

கோடைக் காலத்தில் எண்ணெய் பதார்த்தத்தை தவிருங்கள். பொரித்த சிப்ஸ் வகைகளையும் கார வகைகளையும் மூன்று மாதத்திற்கு குழந்தைகளின் கண்ணிலேயே காட்ட வேண்டாம்.
பிஞ்சு புடலங்காய், பூசணி, சொர சொரப் பரங்கிக்காய் என்று நார்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.
காரக்குழம்பு, புளிக்குழம்புகளை தவிர்த்து, பருப்பு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உஷ்ண கட்டியிலிருந்து காப்பாற்றும்.
பழ ஜூஸ் போட்டு குடியுங்கள். ஃபிரிட்ஜில் தர்ப்பூசணி, கிர்ணி பழங்களை துண்டுகளாக ஒரு கிண்ணத்தில் போட்டு வையுங்கள். தேவையானபோது எடுத்துச் சாப்பிடுங்கள்.
எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, தக்காளி, திராட்சை போன்ற பழ வகைகளை ஜூஸாக பிழிந்து பாட்டிலில் ஊற்றி வையுங்கள். வெயிலில் அலைந்து விட்டு வரும்போது அருந்த குளுமையாக இருக்கும்.
சப்பாத்தி, பரோட்டா போன்ற டிபன்களை தவிர்த்து, இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பம் போன்ற எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய டிபன்களை செய்து சாப்பிடுங்கள். கோடைக்காலத்தில் உடல்நிலை காக்கும் வழி இது.
குழந்தைகளுக்கு வெங்காயம், சிறிது வெள்ளரி, தக்காளி, கேரட் ஒரு துண்டு, இஞ்சியுடன் எல்லாவற்றையும் கழுவி துருவி சிறிது மிளகுத்தூளை தூவி சாலட் செய்து கொடுத்தால் நல்லது. இது உடம்புக்கு குளுமை கொடுப்பதுடன் ஆரோக்கியத்தையும் தரும்.
சோளத்தை தனித்தனியாக எடுத்து அடுப்பில் சுட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் பொட்டுக்கடலை பொடி, சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உடலுக்குக் குளிர்ச்சியை கொடுக்கும் அருமருந்து இது.
கோடைக்காலம் வியர்வை அதிக அளவில் வெளியேறும் காலம். ஆதலால் உள்ளாடைகளை நன்கு துவைப்பதோடு, டெட்டால் போட்டு அலசி காய வையுங்கள்.
வெளியில் அதிகம் அலையாதீர்கள். வெயில் உஷ்ணத்தால் பாதிக்கப்படாதீர்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டால் சருமத்தில் கடலை மாவு தேய்த்துக் குளியுங்கள்.
உடம்பில் அரிப்பு, வேனல் கட்டிகள் இருந்தால் வேப்பங்கொழுந்து, பசும் மஞ்சளை சேர்த்து அரைத்து சிறிது பயத்தம் மாவையும் கடலை மாவையும் பால் ஏட்டையும் சேர்த்து கலந்து பத்து போட்டு காய்ந்ததும் அலம்பி விடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
வாரம் ஒரு முறை எண்ணெய் வைத்து குளிப்பதால் உடம்பு குளிர்ச்சியாவதுடன் சரும்ம் வறண்டு போகாமல் இருக்கும்.
மெல்லிய பருத்தி ஆடைகளை தைத்துப் போடுங்கள். இவற்றை உடுத்துவதால் வியர்வையிலிருந்து விடுதலை பெறுவதோடு, கம்பீரமாகவும் இருக்கும்.
டூவீலர்களில் பயணம் செய்பவர்கள் மறக்காமல் கையுறை அணிந்து செல்லுங்கள். இதனால் கைகள் கருப்பாக மாறுவதைத் தடுக்கலாம்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் பருத்திஆடைகளை அணிவதோடு, உடைகள் இறுக்கமாக இல்லாமல் லூசாக அணிய வேண்டும். இதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
உதடுகள் அடிக்கடி வறண்டு போகாமல் இருக்க பால் ஏடு மற்றும் வாஸலின் போன்றவற்றை உதடுகளில் தடவிக் கொள்ளுங்கள்.
வாய்ப்புண் ஏற்பட்டால் மணத்தக்காளி வத்தலை வறுத்து தயிருடன் சேர்த்து சாப்பிடுங்கள். லேசாக தேங்காயை சேர்த்து சாப்பிடுங்கள். இரண்டு நாட்கள் பழைய சாதத்தை மோரும் பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் நன்றாக கரைத்துச் சாப்பிடுங்கள். வாய்ப்புண் வந்த வேகத்தில் மறைந்து விடும்.
கோடைக்காலத்தில் வீட்டில் தரையில் அடிக்கடி தண்ணீர் தெளித்து வைத்துக் கொண்டால் குளிர்ச்சியாக இருக்கும்.
காட்டன் அல்லது பருத்தி துணிகளால் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை போடுங்கள். மதிய வேளையில் திரைச்சீலையை நீரில் நனைத்து தொங்கவிட்டால் வீடே ஏசி போட்டது போல் குளுமையாக இருக்கும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here