

கணவன் மனைவி உறவு என்பது இருவரும் ஒரு அணியாக ஒன்றாக சேர்ந்து விளையாடுவது போன்றது. தம்பதிகள் இருவரும் இணைந்து விளையாட்டு என்ற வாழ்க்கையில் விளையாடும்போது தான் வெற்றி கிடைக்கும். இதில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும்போது வாழ்க்கை சுவாரசியமாகிறது. இதில் தோற்பவர்கள் மற்றவரது உள்ளத்தை வெல்கின்றனர். தோல்வி என்பது இங்கு நேர்மறை வார்த்தையாக மாறிவிடுகிறது. அந்த வகையில் கணவன் மனைவி உறவு இனிமையாக அமைய இருவரும் பின்பற்ற வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கணவன் மனைவி இருவரும் சம்பாதிக்கும் இந்த காலகட்டத்தில் என்னை மதிக்க வேண்டும்; என் பேச்சைக் கேட்க வேண்டும்; எனக்கு மரியாதை வேண்டும் என தன்னை மட்டுமே யோசிப்பதை விட்டால்தான் வாழ்க்கைத் துணையின் விருப்பங்கள் நமக்கு தெரிய வரும். ஆகவே 'என்னை 'என்பதை விட்டு 'நமக்கு' என்ன என்று யோசித்தால் கணவன் மனைவி உறவு ஈகோ இல்லாமல் இனிமையாக அமையும்.
திருமணநாள், பிறந்தநாள், முதல் முதலாய் சந்தித்த நாள் ஆகிய முக்கிய தினங்களில் உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு ஆச்சரிய பரிசுகளை வழங்கும்போது காதலும் அன்பும் மிகுதியாகும். தனக்கான முக்கியத்துவம் கிடைத்ததை நினைத்து கணவன் மனைவி உறவு பலப்படும்.
திருமணத்திற்கு முன்னர் செய்த அதிகமாக அவுட்டிங் செல்வது, செல்போனில் குறிப்பிட்ட நேரம் பேசுவது, அடிக்கடி தன்னை அப்டேட் செய்துகொள்வது போன்றவற்றை ஆண்கள் திருமணத்திற்கு பிறகும் தவறாமல் செய்யும்போது இருவரது கருத்துகளும் பரிமாறப்பட்டு, புரிதல் மிகுதியாகி வாழ்க்கை இன்பமயமானதாக மாறிவிடும்.
கணவன் மனைவி இருவரும் 'மூட் அவுட்' ஆனால் அதற்கு இதுதான் காரணம் என்பதை ஒருவருக்கொருவர் முன்பே சொல்லிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தனிமை தேவைப்படும் அந்த நேரத்தில் கோபமாக ஒருவர் மற்றவரை திட்டும்போது விலகிச்செல்ல ஏதுவாக அமையும். மறுநாள் இருவரது மனதும் ஒன்றாக மாறி வாழ்க்கை இதமாக அமையும்.
கணவன் மனைவிக்குள் சின்ன சண்டை ஆரம்பிக்கும்போது முதல் நாள் துவங்கி என்னென்ன தவறுகள் நடந்தது என ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அப்போதைய சின்ன சண்டைக்கான தீர்வை காணும்போது பிரச்னைகள் பெரிதாகாமல் வாழ்க்கை வளமாக அமையும்.
கணவன் மனைவி இருவரும் 'நான்' என்ற அகங்காரத்தை குறைத்துக்கொண்டு 'உனக்காக நான்' என மாற்றிக் கொண்டு, சிறு சிறு விஷயங்களுக்கு விட்டுக் கொடுப்பதோடு சிறு சிறு தவறுகளை மன்னிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் வாழ்க்கை இலகுவாக அமைந்துவிடும்.
கணவன் மனைவி உறவில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும்போது அந்த நேரத்தில் அமைதியாக இருந்து,' இதுவும் கடந்து போகும்' என்ற நம்பிக்கையுடன் இருந்தால் மனவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
கணவன் மனைவி இருவரில் ஒருவர் தவறு செய்தால் மன்னித்து விடுவதோடு' எல்லா மனிதர்களும் குறையுள்ளவர்கள்' தான் என புரிந்து கொண்டு தானும் தவறு செய்ய நேரிடும் என நினைத்து மன்னித்துவிட்டால் மலை போன்ற குறைகள் கூட கடுகுபோல சிறியதாக மாறிவிடும்.
கணவன் மனைவி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டால் யார் மீது தவறு இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு என்ன முயற்சி மேற்கொள்ளலாம் என யோசித்து அதன்படி செயலாற்றினால் கணவன் மனைவி உறவு உன்னதமாக மாறிவிடும்.