

நமது அன்றாட வாழ்வில் மொபைல் சார்ஜ் செய்வது முதல் பண்டிகை காலங்களில் சீரியல் விளக்குகள் அமைப்பது வரை அனைத்திற்கும் எக்ஸ்டென்ஷன் கார்டுகளைத் (Extension Cords) தான் நாம் அதிகம் நம்பி இருக்கிறோம். ஆனால், இதைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் வீடுகளில் பெரும் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனப் பல பாதுகாப்பு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். இதன் ஆபத்துகளைப் பலரும் முழுமையாக உணர்வதில்லை. எக்ஸ்டென்ஷன் வயர்களை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை!
எந்த ஒரு எக்ஸ்டென்ஷன் வயரைப் பயன்படுத்தும் முன்பும் அது நல்ல நிலையில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது மிக மிக அவசியம். வயர்களில் வெடிப்போ, உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரிந்தாலோ அதை உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும். தரச் சான்றிதழ்கள் உள்ள வயர்களை மட்டுமே பார்த்து வாங்குவது பாதுகாப்பானது.
பிளக்கில் உள்ள எர்த் பின்னை எக்காரணம் கொண்டும் உடைக்கவோ நீக்கவோ கூடாது. அதுதான் நமக்கு எதிர்பாராத மின் அதிர்ச்சியில் இருந்து முழுமையான பாதுகாப்பைத் தருகிறது. ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் ஃப்ரிட்ஜ் போன்ற பெரிய மின்சாதனங்களை ஒருபோதும் இதில் இணைக்கக் கூடாது. அவற்றின் அதிகப்படியான மின்சாரத் தேவையை இந்த சாதாரண வயர்களால் தாங்க முடியாது.
உள்ளே மற்றும் வெளியே பயன்பாடு!
வீட்டின் உள்ளே பயன்படுத்தும் சாதாரண வயர்களை ஒருபோதும் வெளிப்புறங்களில் பயன்படுத்தக் கூடாது. வெளியில் உள்ள பணிகளுக்கு அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்ஸ்டென்ஷன் வயர்களைத் தண்ணீருக்கு அருகில் கொண்டு செல்லவே கூடாது. ஈரமான கைகளால் தொடாமல் இருப்பதும் மிக முக்கியம்.
அதேபோல இந்த வயர்களைக் கார்பெட் மற்றும் கதவு இடுக்குகளுக்கு அடியில் கொண்டு செல்லக் கூடாது. இதனால் கடுமையான உராய்வு ஏற்பட்டு வெப்பம் வெளியேற முடியாமல் உள்ளேயே தேங்கி பயங்கரமான தீ விபத்து ஏற்படும். இவற்றைச் சுவரில் ஆணி அடித்துப் பொருத்துவதும் ஆபத்தானது.
பயன்படுத்தும் போது!
இரண்டு அல்லது மூன்று வயர்களை ஒன்றோடு ஒன்று இணைத்து நீளமாக்குவது பெரும் தவறாகும். இது வோல்டேஜை குறைத்து வெப்பத்தை அதிகரிக்கும். வயரைப் பயன்படுத்தும் போது அது அதிக சூடாக மாறினால், உடனடியாகப் பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டும். வயர்களைச் சுருட்டி வைத்துப் பயன்படுத்தக் கூடாது, வயர் சுருட்டப்பட்ட நிலையில் மின்சாரம் பாயும்போது வெப்பம் அதிகமாகி உருகிவிடும்.
பிளக்கைக் கழற்றும்போது வயரை பிடித்து இழுக்காமல், அதன் அடிப்பகுதியைப் பிடித்து மெதுவாக எடுக்க வேண்டும். எக்ஸ்டென்ஷன் கார்டு என்பது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே, அதை நிரந்தரமான மின் இணைப்பிற்குப் பயன்படுத்தக் கூடாது. பயன்பாடு முடிந்தவுடன் மின் இணைப்பைத் துண்டித்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
மின்சாரம், நமது வேலைகளைச் சுலபமாக்கக் கிடைத்த ஒரு அற்புதமான சக்தி. அதே நேரம் அதைச் சற்றுக் கவனக்குறைவாகக் கையாண்டால் அதுவே நம் உயிருக்கே உலையாகிவிடும். எக்ஸ்டென்ஷன் கார்டுகளைப் பயன்படுத்தும்போது மேற்கண்ட இந்த எளிய விதிமுறைகளைப் பின்பற்றினால், நம் வீட்டையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.