

நாம் தினமும் வீட்டைப் பெருக்குகிறோம், துடைக்கிறோம் மற்றும் பொருட்களை ஒழுங்குபடுத்துகிறோம். ஆனாலும், ஒரு சில மாதங்களுக்குப் பிறகு வீட்டை உற்று நோக்கினால், ஏதோ ஒரு மூளையில் அழுக்கு தேங்கியிருப்பதையும், வீடு முழுமையான சுத்தத்துடன் இல்லை என்பதையும் நம்மால் உணரமுடியும்.
தினமும் செய்யும் மேலோட்டமான சுத்தம் செய்தல் என்பது வேறு, வீட்டை ஆழமாகச் சுத்தம் செய்வது என்பது வேறு. பொதுவாக 'டீப் கிளீனிங்' என்றாலே அது ஒரு வாரம் பிடிக்கும் வேலை என்று பலரும் மலைத்துப்போய் ஒதுங்கி விடுகிறார்கள். ஆனால் சரியானத் திட்டமிடலும், நிபுணர்களின் யுக்திகளும் இருந்தால், ஒரே நாளில் வீட்டைப் புத்தம் புதியது போல மாற்ற முடியும். அதற்கான எளிய மற்றும் நடைமுறைக்கு ஏற்ற வழிமுறைகளைப் பார்ப்போம் வாங்க.
குப்பைகளை அகற்றுங்கள்!
சுத்தம் செய்யத் தொடங்கும் முன், கையில் துடைப்பத்தையோ அல்லது மாப்பையோ எடுப்பது மிகப்பெரிய தவறு. முதலில் தரையில் மற்றும் மேஜைகளில் சிதறிக் கிடக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். கலைந்து கிடக்கும் துணிகள், விளையாட்டுப் பொம்மைகள், பழைய காகிதங்கள் ஆகியவற்றை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும். இடத்தைக் காலி செய்யாமல் சுத்தம் செய்வது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். குப்பைகளை முதலில் அகற்றிவிட்டால், சுத்தம் செய்வதற்குப் போதிய இடவசதி கிடைக்கும்.
ஈரத்திற்கு முன் தூசி!
தரையைத் துடைப்பதற்கு முன்பாக, வீடு முழுவதும் உள்ள தூசியை அகற்றவேண்டும். வேக்யூம் கிளீனர் அல்லது டஸ்டர் கொண்டு ஒட்டடை அடிப்பது மற்றும் ஜன்னல் கம்பிகளில் உள்ள தூசியைத் தட்டுவது அவசியம். நேரடியாக ஈரத் துணியைக் கொண்டு துடைத்தால், தூசியானது சேறாக மாறி அந்த இடத்திலேயே ஒட்டிக்கொள்ளும். எனவே உலர்வாக இருக்கும்போதே தூசியை விரட்டுவது வேலையை எளிதாக்கும்.
கடினமான வேலைகளுக்கு முன்னுரிமை!
சுத்தம் செய்யத் தொடங்கும்போது நம் உடலில் ஆற்றல் அதிகமாக இருக்கும். அந்தச் சமயத்தில் வீட்டின் மிக முக்கியமான மற்றும் கடினமான பகுதிகளான சமையலறை மற்றும் குளியலறையைக் கையிலெடுக்க வேண்டும். இவைதான் அதிக கிருமிகள் சேரும் மற்றும் துர்நாற்றம் வீசக்கூடிய இடங்கள். சிங்கில் உள்ள பாத்திரங்களைக் கழுவிவிட்டு, மேடைகளைத் துடைக்க வேண்டும். சோர்வு வருவதற்குள் இந்தப் பெரிய வேலைகளை முடித்துவிட்டால் பாதிச் சுமை குறைந்தது போல இருக்கும். படுக்கையறை மற்றும் ஹால் போன்றவற்றை அடுத்ததாகச் சுத்தம் செய்யலாம்.
சுத்தம் செய்யும்போது எப்போதும் புவிஈர்ப்பு விதியை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, வீட்டின் மேல்பகுதியிலிருந்து கீழ்ப்பகுதிக்குச் சுத்தம் செய்ய வேண்டும். முதலில் மின்விசிறி, பரண்கள் மற்றும் அலமாரியின் மேற்பகுதியைத் துடைக்க வேண்டும். அதன் பிறகு மேஜை, நாற்காலி மற்றும் இறுதியாகத் தரையைச் சுத்தம் செய்யவேண்டும். இதை மாற்றிக்கொண்டால், சுத்தமான தரையில் மீண்டும் மேலே இருந்து தூசி விழுந்து வேலையை இரட்டிப்பாக்கிவிடும். படுக்கை விரிப்புகளை மாற்றும் போது, அதில் உள்ள தூசியைத் தட்டிவிட்டு, அது கீழே படிந்த பிறகு தரையைச் சுத்தம் செய்வது புத்திசாலித்தனம்.
நாம் தினமும் பார்க்கும் இடங்களை விட, நம் கண்ணில் படாத இடங்களில் தான் அழுக்குகள் ராஜ்ஜியம் நடத்தும். ஃபிரிட்ஜின் மேல் பகுதி, கதவின் கைப்பிடிகள், ஏசி வென்ட்கள், சோபாவிற்கு அடியில் உள்ள இடம் மற்றும் பேஸ்போர்டுகள் ஆகியவற்றைத் தவறாமல் துடைக்க வேண்டும். இந்த இடங்களைச் சுத்தம் செய்வதுதான் வீட்டின் உண்மையான சுகாதாரத்தை மேம்படுத்தும்.