

ஜெய் கார்னிக் விளைவு மற்றும் சமையலறை சுத்தம் பற்றிய ஆய்வு.
நீங்கள் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். உங்கள் சமயலறையில் அழுக்கான ஸ்பூன்கள், கட்டவிழ்த்த பாக்கெட்டுகள், காஸ் அடுப்பின் மீது வழிந்த ரஸம், குழம்பு, எண்ணைக்கறை படிந்த சமையல் மேடை, அழுக்கான காய்கறி போர்டு என்று விட்டுவைத்து எல்லாவற்றையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறீர்களா?
ஆனால் இந்த நினைவு உங்களை சோர்வுபடுத்தும். மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களின் படி சுத்தமாக வைக்கப்படாதது கார்டிசால் என்ற மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இது சோர்வை அதிகரித்து உங்கள் மனநிலையையும் பாதிக்கும்.
ஆனால் வேலை செய்து கொண்டிருக்கும்போதே உங்களால் சத்தமாக சமையலறையை வைப்பது என்பது பழக்கமானால் அது சுய டிசிப்ளீனை வளர்க்கும். குப்பையாக கிடக்கும் இடத்தைப் பார்த்தால் அது நம் வேலையை முழுதாக முடிக்காத நிலையையே உணர்த்துகிறது. உங்கள் மூளையில் அது பதிவாகிவிடும். நாம் முடித்த வேலைகளை விட முடிக்காத வேலைகள் மூளையில் சுறுசுறுப்பாக இருக்கும். இதைத்தான் ஆராய்ச்சியாளர்கள் ஜெய்கார்னிக் (Zeigarnik effect) என்கிறார்கள்.
அந்த காரியங்களை முடிக்காத வரையில் அவை மனதில் ஓடிக்கொண்டிருக்கும் இதனால் மூளையின் சக்தி குறையும் வாய்ப்பு ஏற்படும். சக்தி அதிகமாக விரயமாகும்.
ஒருவர் சாப்பிட்டவுடன் தட்டை கழுவி வைக்கிறார் என்றால் மூளை அந்த விஷயத்தை அவருக்குக் கட்டளையிடுகிறது என்று அர்த்தம். சமயலறையில் நாம் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. தண்ணீர் கொதிப்பது, காய் வதக்குவது, பிரெட் ஃப்ரை என்று பல வேலைகள் உள்ளன. ஆரோக்கிய மனோதத்துவம் என்பது தினப்படி நாம் உடனுக்குடன் செய்யும் விஷயங்கள்.
நமக்கு நல்ல பழக்க வழக்கங்களை வழங்குகின்றன. உடனுக்குடன் செயல்படுவதன் மூலம் நாம் நம் வேலைகளில் ஒரு தனித் திறமையுடன் விளங்க முடியும். கத்தியை கழுவுவது, சமையல் மேடையை உடனடியாக சுத்தப்படுத்துவது என்பது பழக்கமாகி உங்களுக்குள் ஒரு சுயகட்டுப்பாட்டை வளர்க்கும்.
உங்கள் வாழ்க்கையை மாற்றும் சமையலறை சுத்தம் பழக்கம்.
சமையலறை சுத்தம் என்பதில் ஆரம்பித்து அது மற்ற விஷயங்களிலும் ஒரு ஒழுங்கு முறையை ஏற்படுத்தும் உடனடியாக உங்களுக்கு வரும் ஈ மெயிலுக்கு பதில் தருவீர்கள், சாவிகளை அந்தந்த இடத்தில் வைப்பீர்கள், முடிக்காத ஃபைல்களை முடிப்பீர்கள். சமையலறையில் ஆரம்பித்த ஒழுங்குமுறை உங்கள் அனைத்து வேலைகளிலும் தொடரும்.
சமயலறை ஒழுங்கு என்பது கண்ணுக்கு தெரியக்கூடியது. ஆனால் உடனுக்குடன் சுத்தம் செய்வதால் எந்தெந்த பொருள் எங்கு உள்ளது போன்றவை தெளிவாகி சமையல் உங்களுக்கு சோர்வையே ஏற்படுத்தாது. எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் சக்தி வீணாகாது. இது மட்டுமல்லாமல் மறுநாளைய தினத்தையும் நீங்கள் நிம்மதியாக கழிக்கலாம். காலையில் எழுந்து சமயலறை சிங்கை சுத்தமாக இருப்பதை காண்பது சிறிய விஷயம் அன்று.
இன்றைய நாளில் நம் வேலையை சுத்தமாக முடித்தால் அது அமைதியான தடங்கல் இல்லாத மறுநாள் சாத்தியமாக்கிறது. நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு சமையலறையை அசுத்தமாக வைக்கிறீர்களோ அந்த அளவிற்கு மனதிற்கு சோர்வு ஏற்படும். ஏனென்றால் மூளையில் அந்த விஷயம் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும்.
இதில் நீங்கள் ஒவ்வொரு வேலையாக செய்து முடிக்கலாம். அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் மண் அடுப்பில் சமையல் செய்தார்கள். ஆனால் இரவில் அதை நன்றாக சாணி போட்டு மெழுக் கோலம் போட்டுவிட்டு சுத்தமாக வைத்து படுக்கப் செல்வார்கள். இதனால் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும் என்று கூறுவார்கள்.
அவர்கள் எந்த வேலை செய்யவும் அஞ்சியதில்லை. இன்று நவநாகரீக உலகில் பல வசதிகள் பெற்றிருக்கும் நாம் அதை உணர்ந்து சமயலறை சுத்தத்தையும், சுகாதாரத்தையும் கடைபிடித்தால் எந்த பிரச்னையையும் தீர்க்கக் கூடிய வலிமை பெறுவோம்.
ஆகவே அதை உடனுக்குடன் சுத்தம் செய்து வைத்திருப்பதால் நம் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டு நம்மை எந்த ஒரு வேலையையும் ஒரு ஒழுங்கு மனப்பான்மையோடு செய்ய வைக்கும் என்று மனோதத்துவமும் கூறுகிறது.
இந்த பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம், நீங்கள் தேவையற்ற மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, அதிக ஆற்றலுடனும் தெளிவான சிந்தனையுடனும் உங்கள் அன்றாட வேலைகளைச் செய்யும் மன உறுதியைப் பெறுவீர்கள்.