

வீட்டில் பாதுகாப்பு என்ற பெயரில் பயன்படுத்தப்படும் ஏர் ஃபிரஷ்னர், நான்ஸ்டிக் பாத்திரங்கள், சுத்திகரிப்பு திரவங்கள், பூச்சி மருந்துகள், பிளாஸ்டிக் கண்டெய்னர்கள், டிரையர் ஷீட்ஸ் போன்றவை உடல்நலத்திற்கு ஆபத்தான நச்சு ரசாயனங்களை வெளியிடுகின்றன என்று மருத்துவர் வெங்கட கிருஷ்ணன் எச்சரிக்கிறார். இவற்றுக்கு பதிலாக இயற்கை நறுமண எண்ணெய், பீங்கான் பாத்திரம், வினிகர், எவர்சில்வர், கம்பளி உலர் பந்துகள் போன்ற மாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது.
வீடு ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான இடமாக இருப்பதால் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் சௌகரியமாக வைத்திருக்கிறார்கள். அதற்காக சந்தைகளில் விற்கப்படும் பல பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
அவ்வாறு வாங்கி பயன்படுத்தும் அன்றாட பொருள்கள் சில ஆபத்தை விளைவிப்பதாக உள்ளன. அந்த வகையில் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் குறித்து குரு கிராமை சேர்ந்த பிரபல மருத்துவர் வெங்கட கிருஷ்ணன் கூறியவற்றை இப்பதிவில் காண்போம்.
1. நறுமண பரப்பிகள்
வீட்டிற்குள் நுழைந்ததும் நறுமணம் வீச வேண்டுமென்பதற்காக பலவிதமான ஏர் ஃபிரஷ்னர்களை சந்தையில் வாங்கி வீட்டில் பயன்படுத்தி வீட்டை நறுமணம் ஆக்குகிறோம். இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பதால் இவற்றை சுவாசிக்கும் போது ஆஸ்துமா போன்ற பல்வேறு சுவாச பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
ஆகவே வீட்டை புத்துணர்ச்சியாகவும் வாசமாகவும் வைத்திருக்க நறுமண பரப்பிகளை விட நறுமண எண்ணைய்களை பயன்படுத்தலாம். மேலும் வீட்டில் துர்நாற்றத்தை வெளியேற்ற கதவுகள் ஜன்னல்களை அன்றாடம் திறந்து வைப்பது இயற்கையான வழிமுறையாகும்.
2. நான்ஸ்டிக் பாத்திரங்கள்
வீட்டில் சமையலறையில் இருக்கும் பொருட்கள் அழகாக இருப்பதோடு சுத்தம் செய்ய எளிதாகவும், ஒட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது வெப்பத்தின் காரணமாக அவற்றின் மீது பூசியுள்ள இரசாயன கலவைகள் நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.
உள் உறுப்புகள் செயலிழப்பிற்கும் புற்று நோய்கள் ஏற்படுவதற்கும் இந்த வாயுக்கள் காரணமாக இருப்பதால் வீட்டில் சமைப்பதற்கு நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு பதிலாக பீங்கான், எவர்சில்வர் பாத்திரங்கள், வார்ப்பிரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.
3. சுத்தப்படுத்தும் பொருட்கள்
வீடு, பாத்திரங்கள் மற்றும் துணிகளை சுத்தப்படுத்துவதற்காக நாம் சந்தைகளில் வாங்கி பயன்படுத்தும் பலவிதமான பொருட்களில் ரசாயனங்களான அம்மோனியா ப்ளீச் போன்றவை அதிகளவில் இருக்கின்றன. கண்களுக்கும், தோல்களுக்கும் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வகை ரசாயன பொருட்களை பயன்படுத்துவதைவிட வினிகர், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் வீடு சுத்தமாக இருப்பதோடு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
4. பூச்சி மருந்துகள்
தலைவலி,தலைசுற்றல்,நரம்பு பிரச்னைகளை பூச்சி மருந்துகளில் இருக்கும் வீரியமிக்க ரசாயனங்கள் ஏற்படுத்துகின்றன. ஆகவே விரிசல்களை அடைப்பது, பூச்சிகளுக்கான உணவுகளை அகற்றுவது போன்றவற்றை செய்வதோடு வீட்டு தோட்டத்தில் உள்ள பூச்சிகளை ஒழிக்க பூச்சி மருந்துகளை வாங்கி தெளிக்காமல் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை கடைபிடிப்பதோடு இயற்கையாக பூச்சிகளை விரட்டும் வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
5. பிளாஸ்டிக் கண்டெய்னர்கள்
உணவுகளை எறும்புகளில் இருந்து பாதுகாக்கவும் அடைத்து வைக்கவும் பிளாஸ்டிக் கண்டெய்னர்களை பயன்படுத்துகிறோம். ஆனால் பிளாஸ்டிக் பொருட்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதால் உணவுப் பொருட்களை எவர்சில்வர் கண்டெயினர்களை பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
6. டிரையர் ஷீட்ஸ்
மனிதர்களுக்கு பலவிதமான உடல்நல பிரச்சனைகளை வாஷிங்மெஷினில் பயன்படுத்தும் டிரையர் சீட்டுகளில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. ஆகவே டிரையர் சீட்டுகளுக்கு பதிலாக கம்பளி உலர் பந்துகளை பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
`சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அந்த வகையில் உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் வீட்டில் சௌகரியமாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வசிக்க முடியும். அதனால் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான பொருட்கள் வாங்கி பயன்படுத்தவதை தவிர்ப்பதே புத்திசாலித்தனமாகும்.
மேற்கூறிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான முறையில் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி வீடு என்ற சொர்க்கத்தில் சுகமான வாழ்க்கை பயணத்தை தொடர்வதே சாலச்சிறந்ததாகும்.
சந்தை விளம்பரங்களை நம்பி வாங்கும் ஆபத்தான நச்சுப் பொருட்கள் தடுத்து நிறுத்தி, குறைந்த செலவில் இயற்கையான பாதுகாப்பான சூழலை வீட்டில் உடனடியாக ஏற்படுத்த உதவும்.