to do early in the morning?

காலை நேரத்தில் இ-மெயில் பார்த்தல்: காலையில் எழுந்ததும் ஸ்மார்ட் போன்களை நொண்டுவது அல்லது இ-மெயில் பார்ப்பது நம்மில் பலருக்கு இருக்கும் பழக்கம். இது நல்ல பழக்கம் அல்ல. இந்தப் பழக்கம் அன்றைய மனநிலையை மொத்தமாக மாற்றிவிடும். எதுவாக இருந்தாலும் சரி அதை தூங்கி எழுந்து 2 மணி நேரத்திற்கு பின்னர் வைத்துக்கொள்ளுங்கள்.

உடல் நலத்திற்கு நேரம் ஒதுக்க தவறுதல்: தூங்கி எழுந்ததும் அன்றைய தினத்தின் நடவடிக்கைகளில்தான் பலரும் ஈடுபாடு காட்டுவார்கள். ஆனால், உங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க தூங்கி எழுந்ததும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி, 20 நிமிடங்கள் தியானம், 20 நிமிடங்கள் ஆக்கபூர்வமான புத்தகம் மற்றும் செய்திகளை படியுங்கள். அன்றைய நாளுக்கான திட்டங்களை தீட்டுங்கள். இவை உங்களை என்றென்றைக்கும் மேம்படுத்த உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com