முதலிரவில் பால் குடிக்காவிட்டால் அபசகுனமா? உண்மையான காரணம் தெரிஞ்சா அசந்துடுவீங்க!

First Night
First Night
Published on

தமிழ் திரைப்படங்கள் தொடங்கி நாடகங்கள் வரை, திருமணம் முடிந்த முதலிரவுக் காட்சி என்றாலே மணப்பெண் கையில் ஒரு சொம்பு பாலுடன் அறைக்குள் நுழைவது தவிர்க்க முடியாத ஒரு பிம்பமாகிவிட்டது. ஏன் இந்த வழக்கம் வந்தது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? "அது சம்பிரதாயம்" என்று பெரியவர்கள் ஒற்றை வரியில் முடித்துவிடுவார்கள். ஆனால், நம் முன்னோர்கள் உருவாக்கிய ஒவ்வொரு பழக்கத்திற்குப் பின்னாலும் ஒரு வாழ்வியல் காரணமும், ஆரோக்கியக் காரணமும் மறைந்திருக்கும்.

களைப்பைப் போக்கும்!

 திருமணம் என்பது மணமேடையில் நடக்கும் சில மணி நேர நிகழ்வு மட்டுமல்ல. அதற்குப் பல வாரங்களுக்கு முன்பே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். அலைச்சல், தூக்கமின்மை, உறவினர்களைக் கவனித்தல், சடங்குகள் என மணமக்கள் இருவரும் திருமண நாளன்று உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் சோர்ந்து போயிருப்பார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுக்குத் தேவை உடனடி ஆற்றல்.

இன்றைய காலத்தைப் போல Energy Drinks இல்லாத அந்தக் காலத்தில், பாலே சிறந்த நிவாரணியாக இருந்தது. பாலில் இயற்கையாகவே உடல் சோர்வை நீக்கி, நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. இதனுடன் சேர்க்கப்படும் ஏலக்காய், பாதாம் மற்றும் குங்குமப்பூ போன்றவை உடலுக்குத் தேவையான சூட்டையும், கிளர்ச்சியையும் தருவதோடு, ஜீரண மண்டலத்தையும் சீராக்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு 'ரீசார்ஜ்' பானம்.

முன்பெல்லாம் அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் தான் திருமணம் செய்துகொள்வார்கள். முதன்முதலாகத் தனிமையில் சந்திக்கும்போது, ஒருவித கூச்சமும் தயக்கமும் இருப்பது இயற்கை. அந்தத் தயக்கத்தை உடைக்க இந்தப் பால் பகிர்தல் உதவும். ஒரே டம்ளரில் இருக்கும் பாலை கணவனும் மனைவியும் பாதிப் பாதியாகப் பகிர்ந்து குடிப்பது என்பது, வெறும் பசியைத் தணிப்பதற்கு மட்டுமல்ல.

"இனி வரும் காலங்களில் வாழ்க்கையின் இன்பத்திலும் சரி, துன்பத்திலும் சரி, நாம் இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வோம்" என்ற உறுதிமொழியின் அடையாளமே இந்தப் பால் அருந்தும் சடங்கு. இது இருவரிடையே ஒரு நெருக்கத்தையும், புரிதலையும் உண்டாக்க வழிவகுக்கிறது.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் வாடகை ஒப்பந்தம் இனி கட்டாயம்: பதிவு செய்யாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?
First Night

கட்டாயம் பின்பற்ற வேண்டுமா? இது ஒரு அழகிய மரபு தான் என்றாலும், இதைக் கட்டாயச் சட்டமாகப் பார்க்கத் தேவையில்லை. இன்றைய நவீன காலத்தில் பலருக்குப் பால் ஒவ்வாமை இருக்கலாம் அல்லது பால் பிடிக்காமல் இருக்கலாம். அத்தகைய சூழலில், "பால் குடிக்காவிட்டால் அபசகுனம்" என்று பயப்படத் தேவையில்லை. பாலுக்குப் பதிலாகப் பழச்சாறோ அல்லது தண்ணீர் மட்டுமோ கூட அருந்தலாம்.

முதலிரவில் பால் கொடுப்பது என்பது உடல் ஆரோக்கியத்தையும், மனதின் நெருக்கத்தையும் மையமாகக் கொண்ட ஒரு ஏற்பாடே தவிர, அது ஒரு மூடநம்பிக்கை அல்ல. தம்பதியினரின் விருப்பமே இதில் முக்கியம். அன்பு, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் தொடங்கும் வாழ்க்கையே சிறந்தது. அது பாலுடன் தொடங்குகிறதா அல்லது பழச்சாறுடன் தொடங்குகிறதா என்பது முக்கியமல்ல; எப்படித் தொடங்குகிறது என்பதே முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com