

உணர்ச்சிகளைத் தாண்டி வளரும் உறவு பலம்!
நம் நாட்டில் உள்ளதுபோல், பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் கூறிச் சென்ற அர்த்தம் பொதிந்த பழமொழிகள் பல உள்ளன. அவற்றை இன்றைய தலைமுறையினர் பின்பற்றியும் வருகின்றனர்.
அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த ஒன்று: "காதலில் விழுவது ரொம்ப சுலபம் ஆனால் காதலில் நீண்டு நிலைத்திருப்பது அவ்வளவு சுலபமல்ல" ("It is much easier to fall in love, than to stay in love"). இந்தப் பழமொழி காதலில் விழும்போது உண்டாகும் உற்சாகம் மற்றும் அந்த காதல் நிலைத்து நிற்கத் தேவையான உழைப்பு ஆகிய இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது.
காதல் ஆரம்ப நிலையில் இருக்கும்போது, எந்த முயற்சியுமின்றி, ஈர்ப்பு, உணர்ச்சி வேகம் மற்றும் புதிய அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இயற்கையாகவே வேரூன்றத் தொடங்கி விடுகிறது. காதல் வயப்பட்டவர்களின், கலாச்சாரப் பண்பாட்டுடன் இணைந்த ஞானம், வாழ்ந்து வந்த முறை ஆகியவை அப்படியே அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்படுகிறது.
அவர்கள், உணர்ச்சியின் வேகம் எவ்வாறு இயற்கையாக ஒரு வலுவான காதல் உருவாக உதவுகிறது என்பதை உற்று நோக்குகின்றனர். காதல் நிலைத்து நிற்க தேவைப்படும் பொறுமை, நிலைத்த தன்மையுடன் கூடிய தொடர்புகள் பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.
பலர் காதல் மற்றும் அதனைப் பின் தொடர்ந்து வரும் நிலைப்பாடுகளை சுலபமாகப் புரிந்துகொள்ள இந்தப் பழமொழியை புரட்டிப் பார்க்கின்றனர். தொடர்ந்து நிலைக்கும் உறவிற்கு உணர்ச்சிகள் மட்டும் போதாது. இரண்டு பக்கமும் புரிதல், முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு, பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவையும் இன்றியமையாதவை.
காலப் போக்கில், உண்மையான உறவில் தவறான புரிதல்கள், மாறிவரும் உணர்ச்சிகள், வெளியிலிருந்து வரும் அழுத்தங்கள் போன்றவை காதலிப்பவர்களின் இணைப்பின் வலிமையை சோதிப்பது போல் வந்து சேரும் என்றும் அதனை அவர்கள் சவாலாக ஏற்று எதிர்கொள்ள வேண்டும் என்றும் இப்பழமொழியின் பிற்பகுதி எச்சரிக்கிறது.
உணர்ச்சி வசப்பட்டு உருவான காதல், ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் மரியாதை, அன்பு, அர்ப்பணிப்புடன் புரியும் கவனிப்பு போன்றவற்றால் நீண்டு நிலைத்து நிற்கும் என்பதையும் இந்த பழமொழி எடுத்துரைக்கிறது.
மனக்கசப்பு உண்டாகும் நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடாமல் நம்பிக்கையோடு ஒருவரையொருவர் ஊக்குவித்து, குறையேதும் கூறாமல் அந்த நொடி நேரத்தைக் கடந்து விடுவதே காதலை வலுவிழந்து போகாமல் காப்பதற்கு உதவிபுரியும்.
வாழ்க்கையின் நெடுந்தூரப் பயணத்தில் எதிர்பாராத மாற்றங்கள், சவால்கள், உணர்ச்சிகளின் கொந்தளிப்பு, எதிர்பார்த்த ஒன்று நிறைவேறாமல் போதல் போன்ற சூழல்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இவற்றை சமாளிக்க மிகுந்த பொறுமையும் முயற்சியும் தேவை.
காதலின் ஆரம்பத்தில் ஒருவர் மீது மற்றவர்க்கு உண்டாகும் கவர்ச்சி மற்றும் ஆர்வம் மட்டுமே பிரதானமாக இருப்பதால் காதலில் விழுதல் சுலபமென கூறப்படுகிறது. காதல் வயப்பட்டவர்கள் தினமும் மற்றவருக்கு நேரம் ஒதுக்கி, முதிர்ச்சியும் விழிப்புணர்வும் கொண்ட மனோபாவத்துடன் கவனிப்பை செலுத்தி வாழ்வார்களானால் அவர்களிடயேயான உறவும் காதலும் நீண்டு நிலைக்கும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது எனலாம்.
காதல் என்பது ஆரம்பிக்கப்படும் ஒன்று மட்டுமல்ல, அது தினமும் கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டியது என்பதை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் உறவில் ஆரோக்கியமான புரிதலை ஏற்படுத்தி, மனக்கசப்புகளைக் களைந்து, மகிழ்ச்சியான மற்றும் நீடித்த பிணைப்பை உருவாக்கத் தேவையான முதிர்ச்சியான அணுகுமுறையை நீங்கள் அடைவீர்கள்.