
பிறர் செய்யும் தவறுகளை மனதில் வைத்துக் கொண்டிருக்காமல் அவர்களை மன்னிப்பது மிகவும் நல்லது. அதேபோல, தான் செய்த தவறுகளுக்காக ஒருவர் தன்னைத்தானே மன்னிப்பதும் மிகவும் அவசியம். ஏன் என்பதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சுய மன்னிப்பின் முக்கியத்துவம்: ஒருவர் தன்னுடைய தவறுகளை உணர்ந்து கொள்வதும் மீண்டும் அவற்றை செய்யாமல் இருப்பதும் நல்ல விஷயம். ஆனால், செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி, அவற்றை மீண்டும் மீண்டும் நினைத்து, குற்ற உணர்வுக்கு ஆளாவது சரியல்ல. கடந்தத் கால தவறுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது மிக மிக முக்கியம். பலரும் தான் கடந்த காலத்தில் செய்த தவறை நினைத்து மனம் வருந்தி உள்ளுக்குள்ளே குமைந்து போய், உடல் நலமும் மன நலமும் கெட்டு தன் சொந்த வாழ்க்கையையும் பாழ்படுத்திக் கொள்கிறார்கள். எனவே சுய மன்னிப்பு மிகவும் அவசியமான ஒன்று.
சுய மன்னிப்பின் நன்மைகள்:
குற்ற உணர்வை நீக்குகிறது: மனிதர்கள் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் தாம் அறிந்தோ அறியாமலோ தவறு செய்வது இயற்கை. அதை எண்ணி எப்போதும் மருகிக் கொண்டிருந்தால் மனதில் நிம்மதி இருக்காது. குற்ற உணர்வு ஒருவரை மகிழ்ச்சியாக இருக்க விடாது. மேலும், பணிகளை கவனமாக செய்யவும் விடாது. எனவே, தாங்கள் செய்த தவறுகளை மன்னிக்கப் பழக வேண்டும். சுய மன்னிப்பு இல்லாதபோது ஒரு நபர் தன்னைத்தானே வெறுக்கவும் வழிவகுக்கும். பதற்றம், மனச்சோர்வு போன்றவை அதிகரிக்கும்.
சுயமரியாதை அதிகரித்தல்: ஒருவர் தன்னை தொடர்ந்து விமர்சித்து குற்றம் சாட்டிக்கொள்ளும்போது அவருடைய சுயமரியாதையை தானே அவர் அழித்து விடுகிறார். அதற்கு பதிலாக சுய மன்னிப்பு தரும்போது உள்ளார்ந்த மதிப்புடன் ஒருவர் தன்னை மாற்றிக்கொள்ள முடிகிறது. தன் மேல் மரியாதை அதிகரிக்கும்போது அவர் மன நிம்மதி அடைவதுடன் தன்னுடைய சுய வளர்ச்சியிலும் ஈடுபடுவார்.
தனிப்பட்ட வளர்ச்சி: சுய மன்னிப்பு என்பது தோல்வி பயத்தால் முடங்கிப் போகாமல் தவறை ஒப்புக்கொள்ளவும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படவும் ஒருவரை அனுமதிக்கிறது. உண்மையான சுய மன்னிப்பு என்பது தன்னுடைய செயல்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகும். தன்னைத்தானே ஒருவர் மன்னிப்பதன் மூலம் பின்னடைவுகளை அதிக திறமையுடன் சமாளிக்கவும் மீண்டு வரவும் கற்றுக் கொள்கிறார்.
உறவு மேலாண்மை: தன்னைத் தானே ஒருவர் அதிக இரக்கத்துடன் புரிந்துகொண்டு மன்னிக்கும் பது மன வலிமை அதிகரிக்கிறது. இதனால் கருணை, இரக்கம், பச்சாதாபம் போன்ற குணங்கள் வளரும். அதைப் பிறரிடமும் காட்ட முடியும். அவர்களது குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் மற்றவர் மேல் பாசமும் கருணையும் கொள்ள முடியும். இதனால் நல்ல உறவு மேலாண்மை உண்டாகும்.
உடல் ஆரோக்கிய மேம்பாடு: உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு மனமே முக்கிய காரணம். சுய மன்னிப்பு ஒருவரின் மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வைக்கிறது. குற்ற உணர்வோடு இருக்கும் மனிதர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து தூக்கப் பிரச்னைகள், செரிமானப் பிரச்னைகள், பலவீனமான நோய் எதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும். சுய மன்னிப்பு இவற்றை சரி செய்து உடல் ஆரோக்கியத்தை சரிப்படுத்தும். இதன் மூலம் மன ஆரோக்கியமும் சிறந்து விளங்கும்.