

வீட்டில் சிலந்தி வலை இருப்பது ஆபத்தானவை இல்லை என்றாலும் வீட்டை அசுத்தமாக காட்டும். அதனால் அதனை உடனுக்குடன் அகற்றி விடுவது நல்லது. பூச்சிகள் அதிகம் இருப்பதற்கான அறிகுறியாக சிலந்தி வலைகள் இருக்கின்றன. அத்தகைய சிலந்தி வலை உருவாவதை இயற்கையாக தடுக்கலாம். அவற்றை இப்பதிவில் காண்போம்.
சிலந்தி வலை தடுப்பதற்கான இயற்கையான வழிமுறைகள்
1. மிளகுக் கீரை எண்ணெய் (Peppermint)
சிலந்திகளுக்கு மிளகுக்கீரை எண்ணையின் மணம் சுத்தமாக பிடிக்காது. அதனால் தண்ணீருடன் மிளகுக் கீரை (Peppermint) எண்ணெயை கலந்து வீட்டின் மூலைகள், கதவு, ஜன்னல் ஓரங்களிலும் தெளித்தால் இது உருவாவதை தடுக்க முடியும். அதிகப்படியான பலன் பெற ஒரே எண்ணையை பயன்படுத்தாமல் தேயிலை மர எண்ணெய், லாவண்டர் எண்ணெய், இலவங்கப்பட்டை எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
2. வினிகர்
அரை பங்கு வினிகரை, அரை பங்கு தண்ணீருடன் கலந்து ஸ்ப்ரே பாட்டில் மூலம் வீட்டில் இருக்கும் இருண்ட மூலைகளிலும், சுவர்களிலும் தெளித்தால் சிலந்தி வலை உருவாவதை தடுத்துவிடலாம். மர சாமான்கள் மற்றும் பொலிவூட்டப்பட்ட மேற்பரப்புகளில் வினிகர் கலவையை தெளிக்கும் போது அதன் மீது படாமல் கவனமாக தெளிப்பது மிகவும் அவசியமாகும்.
3. வீட்டைச் சுற்றி சிட்ரஸ் செடி வளர்ப்பது
சிட்ரஸ் வகை செடிகளான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றின் வாசனை சிலந்திகளுக்கு பிடிக்காது என்பதால் வீட்டைச் சுற்றிலும் இவ்வகைச் செடிகளை வளர்ப்பது சிலந்திகள் உருவாவதை தடுக்க உதவும்.
4. பூண்டு தண்ணீர்
பூண்டு சாறு, புதினா இலை, கிராம்பு சேர்த்த கலவையை தண்ணீருடன் கலந்து சுவர்கள் மற்றும் ஜன்னல் ஓரங்களில் பயன்படுத்தினால் பூண்டு மற்றும் கிராம்பின் மணம் சிலந்திகளை விரட்டி விடும்.
5. புதினா எண்ணெய்
புதினா எண்ணெய்யை தண்ணீருடன் கலந்து சிலந்திகள் வரும் மூலைகளில் தெளிப்பதன் மூலம் சிலந்தி வலை உருவாவதை தடுக்கலாம்.
6. உப்பு + மண்ணெண்ணெய்
தண்ணீர் ஒரு டம்ளர், மண்ணெண்ணெய் 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 50 ml, உப்பு இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்கு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி குலுக்கி சிலந்தி வலை பின்னும் என சந்தேகிக்கும் வீட்டின் மூலைகளில் தெளித்தால் உப்பின் பண்பு காரணமாக சிலந்தி அந்த இடத்தை விட்டு ஓடிவிடும்.
இந்த ஸ்ப்ரே பயன்படுத்தும் போது குழந்தைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு, மற்ற பொருட்களின் மீது விழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
சிலந்தி வலை கட்டாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
1. பயன்படுத்தாமல் இருக்கும் பெட்டிகள் பழைய செய்தித்தாள்கள், பழைய புத்தகங்கள் போன்றவை சிலந்திகளை ஈர்க்கும் என்பதால் அவற்றை உடனுக்குடன் அகற்றி விடுவதோடு வேக்கம் கிளீனரை( vaccum cleaner) பயன்படுத்தி சுத்தப்படுத்துவதன் மூலம் சிலந்தி வலை உருவாவதை தடுக்கலாம்.
2. கதவுகள் மற்றும் ஜன்னல் ஓரங்களில் பிளவுகள் இருந்தால் அதனை சிமெண்ட் பூச்சு அல்லது சிலிகான் கொண்டு மூடினால் சிலந்தி உருவாவதை தடுக்கலாம்.
3. பூச்சிகளை வெளிச்சம் ஈர்க்கும் என்பதால் இரவு நேரங்களில் அதிகப்படியான மின் விளக்குகள் ஒளிர்வதை அணைப்பதும் சிலந்தி வலை உருவாவதை தடுக்க உதவும்.
4. வெளியில் இருந்து வீட்டிற்குள் பூச்சிகள் நுழைவதை தடுக்க கதவுகள் மற்றும் ஜன்னல்களில் நெட் (window mesh) பயன்படுத்த வேண்டும்.
5. வீட்டைச் சுற்றி புதர் போல செடிகள் வளர்வதை தடுப்பதோடு தேவையில்லாத குப்பைகளை அகற்றுவதும் சிலந்தி வலை உருவாவதை தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றாகும்.
வீட்டை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தப்படுத்தி ஒட்டடை எடுத்து தேவையற்ற பொருட்களை நீக்குவதன் மூலம் பூச்சிகள் வருவதை தடுப்பதோடு நேர்மறை ஆற்றலை ஈர்க்க முடியும். ஆகவே இயற்கையாகவே நம் வீட்டையும் நம் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது.
இனி வார வாரம் ஒட்டடை அடிக்கும் சிரமம் இல்லாமல், வீட்டின் மூலைமுடுக்குகளை எப்போதும் சுத்தமாகவும் நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் பராமரிக்கலாம்.