

வீடு என்பது நாம் உண்டு, உடுத்தி, உறங்கி, உறவுகளோடு மகிழ்ந்திருந்து வாழ்வதற்கென அமைத்துக் கொண்ட ஓர் இடம். அவ்வாறு அமைந்த இல்லத்தை நாம் பத்திரமாக வைத்துப் பாதுகாப்பது அவசியம். திருடர்களிடமிருந்து பாதுகாக்க கதவு மற்றும் ஜன்னல்களைப் பொருத்துகிறோம். நாம் கவனிக்க முடியாத வகையில் கரப்பான் பூச்சி, எறும்பு, ஈக்கள், பல்லி மற்றும் கரையான் போன்ற பல விதமான பலே திருடர்களும் நம் வீட்டிற்குள் புகுந்து தொந்தரவு தருவதுடன் நிற்காமல் நோய்க் கிருமிகள் பரவுவதற்கும் காரணமாகின்றன.
இவற்றில் பலவற்றை கடைகளில் விற்கப்படும் கிருமிநாசினிகளை வாங்கி குறிப்பிட்ட இடைவெளிகளில் அவற்றின் மறைவிடங்களைக் கண்டுபிடித்து, தெளித்து வருவதன் மூலம் விடுதலை பெறலாம். ஆனால், வீட்டிலுள்ள மர சாமான்கள் மற்றும் கதவு, ஜன்னல், சட்டம் (frame) போன்றவற்றை குறி வைத்து, வீட்டிற்குள் கும்பலாக நுழைந்து அவற்றை தின்று தீர்த்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். கரையான் ஒழிக்க நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கரையான் தொல்லையிலிருந்து வீட்டைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
1. வீட்டை, குறிப்பாக கிச்சன், பாத்ரூம், சிங்க் மற்றும் ஸ்டோர் ரூம் போன்ற இடங்களை, தண்ணீர் கசிவினால் உண்டாகும் ஈரப் பிசுபிசுப்பு இல்லாமல், சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்வது அவசியம்.
2. மரத்தாலான வீட்டின் முன் கதவு, சட்டம், ஜன்னல்கள் போன்றவற்றை வெளிப்பகுதியின் மண் பரப்பிற்கு அருகில் இருக்கும்படி வைக்காமல் சற்று தள்ளியே அமைத்து வைப்பது நலம்.
3. வீட்டு சுவர்களை ஒட்டிய வராண்டாவில் பழைய அட்டைப் பெட்டிகள், செய்தித்தாள்கள், விறகுக் கட்டைகள் போன்றவற்றை குவித்து வைக்காமலிருப்பதன் மூலம் அவ்விடத்தில் கரையான் உற்பத்தியாவதை தவிர்க்கலாம்.
4. வீட்டிற்குள்ளிருக்கும் நாற்காலி, ஸ்டூல் போன்ற மர சாமான்களை அடிக்கடி பரிசோதித்து அதில் சிறு துவாரம், கரையான்கள் உருவாக்கும் மண் பாதை அல்லது மரத் துகள்கள் போன்றவை காணப் படுகிறதா? என்பதை கண்டுபிடித்து, உடனடியாக சீர் படுத்துவது நல்லது.
5. பாத்ரூம், கிச்சனிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்களை வீட்டுச் சுவர் அருகே வைக்காமல் சற்றுத் தள்ளி வைப்பதன் மூலமும் கரையான் சுலபமாக வீட்டிற்குள் புகுந்து நாச வேலையை தொடங்க ஆரம்பிப்பதை தடுக்கலாம்.
6. வீட்டிற்குள் ஈர மண்ணாலான கரையான் பாதை தென்பட்ட உடனே பூச்சி கொல்லி மருந்தை தெளித்து அவற்றை கொன்று விடலாம். மேலும் வீட்டிலுள்ள வேப்ப எண்ணெய், கெரோசின், டீசல் மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து கரையான் மீது தெளித்தாலும் அவை இறந்துவிடும். ஆனால், கரையான் மண்ணிற்குள் புற்றுக்கள் (colony) அமைத்து அதிகளவில் வசித்து வருவதால், தொழில் முறை வல்லுநர்களை அழைத்து வீடு முழுக்க பரிசோதித்து தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.
7. வீட்டுக்கு வெளியே தென்னை மரம் இருந்தால் அதிலிருந்து விழும் மட்டைகளை கரையான் அரித்து தின்று உரமாக்கிவிடும். பின் தென்னை மரத்தின் மீதும் மண் பாதை அமைத்து மரப் பட்டையை அரிக்க ஆரம்பிக்கும். எனவே மரத்தை சுற்றி விழும் ஓலை, மட்டை போன்றவற்றை உடனுக்குடன் தூர அப்புறப்படுத்துவதும் நல்லது.
வீட்டிலுள்ள எளிய பொருட்களான வேப்ப எண்ணெய், உப்பு மற்றும் கெரோசின் கலவையைப் பயன்படுத்தி, கரையான்களின் உடனடித் தாக்குதலைத் தடுத்து உங்கள் வீட்டை பூச்சிகளற்ற ஆரோக்கியமான சூழலாக மாற்ற முடியும்.