ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று காதலர்கள், பரிசுகளையும் அன்பையும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். இருப்பினும். நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை காதலர்களின் பிரதான சின்னமாக இதயமே உள்ளது. ஆனால். இதுவரை யாரேனும் காதலுக்கும் இதயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எப்போதாவது யோசித்ததுண்டா?
காதல் என்பது, ’கண்களில் தொடங்கி, இதயத்தில் முடியும்’ என்று கவிதை எழுதுவது நன்றாகத்தான் இருக்கிறது. மனதிற்குப் பிடித்தவரை பார்க்கும்போது இதயம் துடிக்கிறது. இதுவே பிடித்தவர் மனதை காயப்படுத்தினால் இதயம் வலிக்கிறது. இந்த உணர்வு எல்லாம் எப்படி வருகிறது?
உண்மையிலேயே காதல் என்ற உணர்வு மூளையிலிருந்தே வருகிறது. மூளையில் இருக்கும், ‘அமிக்தலா’ என்ற ஒரு பகுதியே காதல், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் வருவதற்குக் காரணமாக அமைகிறது. ஆனால், அதிகமான காதல் போன்ற உணர்வுகளை மக்கள் இதயத்துடனே தொடர்புப்படுத்தி பார்ப்பதற்குக் காரணம், நமக்குப் பிடித்தவர்களை பார்க்கும்போது இதயம் அதிகமாக துடிப்பதே ஆகும்.
நமக்கு ஏதேனும் ஆபத்து வருவதாக மூளை உணரும்போது பிளைட் ஹார்மோனை (Fight or flight hormone) சுரக்கும். அதுவே இதயத்தை வேகமாகத் துடிக்க வைக்கக் காரணமாகும். இதற்கு அர்த்தம் நாம் ஏதோ ஆபத்தில் இருப்பதாக மூளை புரிந்துகொள்வதேயாகும். காதலையும் மூளை அவ்வாறு ஆபத்தாகப் புரிந்து கொள்வது வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது அல்லவா?
காதலில் இருக்கும்போது டோப்பமைன் சுரபி உடலில் அதிகமாக சுரந்து, மது போன்றவை அருந்துவதால் ஏற்படும் ஒருவகை போதை உணர்வை நமக்குக் கொடுக்குமாம். காதலும் ஒருவகை போதை என்று சும்மாவா சொன்னார்கள்?
காதல் தோல்வி ஏற்படும்போது, ‘என் இதயம் உடைந்துவிட்டது’ என்று கூறுவார்கள். ஆனால், இதயம் உடைவது என்பது உண்மையிலேயே நடக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம். காதல் தோல்வி போன்ற அதிகப்படியான சோக உணர்வுகளை எதிர்கொள்ளும்போது இதயத்தில் இருக்கும் தசைகள் பலவீனம் அடைந்துவிடுமாம். இது தற்காலிகமானதுதான் என்றும் இரண்டு மாதத்தில் தானாகவே சரியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது!
ஆக, மொத்தத்தில் இதயம் எப்படி காதலுடன் தொடர்புப் படுத்தப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை என்றாலும் நம் உடலில் கடுமையாக உழைக்கும் ஒரு உறுப்பை பெருமைப்படுத்தும் நாளாக காதலர் தினத்தை கொண்டாடுவது சிறப்பானதேயாகும்.