

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கொரோனா காலத்திற்குப் பிறகு முழு வீச்சில் வேகமெடுக்க தொடங்கியது. கொரோனா முடிவுக்கு வந்த பிறகும் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நின்றபாடில்லை. பல இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது எதற்கெடுத்தாலும் ஆன்லைன் வகுப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.
கிராஃப்ட் செய்யவேண்டுமா? வரைய கற்றுக்கொள்ள வேண்டுமா? ஆன்லைன் பாட்டு கிளாஸ், குக்கரி கிளாஸ், யூடியூபில் அதிக வியூவர்ஸ் வேண்டுமா? என ஏகப்பட்ட வகுப்புகள் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்து, ஆயிரக்கணக்கானவர் களிடமிருந்து சிறு தொகையைப் பெற்று ஏமாற்றும் முறையும் மக்களை குறிவைத்து நடத்தப்படுகிறது.
வீட்டிலிருந்தே வேலை (Work from Home) என்று கூறி, அதற்குப் பயிற்சி அளிப்பதாக முன்பணம் பெற்று ஏமாற்றும் கும்பல்கள் சமூக ஊடகங்களில் அதிகம் இயங்குகின்றன. அரசு அதிகாரிகள் போலப் பேசி, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளதாகக் கூறி, அதை வங்கிக்கு அனுப்ப Processing Fee அல்லது QR Code ஸ்கேன் செய்யச் சொல்லி பணத்தை பறிக்கும் கும்பலும் உள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலியான வாக்குறுதிகள், போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை மற்றும் தரமற்ற கல்வியை வழங்கி பணம் பறிப்பது என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே மக்களாகிய நாம் தான் கல்வி நிறுவனத்தின் நம்பகத் தன்மையையும், பாடத்திட்டம் மற்றும் கட்டண அமைப்பையும் சரிபார்த்து, தள்ளுபடி சலுகைகளை கவனமாக அணுகி ஏமாறுவதைத் தவிர்க்கவேண்டும். அதற்கு முதலில் நிறுவனங்களின் நம்பகத் தன்மையை சரி பார்க்க வேண்டும். அவற்றின் பின்னணியை ஆராயவேண்டும்.
பயிற்சி நடத்தும் நிறுவனத்தின் மெயில் ஐடிி, போன் நம்பர் விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம். மெயில் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ பயிற்சி வகுப்பு குறித்து விசாரித்து தெரிந்து கொள்ளலாம். பாடம் நடத்துபவர்கள் யார், அவர்களுடைய அனுபவம் என்ன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். முதலில் ஒரு கட்டணமும், அட்மிஷனுக்கு பிறகு மறைமுக கட்டணங்களும் (Hidden charges) வசூலிக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
அதிக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி பணம் செலுத்த வேண்டாம். அதேபோல் அதிக விளம்பரங்களைப் பார்த்து ஏமாறவும் வேண்டாம். பணம் செலுத்துவதற்கு முன்பு அந்த நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை சேகரிப்பதுடன், அந்த நிறுவனத்தைப் பற்றிய கருத்துக்களை (reviews) இணையத்தில் படித்து தெரிந்து கொள்வதும் அவசியம். சரியான தளங்களை தேர்ந்தெடுத்து நன்கு விசாரித்து முறையாக கல்வியை தொடர்வதே பாதுகாப்பானது.
கல்வியியல் தொடர்பான படிப்புகளில் சேர்வதற்கு முன்பு UGC அல்லது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதேபோல் பணத்தைப் பெறுவதற்கு ஒரு போதும் QR Code ஸ்கேன் செய்யத் தேவை இல்லை. யாராவது ஸ்கேன் செய்யச் சொன்னால் அது நிச்சயம் மோசடியாகத்தான் இருக்கும். எனவே விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.