

ஒருவருடன் சில நாட்கள் பழகும் போது நம் புத்திக்கும் ஆழ் மனதுக்கும் புரியும் இவரை நாம் எந்த அளவு நம்பலாம் என்று. அதேபோல் இவர் பொய் சொல்கிறாரா? உண்மையைத்தான் சொல்கிறாரா என்று நம் உள்ளுணர்வு தெளிவாக புரிய வைக்கும். சில சமயம் நம் அனுபவங்களும் நமக்கு துணையாக இருக்கும். இருப்பினும் அதையும் தாண்டி சில நேரங்களில் நாம் ஏமாந்து போகத்தான் செய்கிறோம்.
முழுமையாக நம்புவது:
தன்னுடன் பழகுபவர்களை உடனடியாக நல்லவர்கள் என்று நினைத்து நம்பிவிடும் குணமுடையவர்கள் இவர்கள். இவர்களிடம் ரகசியங்களைக் காப்பது என்பது சற்றே கடினமான விஷயம்தான். இவர்களின் வெள்ளந்தியான குணத்தால் பிறரிடம் எளிதில் ஏமாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளவர்கள். இப்படி கண்மூடித்தனமாக நம்புவது சரியில்லை என்பதைக் கூட உணர மாட்டார்கள். பிறர் மீது அதிக அன்பும், நேர்மறை எண்ணமும் கொண்டவர்கள்.
பிறரிடம் அதிக நம்பிக்கை வைப்பது இவர்களுடைய பலவீனம்.
பகுப்பாய்வு செய்து நம்பும் ரகம்:
இவர்கள் ஒருவரை அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். முக்கியமாக யாரையும் முழுமையாக நம்ப மாட்டார்கள். எதிரில் உள்ளவர்களின் செயல்களை உற்று கவனிப்பதும், இவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களா, தகுதியானவர்களா என்று உறுதி செய்த பிறகே பிறருக்கு நம்பிக்கை வழங்கும் விதமாக இருப்பார்கள்.
ஒருவரைப் பற்றி முழுமையாக ஆராய்ந்த பின்னரே, அவர்களை நம்பலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்பார்கள்.
தகுந்த ஆதாரங்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் மட்டுமே நம்பிக்கையை வழங்குவார்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள். ஒருவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் வரை தங்களுடைய எல்லைகளைத் தாண்ட மாட்டார்கள். மற்றவர்களின் நடவடிக்கைகள், பேச்சு மற்றும் நேர்மையை நீண்ட காலம் கவனித்த பிறகே அவர்களிடம் நெருங்குவார்கள்.
இவர்களது நம்பிக்கை காலம் கடந்தும் நிலைத்து நிற்கும். இவர்களை ஏமாற்றுவது கடினம். ஆனால் இவர்களிடம் பழகுவதற்கு கூடுதல் காலம் எடுக்கும்.
சந்தேகப்படும் ரகம்:
இவர்களோ முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்பவர்கள். இவர்கள் ஆரம்பத்திலேயே யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். இவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது என்பது மிகவும் கடினமான விஷயம். தற்காப்பு உணர்வு என்பது இவர்களிடம் எப்போதுமே அதிகமாக இருக்கும்.
கடந்த கால ஏமாற்றங்கள் அல்லது அனுபவங்கள் இவர்களை இப்படி எச்சரிக்கையாக மாற்றி இருக்கும். இவர்கள் எதற்கும் ஒரு பாதுகாப்பு எல்லை வைத்துக் கொண்டே பழகுவார்கள். எளிதில் யாரையும் நம்பாமல், அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதே இவர்களின் குணம். புதிதாக சந்திப்பவர்களிடம் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். எதார்த்தமாக சூழ்நிலையைக் கணித்து தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.
நம் மக்களிடம் ஒரு குறை உண்டு. பிறரை அளவுக்கு அதிகமாக சந்தேகப்படுவது, இல்லை என்றால் அளவுக்கு அதிகமாக நம்புவது. இந்த இரண்டுமே தவறுதான். ஏமாந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள் என்று? அதற்கு அவர்களிடம் இருந்து வரும் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா? நன்றாகத்தான் பழகினார்கள்; பேசினார்கள்.
ஆனால் இப்படி ஏமாற்றுவார்கள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பார்கள். ஆகவே முழுமையாக ஒருவரை நம்பினால் கூட ஒரு சிறு அளவாவது மேற்பார்வை செய்து கொண்டே இருக்க வேண்டும். காரணம் நாம் யாரை முழுமையாக நம்புகிறோமோ அவர்கள் சில சமயம் நம்மை ஏமாற்றுவார்கள். இதை நம்புவது கடினமாக இருந்தாலும் உண்மை நிலை இதுதான்.
ஆகவே கிராஸ் செக் செய்து கொள்வது நல்லது. ஆனால் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். எல்லா மனிதர்களும் மோசமானவர்கள் கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவர்களை அப்படி செயல்பட வைக்கிறது.
இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம் நீங்கள் பிறரின் குணநலன்களைச் சரியாகக் கணித்து, கண்மூடித்தனமான நம்பிக்கையால் ஏற்படும் ஏமாற்றங்களைத் தடுத்து, வாழ்க்கையில் சரியான மனிதர்களை எடைபோடுவது எல்லைகளுடன் பழகும் திறனைப் பெறுவீர்கள்.