இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ஒரு மனிதன் அறுபது வயதை அடைவது என்பது ஒரு பெரும் சாதனைதான். அதிலும் உடல் நலத்தோடு அறுபது வயதை அடைபவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். 60 வயதிலிருந்து 70 வயதை எந்த சிக்கலும் இன்றி வெற்றிகரமாக நெருங்க வேண்டும். ஏனென்றால், நமது குழந்தைகளுக்கு நமது அனுபவ அறிவு நிச்சயம் பயன்படும்.
அறுபது வருட வாழ்க்கை உங்களுக்கு பலவிதமான அனுபவ அறிவைக் கொடுத்திருக்கும். அதனால் நீங்கள் இனி எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எந்த ஒரு கடினமாக சூழ்நிலையையும் உங்கள் அனுபவ அறிவின் மூலம் நீங்கள் எளிதாகச் சமாளிக்கலாம். எனவே, கவலையின்றி கூடுமானவரை மகிழ்ச்சியாக இருக்கப் பாருங்கள்.
உங்களுக்கு அறுபது வயதாகி விட்டது. நீங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பலர் இந்த வயதை ஏற்றுக்கொள்ள மனமின்றி, ‘நான் இன்னும் இளைஞன்தான்’ என்ற மனநிலையில் வேகமாக செயல்படுபவர்களாகவே இருக்கிறார்கள். குளியலறை முதலான இடங்களில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தற்காலத்தில் எப்போதும் போல பரபரப்பாக செயல்பட்டு கவனக்குறைவால் குளியறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு பல முதியவர்கள் மருத்துவமனையை நாடுகிறார்கள். இதனால் அவர்களுக்கும் சிரமம், வீட்டில் உள்ளவர்களுக்கும் சிரமம்.
அறுபது வயதை அடைந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் நீங்கள் நடக்கும் வேகத்தை கட்டாயம் குறைத்துகொள்ள வேண்டும். மிக வேகமாகவோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ நடக்கக் கூடாது. மிதமான வேகத்தில் கவனமாக நடக்கப் பழக வேண்டும்.
மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவராக இருந்தால் அதைத் தவிர்த்து விட்டு கியர் இல்லாத எடை குறைவான ஆட்டோகியர் வாகனங்களை ஓட்ட வேண்டும். அப்படியே ஓட்டும்போது குறைவான வேகத்திலேயே வாகனத்தை ஓட்ட வேண்டும். ‘ஃபேனைத் துடைக்கிறேன், ஒட்டடை அடிக்கிறேன்’ என்று பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் ஸ்டூல்களின் மீது ஏறி நின்று எதையும் செய்யாதீர்கள். நாற்காலி, ஸ்டூல் முதலானவற்றின் மீதிருந்து விழுந்து கை கால்களை உடைத்துக் கொள்ளுபவர்கள் அதிகம்.
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. உங்கள் அன்றாடப் பணிகளை சரியாகச் செய்தவண்ணம் இருங்கள். யாராவது உங்களிடம் வந்து பேசினால் பேசுங்கள். அவர்களிடமும் தேவையின்றி எதையும் பேசாதீர்கள். நேர்மறையான விஷயங்களை மட்டுமே பேசுங்கள். முக்கியமாக, ஒரு ரூபாய் கூட யாருக்கும் கடனாகத் தராதீர்கள்.
அறுபது வயதுக்கு மேல் பணம் என்பது ஒரு அவசியத் தேவையாகும். இருக்கும் பணத்தை இரக்கப்பட்டு யாருக்காவது கொடுத்து விட்டு அது திரும்ப வரவில்லை என்றால் உங்கள் நிலை மிகவும் பரிதாபகரமாகி விடும். அதேபோல், யாரிடமும் ஒரு ரூபாய் கூட கடன் வாங்காதீர்கள். கடன் வாங்கி அதைத் திருப்பித் தர முடியவில்லை என்றால் மிகவும் சிரமமான நிலைக்கு ஆளாகக் கூடும். மனஉளைச்சல் உங்கள் உடல் நலத்தை பாதித்து விடும்.
தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடன் அவசரத் தேவைக்கு சிறிதளவு குடிதண்ணீரை எடுத்துச் செல்லுங்கள். எதிரில் வருபவர்களைப் பார்த்து புன்னகை செய்யுங்கள். சர்க்கரை நோய் இருந்தால் பாக்கெட்டில் இரண்டொரு சாக்லெட் வைத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் அதிகமாக நடப்பதன் காரணமாக சர்க்கரையின் அளவு குறைந்து மயக்கம் வரலாம். அத்தகைய சமயங்களில் ஒரு சாக்லெட்டை சாப்பிட்டு நிலைமையை சமாளித்துக் கொள்ளலாம்.
கூடுமான வரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கப் பாருங்கள். அப்படியே போக வேண்டும் என்றால் உடன் ஒருவரை கட்டாயம் துணைக்கு அழைத்துச் செல்லுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்ளுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு பேசி மகிழ்வது உங்கள் மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.