

இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் நிலைமை ரொம்பவே கஷ்டமாக மாறிவிட்டது. ஆன்லைன் வேலைவாய்ப்பு தளங்களில் தினமும் நூற்றுக்கணக்கான புதிய அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. நாமும் ஆசையாக அந்த வேலைகளுக்கு அப்ளை செய்துவிட்டு ரிப்ளைக்காக காத்திருப்போம்.
ஆனால் அந்த நிறுவனங்களில் இருந்து ஒரு பதிலும் வராது. இப்படி வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக விளம்பரம் கொடுத்துவிட்டு யாரையுமே வேலைக்கு எடுக்காமல் இழுத்தடிக்கும் முறைக்கு பெயர் தான் கோஸ்ட் ஹயரிங் (Ghost Hiring). இந்தியா முழுவதும் இப்போது வேகமாக பரவி வரும் இந்த புதிய கார்ப்பரேட் ட்ரெண்ட் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மாயையாக மாறும் வேலைவாய்ப்புகள்!
கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களுக்கு நிறைய ஆட்கள் தேவை என்பது போன்ற ஒரு மாயையை வெளியே தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் புள்ளிவிவரங்களை பார்த்தால் உண்மை நிலை ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் ஆண்டுக்கு 30 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
சுமார் 70 சதவீத இளைஞர்கள் வேலைக்கு விண்ணப்பித்து விட்டு எந்த ஒரு பதிலும் இல்லாமல் ஏமாற்றத்துடன் காத்திருக்கிறார்கள். இது நிஜமாகவே அங்கு வேலை காலியாக இருக்கிறதா அல்லது சும்மா விளம்பரம் செய்கிறார்களா என்ற பெரிய சந்தேகத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
திறமைக்கு மட்டுமே முன்னுரிமை!
இதற்கு காரணம் கம்பெனிகள் ஏமாற்றுகின்றன என்பதை விட அவர்களின் ஆட்களை எடுக்கும் முறை முற்றிலுமாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் ஒரு ப்ராஜெக்ட் வந்தால் அதற்காக ஆட்களின் எண்ணிக்கையை கணக்கு வைத்து மொத்தமாக பலரை வேலைக்கு எடுப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட ஸ்கில் யாரிடம் இருக்கிறதோ அவர்களை மட்டுமே தேர்வு செய்ய கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. தங்களுக்குத் தகுடியான நபர் கிடைக்கும் வரை அந்த வேலைவாய்ப்புக்கான விளம்பரத்தை அவர்கள் பல மாதங்களுக்கு அப்படியே ஓபனில் வைத்திருக்கிறார்கள்.
சில கம்பெனிகள் உடனே வேலைக்கு ஆட்களை எடுக்கும் எந்த ஒரு ஐடியாவிலும் இருக்க மாட்டார்கள். ஆனால் மார்க்கெட்டில் இப்போது என்னென்ன திறமைகள் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள சும்மா ஒரு விளம்பரத்தை போட்டு விடுவார்கள். எதிர்காலத்தில் தங்களுக்கு ஏதாவது பெரிய வேலை வரும்போது உடனடியாக ஆட்களை பிடிக்க இந்த டேட்டாபேஸ் அவர்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். தங்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக அவர்கள் செய்யும் இந்த பிளான், வேலை தேடும் இளைஞர்களை ரொம்பவே குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது.
வெளிப்படைத்தன்மை மிக அவசியம்!
கம்பெனிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான ரெஸ்யூம்கள் வருவதால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் சொல்வது கடினம் தான். இதற்காக அரசாங்கம் பெரிய அளவில் சட்டங்களை கொண்டு வருவதை விட, நிறுவனங்கள் சற்று வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். தாங்கள் கொடுக்கும் விளம்பரத்தில் உடனடியாக ஆட்கள் தேவையா அல்லது எதிர்கால தேவைக்காக ரெஸ்யூம் வாங்குகிறோமா என்பதை தெளிவாக குறிப்பிட்டு விட்டால் இளைஞர்களின் நேரம் மிச்சமாகும்.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த கோஸ்ட் ஹயரிங் ஏமாற்று வேலை கிடையாது. இது கார்ப்பரேட் உலகின் ஒரு புதிய பரிணாம வளர்ச்சி ஆகும். வேலைவாய்ப்பு சந்தை ரொம்பவே சிக்கலாக மாறிவரும் இந்த நேரத்தில், இளைஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதே சமயம் நிறுவனங்களும் வேலை தேடுபவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ரொம்பவே நேர்மையாகவும் தெளிவாகவும் செயல்படுவது இரு தரப்புக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும்.