மழைக்காலங்கள் மற்றும் வெயில் காலங்களில் பூச்சிக்கடிகள் வயதுவரம்பின்றி பெறுகும். அதுபோன்ற நாட்களில் பூச்சிக்கடியின் தீவிரத்தை உணர்ந்து மருத்துவமனையை அணுக வேண்டியது அவசியம் தான். ஆனால் அதற்கு முன்னதாக பூச்சிக் கடி ஏற்பட்ட இடத்தில் உடனடியாக கைவைத்தியம் செய்துகொள்வது நல்லது. இல்லையேல் அதன் தாக்கமும், பக்கவிளைவுகளும் மிகவும் மோசமானதாக மாறிவிடும். எளியமுறையில் வீட்டிலேயே பூச்சிக் கடி ஏற்பட்ட உடனேயே செய்ய வேண்டிய பத்து கைவைத்தியங்கள்.
அன்றாடம் வீட்டில் பயன்படுத்துகிற சமையல் பொருள்களில் ஒன்றுதான் சின்ன வெங்காயம். எறும்பு மற்றும் கொசு போன்ற பூச்சிகள் நம்மை கடித்துவிட்டால் சின்ன வெங்காயத்தின் சாற்றினை பூச்சிகள் கடித்த இடத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் பூச்சி கடி விரைவில் குணமாகும். மேலும் சின்ன வெங்காயத்தை வெட்டி பூச்சிக்கடி உள்ள இடத்தில் நேரடியாக தேய்த்தால் கூட இன்னும் அதிக பலன் கிடைக்கும்.
பப்பாளி பழத்தில் உள்ள பகுதிகள் பூச்சிக்கடியால் ஏற்படும் விஷத்தை முறியடிக்க உதவுகின்றன. பூச்சி கடியின் உடனடி நிவாரணத்திற்காக பூச்சியின் கொடுக்கு உள்ள இடத்தில் இந்த பழத் துண்டுகளை வெட்டி வைத்தால் எளிதாக குணமடையும்.
பொதுவாகவே புதினாவில் அதிகளவிலான குளிர்ந்த தன்மை நிறைந்துள்ளது. இது பூச்சிக் கடியால் ஏற்படும் அரிப்புகளை குறைக்கும். அதோடு துளசி இலைகளை எடுத்து நன்றாக கைகளினால் நசுக்கி அதை பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து முதலில் தடவ வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் பிறகு எண்ணெய்யை அதன்மேல் தடவினால் நன்மை கிடைக்கும்.
டூத்பேஸ்ட்டில் மெந்தால் மற்றும் பேக்கிங் சோடா போன்றவை நிறைந்திருக்கின்றன. சில காட்டன் பஞ்சுகளை எடுத்து அதில் டூத்பேஸ்ட்டை வைத்து பூச்சிக் கடி ஏற்பட்ட இடத்தில் அதை வைக்க வேண்டும். இது பூச்சிக்கடிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
அதிகளவிலான மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களுள் ஒன்று தான் தேன். பூச்சி கடி உள்ள இடத்தில் தேனை எடுத்துத் தேய்க்க வேண்டும். இவ்வாறு தேனை தேய்ப்பதினால் எரிச்சலிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி தேனில் அதிகமான ஆன்டி-பாக்டீரியல் தன்மை நிறைந்திருக்கின்றன.எனவே இதனால் எரிச்சல் மேலும் அதிகமாகாமல் குறைக்கப்படும்.
நம்முடைய அன்றாட உணவோடு பிணைக்கப்பட்ட ஒரு பொருளாக கருதப்படுவதுதான் பூண்டு. இது இயற்கையாகவே எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாகும். முதலில் பூண்டை நன்றாக நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு பூச்சி கடி பட்ட இடத்தில் நசுக்கிய பூண்டை நன்றாக வைத்து தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்த்தால் பூச்சி கடி பிரச்சனையிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.
கற்றாழை என்பது அனைவரின் வீட்டு தோட்டங்களிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகின்றது. பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் பூச்சிக்கடி பாதிப்பானது விரைவில் விலகும்.
அடியோ அல்லது காயமோ ஏற்பட்டால் முதலாவதாக ஐஸ் பேக் ஒத்தடம் வைப்பது வழக்கம் தான். அதேபோல பூச்சிக்கடி ஏற்பட்ட உடன் அந்த இடத்தில் 20 நிமிடங்கள் ஐஸ் கட்டியை வைத்து உடனடியாக ஒத்தடம் வைக்கவேண்டும். இதன்மூலம் பூச்சிக்கடி பகுதியானது உணர்வு இல்லாமல் ஆகும். அதோடு அதனால் ஏற்பட்ட வீக்கமும் குறையும்.
டீ பேக்குகளில் உள்ள தேயிலை குளிர்ச்சியான தன்மையை போக்க உதவும். தேயிலையில் உள்ள சத்துக்கள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. எனவே பூச்சிக் கடிக்கு இந்த டீ பேக் மூலம் முதலுதவி செய்துகொள்வது நல்லது.
மருத்துவக் குணங்கள் நிறைந்தது சுண்ணாம்பு. பூச்சிக் கடி ஏற்பட்ட இடத்தில் சுண்ணாம்பைக் குழைத்து அந்த இடத்தில் பற்றாகப் போட்டுகொள்ளலாம். இதனால் அந்த இடத்தில் விஷம் இருந்தாலும் இறங்கிவிடும். வலியும் மெதுவாக குறையும்.
இவை அனைத்தும் பூச்சிக்கடித்தவுடன் செய்ய வேண்டிய மிகச்சிறந்த முதலுதவி சிகிச்சைகள் ஆகும். வலியின் தீவிரம் பொறுத்து மருத்துவரிடம் சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்னதாக செய்ய வேண்டியவை. வீக்கம் அல்லது பாதிப்பின் தன்மையை குறைத்துக்கொள்வதற்காக ஒவ்வொருவருமே இதுபோன்ற கைவைத்தியத்தை தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். முதலுதவி சிகிச்சைகள் செய்து கொண்டு, மருத்துவரை அவசியம் அணுகி நேரிடை சிகிச்சைப் பெற்றுக் கொள்வது அவசியம்.