

பிரச்னைகளை நேருக்கு நேர் சந்திப்பது:
பிரச்னைகளை தவிர்க்காமல் அவற்றை நேருக்கு நேர் சந்திப்பது வலுவான மனநிலையை குறிக்கும். பிரச்னைகளில் இருந்து தப்பி ஓடாமல் மனஉறுதியுடன் அவற்றை எதிர்கொண்டு தீர்வு காண்பதே சிறப்பு. இது எதிர்மறை எண்ணங்களைக் குறைத்து ஆக்கப் பூர்வமான சிந்தனை மூலம் போராட்டங்களையும் சவால்களையும் வெற்றிக்கான படிகளாக மாற்ற உதவும். அமைதியான அணுகுமுறை, உறுதியான மனநிலை மற்றும் மாற்றி சிந்திப்பதன் மூலம் எந்த ஒரு பெரிய சிக்கலையும் நம்மால் எளிதில் தீர்க்க முடியும்.
பிறரின் விமர்சனத்தை புறந்தள்ளுவது:
மற்றவர்களுடைய விமர்சனத்தை புறந்தள்ளுவதும், அவர்களின் விமர்சனத்தை சக்தியாக மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பது நல்லது. பிறர் நம்மை விமர்சிப்பதைக் கண்டுகொள்ளாமல் நம் கடமைகளை சரிவர செய்வதில் கவனம் செலுத்தவேண்டும். ஆக்கபூர்வமான கருத்துகளாக இருந்தால் அதில் உள்ள நன்மைகளை ஏற்றுக்கொண்டு, தேவையற்ற எதிர்மறை கருத்துக்களைக் கடந்து செல்ல வேண்டும். விமர்சனத்தை தனிப்பட்ட அவமதிப்பாகக் கருதாமல், சுயமுன்னேற்றத்திற்கான வாய்ப்பாகக் கருத வலுவான மனநிலையைப் பெறலாம்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது:
எந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது என்பது அவற்றை ஒடுக்குவது அல்ல; மாறாக அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவதாகும். இது மற்றவர்களுடன் சிறந்த உறவை உருவாக்கவும், நம் மனநிலையை வலுவாக்கவும் உதவும். ஆழ்ந்த சுவாசம், தியானம் மற்றும் யோகா போன்ற நினைவாற்றல் பயிற்சிகள் மூலம் கோபம், மனஅழுத்தம் போன்ற உணர்வுகளை நம்மால் திறம்பட நிர்வகிக்க முடியும்.
அமைதி காப்பது:
மனமே மாமருந்து: அமைதியும் நிதானமும் தரும் ஆச்சரியமான மாற்றங்கள்! எவ்வளவு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் அமைதி காப்பது அந்த சூழ்நிலையை மாற்றி நம் வசம் கொண்டு வரும். இது பதட்டத்தைக் குறைத்து, தவறு செய்வதை தடுத்து, சரியான முடிவுகளை எடுக்க உதவும். பதற்றமான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் தவறாக இருக்கும். எனவே அம் மாதிரியான சமயங்களில் அமைதி காப்பது, தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நம் மன ஆற்றலை பெருக்கி வலுவான மனநிலையை உருவாக்கும். நெருக்கடியான சூழ்நிலைகளை நிதானமாகக் கையாண்டால் சுமுகமான தீர்வுகளைத்தேட முடியும்.
பொறுப்பாக செயல்படுவது:
வலுவான மனநிலையைப்பெற நமக்கு அளிக்கப்பட்ட கடமைகள், பணிகள் அல்லது முடிவுகளுக்கான விளைவுகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு, எந்த ஒரு வேலையையும் முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் பொறுப்பாக செயல்பட வேண்டும். தனிப்பட்ட வாழ்வில் குடும்ப பொறுப்பும், சமூக வாழ்வில் சட்டப் பொறுப்பும், பணியிடங்களில் கூட்டுப் பொறுப்பும் என நம் பொறுப்பின் தன்மைகள் மாறுபடும். அதற்கு ஏற்றவாறு பொறுப்பாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
எதற்கும் பிறரை குறை கூறாமல் இருப்பது:
பிறரை தூற்றுவதையும், குறை கூறுவதையும் தவிர்ப்பது மன அமைதிக்கும், நல்லுறவிற்கும் மட்டுமல்ல வலுவான மனநிலைக்கும் வழிவகுக்கும். பிறரை குறை கூறாமல் இருப்பது நேர்மையான மனப்பான்மை மற்றும் சிறந்த தனிமனித ஒழுக்கமாகும். இது நம் சுயவளர்ச்சியை மேம்படுத்தும். நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பிறரைக் காரணமாக சொல்லாமல், அந்தந்த சூழ்நிலைகளின் விளைவுகளுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். இதனால் நம் மீது நம்பகத் தன்மையும் நன்மதிப்பும் உயரும்.
போராடும் குணம்:
எந்த பிரச்னைகள் வந்தாலும் துவண்டுவிடாமல் கடைசிவரை போராடும் குணம் கொண்டு இருப்பது. வாழ்க்கையின் சவால்கள், தடைகள் மற்றும் தோல்விகளைக் கண்டு பயப்படாமல், விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சி செய்து இலக்கை அடையும் மன உறுதியே போராடும் குணமாகும். தோல்வியைக் கண்டு துவளாமல், அதை ஒரு கற்றல் வாய்ப்பாகக் கருதி விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராட வேண்டும். கடினமான சூழ்நிலைகளிலும் தளராமல் இருப்பது நம்மை சக்தி வாய்ந்தவர்களாக மாற்றிக்கொள்ளும் நேர்மறையான மனப்பான்மையை உருவாக்கும். இது வலுவான மனநிலையைப்பெற உதவும்.