

Water tank cooling tips: கோடைக்காலத்தில் வெளியில் தான் வெயில் என்றால், வீட்டிற்குள் குழாயை திறந்தால் அதிலிருந்து வரும் தண்ணீர் கொதிக்கும் வெந்நீராக வருகிறது. கைகளை கூட கழுவ முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும் நீராக இது மாறுவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டிகள் வெயிலில் காய்வது தான் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த பெரிய பிரச்சனையை சரிசெய்ய சில அட்டகாசமான வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நிறம் மற்றும் பெயிண்ட்!
பொதுவாக பலரது வீடுகளில் கருப்பு நிற தண்ணீர் தொட்டிகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கருப்பு நிறம் மிக வேகமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டது. இனி புதிதாக தொட்டி வாங்கினால் வெள்ளை அல்லது வெளிர் நிறங்களில் வாங்குவது மிகவும் சிறந்தது.
பழைய தொட்டியை மாற்ற முடியாது என்றால், அதன் மீது வெள்ளை பெயிண்ட் அல்லது சுண்ணாம்பு அடிப்பது சூரியக் கதிர்களை பிரதிபலித்து தண்ணீரை எப்போதும் குளிர்ச்சியாக வைக்கும்.
நிழற்குடை!
தொட்டியின் மீது நேரடியாக வெயில் படுவதை தடுக்க ஒரு சிறிய கொட்டகை அமைப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். தகரம் அல்லது ஃபைபர் ஷீட்களை கொண்டு இதனை எளிதாக அமைக்கலாம். குறைந்த செலவில் செய்ய நினைப்பவர்கள், சந்தையில் கிடைக்கும் பச்சை நிற வலைகளை தொட்டியின் மீது கட்டி வைக்கலாம். இது சீரான காற்றோட்டத்தை அனுமதிப்பதோடு, வெப்பத்தை பெருமளவு குறைக்கிறது.
தெர்மோகோல் மற்றும் சாக்குப்பை!
பொருட்களை பேக் செய்ய பயன்படும் தெர்மோகோல் வெப்பத்தைத் தடுக்கும் ஒரு சிறந்த கவசமாக செயல்படும். தடிமனான தெர்மோகோல் அட்டைகளை கடைகளில் வாங்கி தொட்டியை சுற்றி கட்டி வைக்கலாம். இது வெளியில் உள்ள வெப்பம் தொட்டிக்குள் செல்வதை முற்றிலுமாக தடுக்கும்.
அதேபோல, பழைய சணல் சாக்குகளை தொட்டியின் மீது போர்த்தி, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதில் தண்ணீர் தெளித்து விடலாம். இது கிராமங்களில் இன்றும் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான தந்திரமாகும்.
செடிகள்!
சுட்டெரிக்கும் மதிய நேரங்களில் மோட்டாரை போட்டு தொட்டியை நிரப்புவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதிகாலை அல்லது இரவு நேரங்களில் தண்ணீரை ஏற்றினால், அது நீண்ட நேரத்திற்கு குளிர்ச்சியாகவே இருக்கும். மேலும், தொட்டியை சுற்றி மணி பிளான்ட் போன்ற கொடி வகைகளை வளர்ப்பது அந்த இடத்தை எப்போதும் குளுமையாக வைத்திருக்க மிகச் சிறப்பாக உதவும்.
குழாய்களில் உள்ள தண்ணீர்!
மாடியில் தொட்டியில் தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தாலும், சுவர்களில் உள்ள பைப்புகளில் தங்கியுள்ள நீர் சுடுநீராகவே இருக்கும். குளிக்க செல்வதற்கு முன்பாக, குழாயை திறந்து முதல் இரண்டு வாளி தண்ணீரை பிடித்து செடிகளுக்கோ அல்லது வேறு வீட்டு வேலைகளுக்கோ பயன்படுத்தி விடுங்கள். அதன் பிறகு வரும் தண்ணீர் மிகவும் இதமாக இருக்கும்.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் ஏசி மற்றும் கூலர்களை பயன்படுத்துவது போல, நமது அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீரையும் குளிர்ச்சியாக வைக்க இந்த சிறிய மாற்றங்கள் பெரிதும் உதவும். அதிக செலவு இல்லாமல் வீட்டிற்கு அருகில் கிடைக்கும் பொருட்களை வைத்தே இந்த தந்திரங்களை நீங்கள் சுலபமாக செய்து முடிக்கலாம்.