நமது வீட்டின் சுவரிலோ, சீலிங்கிலோ பல்லியைப் பார்த்தாலே நம்மில் பலருக்கும் ஒருவிதமான அருவருப்பும் பயமும் ஏற்படும். உடனே ஒரு பெரிய துடைப்பத்தையோ, குச்சியையோ எடுத்து அதை அடிக்க வீடு முழுவதும் ஓடிக்கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் பல்லிகள் மனிதர்களுக்கு எந்த ஒரு பெரிய கெடுதலும் செய்யாத ஒரு சாதாரண அப்பாவி உயிரினம் தான்.
அவற்றை அடித்துக் கொல்வதற்குப் பதிலாக, சில ஈஸியான, இயற்கையான வீட்டு வைத்தியங்களை வைத்தே வீட்டை விட்டு விரட்டி அடிக்கலாம்.
பல்லிகள் வீட்டைத் தேடி வர முக்கிய காரணம்!
பல்லிகள் சும்மா ஒன்றும் நமது வீட்டிற்குள் கெஸ்டாக வந்து விடுவது கிடையாது. நமது வீட்டில் அவற்றுக்குப் பிடித்தமான உணவு கிடைக்கிறது என்பது தான் இதற்கு முழு முதல் காரணம். அவற்றின் முக்கிய உணவான கொசுக்கள், ஈக்கள் மற்றும் சின்னச் சின்ன பூச்சிகளைத் தேடித் தான் அவை ஜன்னல் வழியாக உள்ளே நுழைகின்றன.
அதுமட்டுமில்லாமல் வீட்டின் இருட்டான, அமைதியான, ஈரப்பதம் நிறைந்த இடங்களான பாத்ரூம், சமையலறை சிங்க் அடியில மற்றும் ஸ்டோர் ரூம் போன்றவை தான் அவற்றுக்கு சொகுசான இடங்கள். சுவர்கள் மற்றும் கதவுகளில் உள்ள சின்னச் சின்ன விரிசல்கள் வழியாக அவை மிக எளிதாக உள்ளே வந்து நிரந்தரமாக செட்டிலாகி விடுகின்றன.
வாசனையை வைத்து விரட்டும் தந்திரங்கள்!
பல்லிகளுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். அதனால், சில குறிப்பிட்ட நெடியான வாசனைகள் அவற்றுக்கு சுத்தமாகப் பிடிக்காது.
பூண்டு மற்றும் வெங்காயத்தின் காட்டமான வாசனையை முகர்ந்தால் பல்லிகளுக்கு மூச்சு முட்டி அந்த இடத்தை விட்டே தெறித்து ஓடிவிடும்.
பெப்பர்மின்ட் மற்றும் யூகலிப்டஸ் போன்ற எசன்ஷியல் ஆயில்கள் அல்லது சமையலுக்குப் பயன்படுத்தும் வினிகரை கொஞ்சம் தண்ணீரில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்துக்கொள்ளுங்கள். அதை ஜன்னல், கதவு ஓரங்கள் மற்றும் பல்லி நடமாடும் மூலைகளில் ஸ்ப்ரே செய்து விட்டால் அந்தப் பக்கமே அவை தலை வைத்துப் படுக்காது.
சாப்பிட்ட முட்டை ஓடுகளை குப்பையில் வீசாமல், பல்லி வரும் இடங்களில் வைப்பதும் அருமையான ஒரு ஐடியாதான். முட்டை ஓட்டின் வாடை பல்லிகளுக்கு ஒருவிதமான எரிச்சலை கொடுக்கும்.
மீண்டும் வராமல் தடுக்கும் வழிகள்!
பல்லிகளை ஒரு முறை விரட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவை மீண்டும் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதும் அவசியம். சுவர்களில் இருக்கும் ஓட்டைகள் மற்றும் ஜன்னல் இடுக்குகளை சிமெண்ட் அல்லது வேறு ஏதேனும் பேஸ்ட் வைத்து முழுமையாக அடைத்து விடுங்கள். வீட்டை எப்போதுமே ரொம்ப சுத்தமாகவும் எந்த ஒரு ஈரப்பதமும் இல்லாமலும் காய்ந்த நிலையில் வைத்திருந்தால், முதலில் பூச்சிகள் வராது.
பூச்சிகள் இல்லை என்றால் பல்லிகளுக்கு சாப்பாடு கிடைக்காது, அதனால் அவையும் எட்டிப் பார்க்காது. வெளிச்சம் இல்லாத இருட்டு மூலைகள் தான் அவற்றுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், வீட்டின் அனைத்து இடங்களிலும் நல்ல பிரகாசமான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ஒரு சிறந்த தற்காப்பு முறையாகும்.
பல்லிகளைக் கண்டு நாம் தேவையில்லாமல் அலறிப் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது. எந்த ஒரு விலை உயர்ந்த ரசாயன ஸ்ப்ரேக்களையும் கடைகளில் காசு கொடுத்து வாங்காமல், நமது சமையலறையில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே இந்த பெரிய தொல்லையை ரொம்பவே சுலபமாகத் தீர்த்துவிடலாம்.