

வீட்டுச்சாவி, பர்ஸ், மொபைல் போன் என்று அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களை அடிக்கடி எங்கே வைத்தோம் என்று தேடுவது மனிதர்களின் வழக்கம். உடன் படித்த வகுப்புத் தோழர்கள் சிலரை நீண்ட வருடங்கள் கழித்து பார்க்கும்போது அவர்கள் பெயர் மறந்துவிடும். இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொருட்களை மறந்து வைத்துவிட்டு தேடுவதும், தெரிந்தவர்களின் பெயர்களை மறப்பதும், பேசும்போது தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று சமாளிப்பது பலரிடமும் இருக்கும் ஒரு வழக்கமாகும். ஆனால், இவை ஒருவருக்கு தெரியாமல் நடப்பதில்லை என்கிறார் சிக்மண்ட் ஃபிராய்ட் என்கிற உளவியலாளர். அதற்குப் பின்னால் ஒரு மறைக்கப்பட்ட உளவியல் காரணம் இருக்கிறது என்கிறார் ஃபிராய்ட்.
தற்செயல் அல்ல: நாம் செய்யும் ஒவ்வொரு அற்பமான பிழை கூட மறைக்கப்பட்ட உளவியல் சக்தியால் ஏற்படுகிறது என்கிறார் ஃபிராய்டு. உங்கள் தோழி புதிய சேலை ஒன்றை அணிந்து வந்து ‘இது எப்படி இருக்கு?’ என்று கேட்கிறார். உங்கள் மனதில் ‘அப்படி ஒன்றும் பிரமாதமா இல்ல. சுமாராத்தான் இருக்கு’ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், தோழியிடம், ‘அழகாத்தான் இருக்கு’ என்று சொல்கிறீர்கள். உண்மையில் முன்னர் சொன்ன சுமார் என்பதுதான் உங்கள் மனதில் இருக்கும் சரியான பதிலாகும். அடுத்து சொன்ன ‘அழகாகத்தான் இருக்கு’ என்பது மேலோட்டமான வார்த்தை. மனதில் அடக்கப்பட்ட உணர்ச்சிகள்தான் முதலில் வார்த்தைகளாக வெளியே கசியும். நமது ஆழ்மனம் நேர்மையான எண்ணங்களை கொண்டிருக்கிறது. அதனால் உண்மை வெளியே வந்துவிடுகிறது.
வாய் தவறி பேசக் காரணம்: மனதில் அடக்கி வைத்திருக்கும் ரகசியங்கள் சில சமயங்களில் வார்த்தைகளாக வந்து விடும். சிலர் விரைவாக பேசும்போதும், பதற்றமாக, சோர்வாக, மன அழுத்தத்தில் இருக்கும்போதும் வார்த்தை சறுக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய அரசியல்வாதிகள் தினமும் ஒத்திகை பார்த்து விட்டுத்தான் பொதுக்கூட்டங்களில் பேச வருகிறார்கள். ஆனாலும் கூட அவர்களை அறியாமலேயே சில சமயங்களில் பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசி விடுகிறார்கள். அது ஆழ்மனதிலிருந்து வரும் வார்த்தையாகும்.
Freudian slip: ஏதோ ஒன்றை சொல்ல நினைத்து அதற்கு பதிலாக முற்றிலும் மாறுபட்ட ஒன்றை சொல்கிறார்கள். எழுதும்போது அல்லது தட்டச்சு செய்யும்போது கூட இந்த தவறு நேரலாம். ஆழ்மனதில் அடக்கப்பட்ட ஆசைகள் அல்லது எண்ணங்களின் வெளிப்பாடுதான் வாய் தவறி பேசக் காரணம். இதை Freudian slip என்கிறார்கள்.
மறதிக்குக் காரணம்: சில சமயம் நீண்ட நாள் கழித்து ஒருவரைப் பார்க்கும்போது அவரது பெயர் மறந்து விடும். சமையல் அறைக்குள் நுழைந்து, எந்தப் பொருளை எடுக்க வேண்டும் என்பது கூட மறந்துவிடும். பெயர் ஏன் மறந்து விடுகிறது என்றால் வேதனையான, சங்கடமான எண்ணத்துடன் அந்தப் பெயர் இணைக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட பெயர் மறந்து விடுகிறது.
ஒரு பொருளின் பெயர் மறந்து விடுகிறது என்றால் சம்பந்தப்பட்ட அந்தப் பணியை செய்ய நீங்கள் விரும்பவில்லை என்பதையே இது குறிக்கிறது. இந்த நேரத்தில் சமையல் செய்ய விரும்பவில்லை. ஆனால், கட்டாயத்தின் காரணமாக நீங்கள் செய்ய நேர்ந்தால் இப்படி மறக்கும்.
சோர்வடைந்த மனம் குறியீடுகள் மற்றும் செயல்கள் மூலம் தொடர்பு கொள்கிறது. சிலருக்கு அடிக்கடி வாட்ச் உடைந்து போகிறது என்றால் நேரம் காலம் பார்க்காமல் அவர் வேலை செய்பவர், காலத்தின் அழுத்தத்திலிருந்து தப்பிக்க அவரது வாட்ச்சை உடைக்கிறார் என்று சொல்லலாம். நமது ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு ஆழமான காரணம் இருக்கிறது என்பது உளவியலாளர் ஃபிராய்டின் கூற்றால் விளங்குகிறது.