
சீத்தா பழத்தில் விதை அதிகம் இருப்பதால் பலரும் இதை சாப்பிடத் தயங்குவர். முதன் முதலில் சீத்தா மரம் மேற்கு இந்தியத் தீவுகளில்தான் வளர்க்கப்பட்டன. இந்தப் பழத்தின் சுவையும், மணமும் எல்லோரையும் கவரவே இன்று உலகில் எல்லா இடங்களிலும் சீத்தா பழ மரம் வளர்க்கப்படுகிறது. இப்பழத்தின் தோல், விதை, இலை, பட்டை அனைத்துமே பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இப்பழம் ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்றழைக்கப்படுகிறது. 'கஸ்டர்ட்' என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இப்பழத்தில் சம அளவு சுக்ரோஸீம், குளுக்கோஸும் நிறைந்துள்ளதால் நல்ல இனிப்பு சுவையைத் தருகிறது. சீத்தா பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து அதிகம் உள்ளது. நீர்ச்சத்தும் அதிகம். இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் இப்பழத்தில் அடங்கியுள்ளன.
இதன் விதைகளைப் பொடித்து பாசிப்பயறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர, முடி மிருதுவாகவும், பேன்களும் வராது. சீத்தா பழ விதைகளை பொடித்து கடலை மாவு, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ சருமம் பளிச்சென்று இருக்கும்.
வெந்தயப் பொடி, பாசிப் பயறு மாவு, சீதா பழ விதைப் பொடி கலந்து இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் தலையில் தேய்த்து ஊறியதும் முடியை அலச தலை குளிர்ச்சி பெறும். முடி உதிர்வும் நிற்கும். இது தலைக்கும், மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீத்தா பழ இலைகளை அரைத்து பருக்களின் மீது பூச புண்கள் ஆறும். சீத்தா பழ இலை கஷாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. சீத்தா பழம் சாப்பிட கருச்சிதைவு ஏற்படாது. மேனியை பளபளப்பாக்கும். இப்பழத்தை சாப்பிட, இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் உறுதியாகும்.
தினமும் இரவில் ஒரு சீத்தா பழம் சாப்பிட, நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சீர்படுத்தும் குணம் உண்டு. அதோடு இந்த தாதுப் பொருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியவை. இப்படிப் பல நன்மைகள் தரும் சீத்தா பழத்தை உண்டு உடல் நலம் காப்போம்.