

கடைகளில் கிடைக்கும் காஃபி பொடியில் சிகரி, வறுத்த கொட்டைகள், தானியங்கள், செயற்கை நிறமிகள் போன்ற கலப்படங்கள் அதிகரித்து, தென்னிந்திய ஃபில்டர் காஃபியின் தூய்மையும் நம் உடல்நலனும் ஆபத்துக்குள்ளாகின்றன.
செரிமானக் கோளாறுகள், ஒவ்வாமை, நச்சுத்தன்மை போன்ற பாதிப்புகள் குறித்து எச்சரித்து, தண்ணீர் சோதனை, விரல் சோதனை, அயோடின் சோதனை மூலம் வீட்டிலேயே கலப்படத்தை கண்டறியலாம் என கட்டுரை விளக்குகிறது.
காலை பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்கவும், வேலைப் பளுவிற்கு இடையே மன அழுத்தத்தைக் குறைக்கவும் நாம் நாடுவது ஒரு கோப்பை சுடச்சுட காஃபியைத்தான்.
‘தென்னிந்திய ஃபில்டர் காஃபி’க்கு உலகளவில் தனித்துவமான சுவையும் நறுமணமும் உண்டு. ஆனால், இன்று நாம் கடைகளில் பாக்கெட்டுகளிலோ அல்லது திறந்தவெளியிலோ வாங்கும் காஃபி பொடி உண்மையிலேயே தூய்மையானதுதானா? லாப வெறிக்காகவும், வணிக நோக்கத்திற்காகவும் காஃபி பொடியில் செய்யப்படும் கலப்படங்கள், நாம் தினமும் குடிக்கும் புத்துணர்ச்சி பானத்தை ஒரு மெதுவான நஞ்சாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.
காஃபி பொடியில் செய்யப்படும் முக்கிய கலப்படங்கள்:
சிகரி (Chicory): தென்னிந்திய ஃபில்டர் காஃபியில் தடிமனான பிடிமானம் மற்றும் கசப்புச் சுவைக்காக சிகரி தாவரத்தின் வேர்ப்பொடி சேர்க்கப்படுகிறது. சட்டப்படி 10% முதல் 30% வரை பாக்கெட்டில் குறிப்பிட்டுச் சேர்ப்பது அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதிக லாபத்திற்காக பாக்கெட்டில் குறிப்பிடாமல் 50%க்கும் அதிகமாகச் சேர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.
வறுத்த கொட்டைகளின் பொடி: புளியங்கொட்டை மற்றும் பேரீச்சம்பழக் கொட்டைகளை வறுத்து, பொடியாக்கி காஃபி தூளுடன் அதிகளவில் கலக்கிறார்கள்.
தானியங்கள்: பார்லி, கோதுமை, சோளம் மற்றும் பட்டாணி ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கிச் சேர்ப்பதன் மூலம் காஃபி பொடியின் எடை அதிகரிக்கப்படுகிறது.
செயற்கை நிறமிகள் மற்றும் கேரமல்: கலப்படம் செய்யப்பட்ட பொடிக்கு அடர் பழுப்பு நிறத்தையும், காஃபி போன்ற மிளிரும் தன்மையையும் தர ‘கேரமல்’ மற்றும் தீங்கு விளைவிக்கும் நிலக்கரி தார் சாயங்கள் சேர்க்கப்படுகின்றன.
கலப்படத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்;
செரிமானக் கோளாறுகள்: புளிங்கொட்டை மற்றும் தானியக் கலப்படங்கள் வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.
ஒவ்வாமை: சிகரி அளவுக்கு அதிகமாக சேரும்போது சிலருக்கு ஒவ்வாமை, வயிற்றுப் பிடிப்பு மற்றும் குடல் அழற்சியை உருவாக்கலாம்.
நச்சுத்தன்மை: செயற்கை நிறமிகள் மற்றும் நிலக்கரி தார் சாயங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல் பாட்டைப் பாதிப்பதோடு, நீண்டகால அடிப்படையில் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடியவை.
வீட்டிலேயே கண்டறியும் எளிய சோதனைகள்;
அ) தண்ணீர் சோதனை (Glass Water Test): ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான நீரைக் எடுத்துக்கொண்டு, அதன் மேற்பரப்பில் ஒரு கரண்டி காஃபி பொடியைத் தூவ வேண்டும். தூய்மையான காஃபி: பொடி நீரில் மிதக்கும், உடனடியாகக் கரையாது.
சிகரி அல்லது கொட்டைப் பொடி கலந்திருந்தால், அவை உடனடியாக நீரில் மூழ்கி, தண்ணீர் அடர் பழுப்பு/சிவப்பு நிறமாக மாறும்.
ஆ) விரல் தொடு உணர்வுச் சோதனை: சிறிது காஃபி பொடியை விரல்களுக்கு இடையே வைத்துத் தேய்த்துப் பார்க்கவேண்டும். தூய்மையான காஃபி பொடி மிருதுவாகவும், தனித்தனித் துகள்களாகவும் இருக்கும். சிகரி அல்லது சர்க்கரைப் பாகு (Caramel) கலந்திருந்தால், விரல்களில் பிசுபிசுப்புத் தன்மையையும் ஈரப்பதத்தையும் உணரமுடியும்.
இ) அயோடின் சோதனை: சிறிதளவு காஃபி பொடியை நீரில் கொதிக்கவைத்து ஆறவைத்து, அதில் சில துளிகள் அயோடின் கரைசலைச் சேர்க்க வேண்டும். அது நீல நிறமாக மாறினால், அதில் கோதுமை அல்லது பார்லி போன்ற தானியத் தூள் கலக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தலாம்.
நுகர்வோர் விழிப்புணர்வும் தீர்வுகளும்;
சான்றிதழ் சரிபார்த்தல்: FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்) முத்திரை மற்றும் அனுமதி எண் கொண்ட பாக்கெட்டுகளை மட்டுமே வாங்க வேண்டும்.
விவரங்களை படித்தல்: பாக்கெட்டின் பின்புறம் உள்ள பொருட்களின் பட்டியலில் (Ingredients) “100% Pure Coffee” உள்ளதா அல்லது சிகரி கலக்கப்பட்ட “Blended Coffee” தானா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
முடிந்தவரை நம்பிக்கையான கடைகளில் காஃபி கொட்டைகளை (Coffee Beans) நேரடியாக வாங்கி, நமது கண் முன்னேயே பொடி செய்து பயன்படுத்துவது மிகச்சிறந்த பாதுகாப்பாகும்.
“உணவே மருந்து” என்ற நில மாறி, இன்றைக்கு நாம் அருந்தும் பானங்களில் கூட கலப்படம் நிறைந்திருப்பது வேதனையான ஒன்று. அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனைகளை தீவிரப் படுத்தினாலும், நுகர்வோரின் விழிப்புணர்வே இதற்கான நிரந்தரத் தீர்வாகும். தூய்மையான காஃபி பொடியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் நல்ஆரோக்கியத்தையும், உண்மையான காஃபியின் சுவையையும் நாம் பெறமுடியும்.