மருத்துவம் என்பது வெறும் நோய், மருந்து சார்ந்தது மட்டுமல்ல; முக்கியமாக மனம் சார்ந்தது. அநேக உடல் நல பாதிப்புகளும் மன நல பாதிப்பின் காரணமாகவே ஏற்படுகின்றன. பிழிய, பிழிய மன உளைச்சலுடன் வாழும் நாம், என்ன நல்ல உணவும், சத்து மாத்திரைகளும் எடுத்துக் கொண்டாலும் நிரந்தர நோயாளியாகத்தான் வாழ்கின்றோம் என்பதே உண்மை. மன உளைச்சல், சோர்வு, கவலை, நிம்மதியின்மை இவற்றால்தான் இன்று மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. வீட்டிலும் சரி. வேலை செய்யும் இடத்திலும் சரி ஒருவர் நற்பெயர் எடுப்பதற்கு இரண்டு காரியங்கள் நன்றாக இருக்க வேண்டும். அவை. உடல் மற்றும் மனம்.
உடலும் மனமும் சிறப்புற இருந்தால்தான், நம் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். உடல் சுறுசுறுப்பாக இருந்து. மனம் சோர்வுற்றாலோ அல்லது மனம் விழிப்புணர்வுடன் இருந்து உடல் சோர்வாக இருந்தாலோ நமது செயல்பாடுகள் சிறப்பாக அமையாமல் போவதோடு, நற்பெயர் எடுப்பதும் கடினமாகி விடும்! உடல் நலத்திற்காக சில நூறாயிரங்களை மருத்துவமனைகளில் செலவழிப்பவர்கள் தங்களது மன நலத்திற்காக நல்ல முயற்சிகள் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை.
ஒருவரின் எண்ணங்களும், செயல்களும், உணர்ச்சிகளும், தன்னையும், பிறரையும் பாதிக்காத அளவுக்கு இருக்குமேயானால் அதுதான் சிறந்த மனநலம். அதைப் பேணுவதும் போற்றிப் பாதுகாப்பதும் அவசியம். அதில் சிக்கல் ஏற்பட்டாலே மனநலம் பாதிக்கப்படும். இதனால் பல விளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடும்.
மனித வாழ்வில் வெற்றி பெற உடலும், மனமும் சேர்ந்து சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். இரண்டில் ஒன்று சோர்ந்து போனாலும்கூட, நம்மால் சுமூகமாக இயங்க முடியாது. உடல் நலம் சரியில்லாததாலும், மனம் தொடர்பான பல சிக்கல்களாலும் ஏராளமானோர் வாழ்க்கையில் தோல்வியடைந்துள்ளனர். மனமும், உடலும் சரியாக இருந்து மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக வாழ்வதே ஆரோக்கிய வாழ்க்கை என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.