உயிர் காக்கும் நாயகர்களைப் போற்றுவோம்!

(ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினம்)
Dr. B.C.Roy
டாக்டர் பி.சி.ராய்

வ்வொரு வருடமும் ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. புகழ் பெற்ற மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராயின் பிறந்த நாளில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் பி.சி.ராய் எண்ணற்ற நபர்களுக்கு சேவை செய்வதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது நினைவாக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமாகும்.

மருத்துவர்கள் தின வரலாறு: டாக்டர் பிதான் சந்திரராய் மருத்துவம், கல்வி மற்றும் சமூகத் துறைகளில் சிறந்த பங்களிப்பு செய்து இந்திய மருத்துவ உலகில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தினார். பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்றவர். இந்தியாவின் மிகவும் பெருமைக்குரிய மருத்துவராக அங்கீகரிக்கப்பட்டவர். ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கினார். மருத்துவ வசதிகள் குறைந்த பகுதிகளில் மருத்துவமனைகளை ஏற்படுத்தி, மருத்துவக்கல்வி மற்றும் சிகிச்சை வசதிகளை வழங்குவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.

முதன் முதலில் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார். இதய நல சிகிச்சையில் புதிய வழிமுறைகளை உருவாக்கினார். 1962ல், ஜூலை 1 அன்று, தனது பிறந்த நாளிலேயே அவர் மறைந்தார். அவரது வீடு, அவரது மறைவிற்குப் பின் அவர் தாயார் காமினி தேவியின் பெயரில் ஒரு முதியோர் இல்லமாக மாறியது. 1961 பாரத் ரத்னா விருது வழங்கி அவரை நாடு கௌரவித்தது. அவரது நினைவைப் போற்றும் வண்ணம் 1976ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பி.சி ராய் தேசிய விருது வழங்கப்படுகிறது. அரசியல், அறிவியல், தத்துவம், இலக்கியம் மற்றும் கலை ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

2024 தேசிய மருத்துவர் தினத்தின் கருப்பொருள்: இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ‘குணப்படுத்தம் கைகள், அக்கறையுள்ள இதயங்கள்’ என்பதாகும். இந்தக் கருப்பொருள் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளிடம் கொண்டிருக்கும் இரக்கத்தையும் அர்ப்பணிப்பையும் வலியுறுத்துகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் கவனிப்பையும் வழங்குவதில் அவர்கள் வகிக்கும் பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை: இது உணவல்ல விஷம்! 
Dr. B.C.Roy

மருத்துவர்களின் மகத்துவம்: நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மீட்டெடுப்பதில் மருத்துவர்களின் அறிவும் நடைமுறை செயல்திறனும் மிகவும் முக்கியமானது. அவர்களின் நிபுணத்துவம், பச்சாதாபம், இரக்கம் ஆகியவை நோயாளிகளின் வாழ்க்கையில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. வெள்ளை அங்கி அணிந்து தன்னலம் இன்றி மற்றவர்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்கும் மாவீரர்களை கௌரவிக்கும் நாளாக ஜூலை 1 இருக்கிறது.

மருத்துவர்கள் வெள்ளை நிற அங்கிகள் அணிவதன் காரணம்: ஆரம்ப காலகட்டங்களில் மருத்துவப் பயிற்சியாளர்கள் கருப்பு நிற உடைகளையே அணிந்திருந்தார்கள். அவை சம்பிரதாயம் மற்றும் அமைதியுடன் தொடர்புடையதாக இருந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆன்டி செப்டிக் அறுவை சிகிச்சைகளின் முன்னோடியான டாக்டர் ஜோசப் லிஸ்டர் மருத்துவர்கள் வெள்ளை அங்கிகளை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏனென்றால், வெள்ளை அங்கி தூய்மை, சுகாதாரம் மற்றும் நேர்மறையான பிம்பத்தை வெளிப்படுத்த ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறது என அவர் கருதினார். எனவே, 1880 மற்றும் 90களில் இருந்து இது பரவலாக மருத்துவர்களால் கடைபிடிக்கப்பட்டு, வெள்ளை நிற அங்கிகளை அணிய ஆரம்பித்தனர். தற்போது பல நாடுகளில் மருத்துவர்கள் வெள்ளை நிற அங்கிகளை அணிவது வழக்கமாகி விட்டது.

தற்போது இந்திய மருத்துவ சங்கம், ஐக்கிய அமெரிக்க மருத்துவ சங்கம், பிரிட்டிஷ் மருத்துவ சபை போன்றவற்றின் விதிமுறைகளின்படி மருத்துவர்கள் வெள்ளை அங்கிகள் அணிய வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com